ஆமதாபாத்:குஜராத்தில், பஞ்சாயத்து தேர்தலில் தோற்றதால், ஆத்திரம் அடைந்த நபர், கிராம மக்கள், தனக்கு ஓட்டுப் போட்டனரா என்பதை தெரிந்து கொள்வதற்காக, கொதிக்கும் எண்ணெய்க்குள், அவர்களின் கைகளை விட வைத்த, அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தில், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, அவரை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையை, எதிர்க்கட்சியினர் கூட, பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அவரின் இமேஜுக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையிலான, சில நடவடிக்கைகளில், அங்குள்ள, சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சபர்கந்தா மாவட்டத்தில், தேராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு, சமீபத்தில், பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இதில், கிரிஷ் பார்மர் என்பவர் போட்டியிட்டார். இவர், அந்த கிராமத்தில், செல்வாக்கு பெற்றவர்.இதனால், தனக்கு தான், ஓட்டுப் போட வேண்டும் என, கிராம மக்களுக்கு, மிரட்டல் விடுத்திருந்தார். தேர்தல் முடிவு, அவர், எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்து விட்டது. தேர்தலில், அவர், தோல்வி அடைந்தார்.
ஆத்திரமடைந்த கிரிஷ், தனக்கு ஓட்டளித்திருக்க மாட்டார்கள் என, சந்தேகப்பட்ட சிலரை, இரண்டு நாட்களுக்கு முன், அழைத்தார். அவர்களிடம்,"நீங்கள், எனக்குத் தான், ஓட்டளித்தீர்களா என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனக்கு, நீங்கள் ஓட்டளித்தது உண்மை என்றால், அதை நிரூபித்துக் காட்ட வேண்டும்' என்றார்.
பின், நன்றாக கொதிக்க வைத்த எண்ணெய் சட்டியை எடுத்து வந்து, அவர்கள் அனைவரையும், அந்த எண்ணெய்க்குள் கையை விட்டு, தங்களை நிரூபிக்க வேண்டும், என, மிரட்டல் விடுத்தார். உயிருக்கு பயந்த, அந்த அப்பாவி கிராம மக்கள், வேறு வழியின்றி, கொதிக்கும் எண்ணெய்க்குள் கையை விட்டனர்.இதில், 15 பேரின், கை விரல்களில், கொப்புளங்கள் ஏற்பட்டன. அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, போலீசார், விசாரணை நடத்தினர்.ஆனால், உயிருக்கு பயந்து, கிரிஷ் பார்மருக்கு எதிராக, புகார் கொடுக்க,எவரும் முன்வரவில்லை. இருந்தாலும், போலீசார், கிரிஷ் பார்மரை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.