ராமநாதபுரம்: கோடை வருமுன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில், மீண்டும் 10 மணி நேர மின்தடை துவங்கிவிட்டது. அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பொதுத்தேர்வை சந்திக்க உள்ள மாணவர்கள் படிக்க முடியாமல், தேர்ச்சி விகிதம் பாதிக்கும், என்று அச்சத்தில் உள்ளனர். சில நாட்களாக குறைந்திருந்த மின்தடை நேரம் நேற்று முதல் மீண்டும் அதிகரித்து 10 மணி நேரம் என்ற அளவில் உள்ளது. நேற்று காலை 6-9, பகல் 12-3, மாலை 6-7, இரவு 9-10, நள்ளிரவில் மற்றும் அதிகாலையில் ஒரு மணி நேரம் என 10 மணி நேர மின்தடை செய்யப்படுகிறது. பொதுத்தேர்வை சந்திக்க உள்ள, மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இதுகுறித்து இவர்கள், பெற்றோரின் குமறல்:கே.இந்துமதி (ஏ.வி.எம். மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்): பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளேன். மின்தடையால் இரவிலும், அதிகாலையிலும் படிக்க முடியவில்லை. செய்முறை தேர்விலும பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாலை நேரமின்தடையால் "கோச்சிங்' வகுப்புகளும் தடைப்பட்டு, பாடங்களை படிக்க முடியாமல் மதிப்பெண் குறையுமோ என்ற அச்சமாக உள்ளது. காலைநேர மின்தடையால் பள்ளிக்கு கிளம்புவதிலும் தாமதம் ஏற்பட்டு பதட்டத்துடன் பள்ளிக்கு செல்வதால், பாடங்களை கவனிக்க முடியாமல் கவனச்சிதறல் ஏற்படுகிறது. கே.சரஸ்வரதி (பெற்றோர், ராமநாதபுரம்): எனது மகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளார். மின்தடையால் காலையில் பம்ப்செட் முதல் மிக்சியில் சட்னி அரைப்பது வரை தாமதகிறது. பிள்ளைகளை பள்ளிக்கு சரியான நேரத்திற்கு அனுப்பமுடியாமல் சிரமப்படுகிறோம். தேர்வு நேரத்தில் காய்ச்சலோ, உடல்நிலை பாதிப்போ வந்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆனால், மின்தடையால் மாணவர்கள் உரிய நேரத்தில் சாப்பிட முடியாமலும், இரவில் கொசுக்கடியிலும், உடல்நிலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வந்தவுடன் மின்தடை ஏற்படுவதால் இரவில் 8-9 மணி வரை மட்டுமே படிக்க முடிகிறது. சராசரி மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும்.ஜி.வி.காயத்ரி, சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி: பரமக்குடியில் காலை 6-8, மதியம் 12-3, மாலை 6-8 மணி, இரவு 10-11 என மின்வெட்டு அதிகரித்து, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்க வேண்டியுள்ளது. மாலையில் "டியூஷன்' செல்ல முடியவில்லை. வீட்டில் முடிந்தவரை நாமாகவே புரிந்து கொண்டு படிக்க வேண்டியுள்ளது. எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், இரவில் நீண்ட நேரம் தூங்காமல் உடல் நிலையில் பிரச்னைகள் ஏற்படுகிறது. காலை, இரவில் மின்தடை இல்லாமல் இருந்தால் நல்லது.ஆர்.மீரா, பெற்றோர், பரமக்குடி: எனது மகள் பிளஸ் 2 படித்து வரும் நிலையில், அடிக்கடி ஏற்படும் மின்தடையால் "சார்ஜர்' விளக்கில் சார்ஜ் குறைந்து வெளிச்சம் மங்கி விடுகிறது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதால் மாணவ, மாணவிகளுக்கு கண் சம்பந்தமான பிரச்னைகள் பெருமளவில் வர துவங்கியுள்ளது.எம்.சவுமியா, 10ம் வகுப்பு, இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி, கீழக்கரை:பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்ட பாடத்தை குறிப்பிட்ட நேரத்தில் படிக்க முடியவில்லை. பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும், மின்வெட்டால், மதிப்பெண்ணில் "வெட்டு' விழுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.