திருச்சி: ""இலங்கை தமிழருக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். அவர்களை காக்கும் பெரும் பொறுப்பை, நாம் ஏற்றிருக்கிறோம்,'' என, திருச்சியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
திருச்சி, பொன்மலை, "ஜி' கார்னரில், மாவட்ட, தி.மு.க., சார்பில், லோக்சபா தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:
கடமை, கண்ணியம் உங்களிடத்தில் இருக்கிறது. கட்டுப்பாடு மட்டும் குறைவாக உள்ளது. அதையும் வளர்த்தால், யாராலும், நம்மை அசைக்க முடியாது. அதை பின்பற்ற வேண்டும். தி.மு.க., பெரும் தோல்வியடைந்த பிறகும், நேரு உள்ளிட்ட கட்சி முன்னோடிகளின் குடும்பம் குலைநடுங்கும் வகையில், படாதபாடு படுத்துகின்றனர்.
ஆட்சிக்கு வந்துவிட்டோம். ஆட்சியை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வராமல் இருக்க, சிறையில் அடைக்கின்றனர். தி.மு.க.,வினரை, குற்றப்பரம்பரை சட்டம் போல நடத்துகின்றனர்.
வீரபாண்டி ஆறுமுகத்தை, ஐந்து மாதத்தில், ஆறு சிறைகளுக்கு மாற்றினர். அதனால், வீரபாண்டியை பறிகொடுத்தேன். பல வீரபாண்டி ஆறுமுகத்தை அழித்து, தி.மு.க.,வை புல் முளைக்காத ஒன்றாக மாற்ற, ஒரு கூட்டம், பின்னால் இருந்து முடுக்கி விடுகிறது. அதன் ஆலோசனையை கேட்டு, இந்த ஆட்சி நடக்கிறது.
அண்ணாதுரையின் தம்பியான நான், பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் கெண்டவன் இல்லை. ஜெயலலிதாவை, நீதிமன்றங்கள் கண்டிக்கின்றன. அரசு வக்கீல்கள்களிடம், நீதிபதிகள், தங்களது கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.
புதிய தலைமை செயலகம் திறந்து, நான்கு மாதம் ஆட்சி நடந்த நிலையில், ஆட்சி மாறியது. இது, தமிழக மக்கள் செய்த தவறு. நானும் செய்த தவறு. உங்களை பற்றி நான் சரியாக புரிந்து கொள்வில்லை. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, பெங்களூருவில் நடக்கிறது. 350 முறைக்கு மேல் தவணை வாங்கிவிட்டார்.
பெங்களூரு வழக்கு விரைவில் முடியும். அது முடிந்தபின், உங்களுக்கு நல்ல பொழுது விடியும். ஒன்றை நீங்கள் மறந்துவிடக்கூடாது. தமிழக தமிழர்கள் குறித்து கவலைப்படும் வேளையில், இலங்கை தமிழர் கவலைகள் குறித்து, உலகம் முழுவதும் தெரியப்படுத்தி வருகிறோம். நம்மை, இலங்கை தமிழர்களின் விரோதிகள் போல் காட்ட முயல்கின்றனர்.
சிங்கள அரசுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கிறோம். போர் நடக்கும்போது, நாம் இலங்கைக்கு ஆதரவாக இல்லை என்கின்றனர். இவர்கள், கடற்கரையில் நின்று, துப்பாக்கி ஏந்தி, இலங்கை போராட்டத்தில் பங்கேற்றவர் போல் பேசுகின்றனர்.
இலங்கை தமிழர், சதையும், எலும்புமாக யாழ்ப்பாண வீதிகளில் சிதறிக்கிடக்கும் நிலையில், அவர்களது மொழி, மொழி உணர்வையும் கொல்கின்றனர். இலங்கையில், கிளிநொச்சி உள்பட, 99 தமிழ் நகரங்களின் பெயர்களை, சிங்கள மொழிக்கு மாற்றியுள்ளனர். இதுபற்றி, பிரதமர் மன்மோகன், சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். கவனிக்கிறோம் என்கின்றனர். கவனிக்கிறார்களா அல்லது நாம் கவனிக்க வேண்டுமா என்பதுக்கு விடை விரைவில் கிடைக்கும்.
விரைவில், இலங்கை தமிழர் பிரச்னைக்காக மிகப்பெரிய சர்வதேச மாநாடு நடக்க உள்ளது. இதில், சர்வதேசங்களும் பங்கேற்கின்றன. அதில், டெசோ மாநாட்டு தீர்மானங்களை முன்வைப்போம். இலங்கை தமிழருக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டவர்கள்.
அவர்களை காக்கும் பெரும் பொறுப்பை, நாம் ஏற்றிருக்கிறோம். கடந்த கால சம்பவங்களை நான் விவரிக்க தேவையில்லை. அது ஏன் என உங்களுக்கு தெரியும். நம்மிடையே கட்டுப்பாடு, ஒற்றுமை இல்லாத காரணத்தால், அது நடந்தது. சுதந்திரத்தை இழந்தால், மீண்டும் போராடி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.