மதுரை: மதுரையின் பழம்பெருமையை விளக்கும் வகையில், "மாமதுரையை போற்றுவோம்' விழா இன்று (பிப்.,8) துவங்கி பிப்., 10 வரை நடக்கிறது.
இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை. ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
"பதியெழுவறியா பழங்குடி மூதூர்' என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? தற்போதைய பழமொழியில் கூறப்படும் "மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது' என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், "அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில் எழுவர்,' என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது.
மதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், "அங்காடி வீதிகள்' எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் "நாளங்காடி' எனவும், மாலையில் கூடும் வீதிகள், "அல்லங்காடி' எனப்பட்டன. "மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக' மதுரைக் காஞ்சி கூறுகிறது. இப்போதைய தெருக்களில் நடக்கவே முடியவில்லை. ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மதுரையின் பெருமைகளை விளக்கும் வகையில் மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சி இன்று துவங்கி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள சமணர் படுகை அருகே தீபம் ஏற்றப்பட்டது. இங்குள்ள கி.மு.,3ம் நூற்றாண்டு கல்வெட்டில், "மதிரை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, மதுரையை பற்றி குறிப்பிடும் மிகவும் பழமையான கல்வெட்டாகும். இந்த தீப ஓட்டத்தை, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் துவக்கி வைத்தார். அதேநேரம், சமணர் படுகைகள் உள்ள, கீழக்குயில்குடியில் ராமசாமி, தென்பரங்குன்றத்தில் முத்தையா, குன்னத்தூரில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அருண்சுந்தர் தயாளன், யானைமலையில் தமிழிசை அறிஞர் மம்முது ஆகியோர் தீபஓட்டத்தை துவக்கி வைத்தனர். தீபத்தை ஏந்தி வந்தவர்கள், மதுரை யானைக்கல் அருகே வைகை ஆற்றில் உள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். இன்று காலை 8.30 மணிக்கு, மீனாட்சி அம்மன் கோயில், செயின்ட் மேரீஸ் சர்ச், கோரிப்பாளையம் தர்கா ஆகிய இடங்களில் இருந்தும் தீபங்கள் கொண்டு வரப்பட்டு, தமுக்கம் மைதானத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்னிசை அரங்கம், நடன, நாட்டிய அரங்கங்கள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து தொன்மையை போற்றுவோம் மற்றும் வைகையைப் போற்றுவோம் நிகழ்ச்சிகளும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எல்லாம் ஓகே......ஆனா....................சுகாதாரத்துல மதுரைய படு கேவலமா வச்சிருக்காங்களே..................எங்க பாத்தாலும் பேப்பர் கேரி பேக்ஸ் குப்பையா ...............சிதறி கிடக்குது ...........பஸ் ஸ்டாண்டு பக்கம் எங்குட்டு போனாலும் மூத்திர வாடை....தாங்க முடியல்ல ..................சுத்தம்னு பாத்தா ....செனட்டர் ஆப் சென்னை சிட்டியும், பெங்களூரும் ஓரளவு பரவா இல்ல.........................

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.