துபாய்:துபாயில், தமிழக மீனவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு குறித்து, ஐக்கிய அரபு எமிரேட் அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பக்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பலுக்கு, எரிபொருள் சப்ளை செய்ய "ரபானாக்' என்ற அமெரிக்க கப்பல், துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த எண்ணெய் கப்பலை நோக்கி வந்த படகு மீது, அமெரிக்க மாலுமிகள் நேற்று முன்தினம் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ராமநாதபுரம் மாவட்டம், தோப்பு வலசை களிமண்குண்டைச் சேர்ந்த சேகர் பலியானார். ராமேஸ்வரத்தில் உள்ள கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சேர்ந்த முத்து கண்ணன், முருகன் ஆகியோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து, ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில், துபாயில் உள்ள இந்திய தூதர் லோகேஷிடம், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்த அறிக்கையை அளிக்கும்படி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கேட்டுள்ளார்.
துபாயிலிருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள ஜபெல் அலி என்ற இடத்தில் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் விடுத்த எச்சரிக்கையை மீறி, படகு வந்ததால் தான் சுட்டோம்' என, அமெரிக்க மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக மீனவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு குறித்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனிடமும், வெளியுறவு அமைச்சகத்திடமும், இந்திய தூதரகம்
விளக்கம் கேட்டுள்ளது.
அமெரிக்க தூதர் வருத்தம்:துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர்கள் பலியான சம்பவத்துக்கு டில்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பாவெல், வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாயிடம் வருத்தம் தெரிவித்தார். "இச்சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும்' என நான்சி உறுதியளித்தார்.
துரதிருஷ்டவசமானது:
மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இது குறித்து குறிப்பிடுகையில், "தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட் வழக்கு பதிவு செய்து அந்த நாட்டு சட்டப்படி விசாரித்து வருவதாக, துபாயில் உள்ள இந்திய தூதர் லோகேஷ் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அமெரிக்காவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறேன்' என்றார்.
முரண்பாடு:
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர்களை சந்தித்து பேசிய இந்திய தூதர் லோகேஷ் குறிப்பிடுகையில், "அமெரிக்க கப்பல் மாலுமிகள் தங்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடவில்லை. திடீரென சுட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்' என்றார். ஆனால், அமெரிக்க மாலுமிகள், இந்திய மீனவர்கள் இருந்த கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
ஈரான் கண்டனம்:வளைகுடா பகுதியில் வெளிநாட்டு படைகள் முகாமிட்டிருப்பது இந்த பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக, ஈரான் வெளியுறவு அமைச்சக அதிகாரி ரமீன் மெமான் பராஸ்ட் தெரிவித்துள்ளார். "இந்திய மீனவர்கள் மீது அமெரிக்க கப்பல் ஊழியர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது கண்டனத்துக்கு உரியது. ஈரானை ஆதரிக்கும் நாடுகளை இதே போன்ற சம்பவங்கள் மூலம் அமெரிக்கா அச்சுறுத்தி பணியவைக்க பார்க்கிறது. வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் இப்பகுதியில் வெளிநாட்டு படைகளை தவிர்க்கலாம்' என, தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
துபாயில் வைத்து அமெரிக்க் கடற்படையினர் கையால் உயிரிழை இழந்துள்ளார் ஒரு தமி்ழ்நாட்டுத் தமிழர். மீன் பிடிக்கப் போன அவரை குருவி சுடுவது போல சுட்டு விட்டு, படு சாதாரணமான முறையில் இந்த விவகாரம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இந்திய அரசும் இந்த சம்பவத்தில் படு கவனமாக பேசி வருகிறது. வன்மையாக கண்டிக்கிறோம் என்று ஒரு வார்த்தை கூட இந்திய அரசின் வாயிலிருந்து வரவில்லை. கண்டனத்துக்குரியது என்று சொல்லத் தோன்றவில்லை. எதிர்க்கத் தோன்றவில்லை. ஒருவேளை இதுவே ஒரு மலையாளி மீனவராகவோ அல்லது குஜராத்தி மீனவராகவோ அல்லது வங்காலி மீனவராகவோ இருந்திருந்தால் நிச்சயம் இந்தியாவின் குரல் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அது சரி, பக்கத்து சுண்டைக்காய் நாடான இலங்கையின் செயலையே கண்டிக்காத இந்திய அரசு, அமெரிக்காவையா கண்டிக்கப் போகிறது. இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ... தமிழனின் உயிர் அவ்வளவு சாதாரணமாகி விட்டது...
அந்நியர்களின் காசுக்காக, அவர்கள் போடும் எலும்பு துண்டுக்காக, அவர்களுக்கு அடிமைகள் போல் வேலை செய்வது மட்டுமல்லாமல் இப்போது தங்கள் உயிரையும் மாக்க வேண்டியுள்ளது. இவர்களை வேலைக்கு அமர்தியவ்ர்கள், இவர்களுடன் சேர்ந்து இருந்த அந்நாட்டு கார்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி இந்தியாவில் எவனும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எதர்கெடுத்தாலும் இந்திய அரசுகளின் மீதே பாரத்தை போட்டுவிட்டு ஒதுங்கிகொள்கிறார்கள். இவர்கள் எதற்காக அங்கு சென்றார்கள், இங்கு அரசுகளிடம் பணமில்லையா. கருணாநிதி குடும்பம் ஏமாற்றி, ஆக்கிரமித்து வைத்துள்ள சொத்துக்களை விற்றாலே போதும். தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு வருடங்களாவது வேலை கொடுக்க முடியும்.
தமிழன் எங்கே போனாலும் அடி வாங்குவான்.. நம்ம ராசி அப்படி.நம்மள சாகடிக்க நம்ம நாடே ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் கொடுக்கும்போது.அடுத்த நாட்டு ராணுவம் சுட்டு தள்ள சொல்லியா தரனும்... இத்தாலி காரன் சுட்டு துப்பாக்கி குழாய் லிருந்து வரும் புகை அடங்கல.. அமெரிக்கன் சுட்டுட்டான். அடுத்து? அடுத்து என்ன அடுத்து என்ன ஜெர்மனி தான்...
இங்கு ஏன் கருத்துகள் நாம் எழுதவில்லை? என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.. அனைவரும் அரசியல் தலைவர்கள் செய்திக்கு காட்டும் ஆர்வத்தை, நம் மீது நாம் காட்டுவதில்லை.. இதுதான், அரசியல்வாதிகளின் உள்ளூர் வெற்றி, அடுத்த இனத்தினரின் வெளிநாட்டு வெற்றி.. எங்கு சென்றாலும் தமிழன் வெறும் ஊறுகாய் என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். வளைகுடா நாடுகள் ஒன்றாக சேர்ந்து இல்லை, அது அவர்கள் செய்த தவறு, பலியானது தமிழர்கள், நாம் செய்த செய்யும் தவறு வடிகட்டிய "சுயநலம்", "நான் நல்லா இருந்தா போதும்" என்ற சுயநலம் - பிறகு எப்படி நம் அரசியல் வாதிகள் மனதில் இருக்கும் பொதுநலம். இன்னும் சில நாளில் இதை மறந்துவிடுவோம். உலக அரங்கில் எப்படி சீனாவை கண்டு அமெரிக்கா அஞ்சுகிறதோ, அதே போல் நாம் நம்மை பலபடுத்தி வாழ்திருந்தால், தமிழர்கள் என்ன, ஒவ்வொரு இந்தியனும் கர்வத்துடன் உலகத்தின் எந்த பகுதிக்கும் பயமில்லாமல் செல்லலாம்.தலையெழுத்து.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.