முந்தைய தி.மு.க., ஆட்சிக் காலத்தில், தொழிற்துறை ஒதுக்கீட்டின் கீழ், "லெட்டர் பேடு' கம்பெனிகள் கை நீட்டிய மாணவர்களுக்கு, "சீட்' வழங்கப்பட்டது, அரசின் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது. விதிமுறைகளை மீறி, 400 மாணவர் வரை, அண்ணா பல்கலை கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர் என்ற, "திடுக்' தகவலும் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலையின் கீழ், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி, கட்டடக் கலைதொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டையில் எம்.ஐ.டி., கல்லூரி என, நான்கு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தகல்லூரிகளில், 2,000 இடங்கள் உள்ளன.
தொழில் துறை ஒதுக்கீடு:இந்த கல்லூரிகளில், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழிற்கல்வி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் பொது சேர்க்கை ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ், கலந்தாய்வு சேர்க்கை நடைபெறுகின்றன. இந்தப் பட்டியலில் சேராத ஒரு பிரிவு, தொழில் துறை ஒதுக்கீடு.தொழில் துறையும், அண்ணா பல்கலையும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, பெரிய தொழில் நிறுவனங்கள், பெரிய தொகையை அண்ணா பல்கலையில் முன்கூட்டியே செலுத்தி, அதன் மூலம், திறமையான மாணவர்களை அண்ணா பல்கலையில் படிக்க வைத்து,
பின்னாளில் அவர்களை தங்கள் நிறுவனத்தில் வேலையில் அமர்த்த, வழி வகை செய்யப்பட்டுள்ளன. இதற்காக, ஒவ்வொரு பாடப் பிரிவுகளில் உள்ள மொத்த இடங்களில் (கவுன்சிலிங் இடங்கள்), 4 சதவீதம், இத்துறையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவின் கீழ், எத்தனை மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர் என்ற
விவரத்தை, பல்கலை நிர்வாகம்வெளியிடுவதில்லை.
அமைச்சர் குற்றச்சாட்டு:இதை
பயன்படுத்தி, முந்தைய தி.மு.க., ஆட்சிக் காலத்தில், அதிகமான மாணவ,
மாணவியர், அண்ணா பல்கலை கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட விஷயம், அ.தி.மு.க.,
ஆட்சிக்கு வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், ""தி.மு.க., ஆட்சியில், 300 மாணவ, மாணவியர், முறைகேடாக, விதிமுறைகளை மீறி, அண்ணா பல்கலை கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். இதைப் பற்றி விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
விசாரணை தீவிரம்:இதன் தொடர்ச்சியாகத் தான், தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், அண்ணா பல்கலையில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக மாணவர் சேர்க்கையில், பணம் விளையாடியிருக்கலாம் என்பதால், இதில் யார் யார் தலையீடு இருக்கிறது; எந்தெந்த நிறுவனங்கள் சார்பில் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர்
Advertisement
என்ற விவரங்களை எல்லாம், தோண்டி துருவ ஆரம்பித்துள்ளனர்.மேலும், அண்ணா பல்கலையில், விசாரணைக்கு என, தனி கமிட்டி அமைத்து, விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
நடவடிக்கை நிச்சயம்:தி.மு.க.,
ஆட்சியில், உயர்கல்வி அமைச்சருக்கு நெருக்கமாக இருந்த ஒருவர், "லெட்டர்
பேடு' நிறுவனங்களுக்கெல்லாம், கையெழுத்து போட்டுக் கொடுத்து, "சீட்' வாங்கி
கொடுத்திருப்பது, அரசின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இப்படி,
400 மாணவர்கள் வரை சேர்த்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அதன் முடிவில் தான்,முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது, முழுமையாக தெரிய வரும். அதன் பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது, அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.
பதில், "புன்னகை!':தி.மு.க., ஆட்சியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தின் போது, அண்ணா பல்கலை துணைவேந்தராக விஸ்வநாதனும்; அவரைத் தொடர்ந்து, மன்னர் ஜவகரும் பொறுப்பில் இருந்தனர். எனவே, விசாரணை வளையம் நீளும்போது, இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.இவர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்து, உயர்கல்வித் துறையில், முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரிடம் கேட்ட போது, புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தார்
.- நமது நிருபர் -