தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதில், தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. முந்தைய தலைவர் கபிலனின் பதவிக் காலம், கடந்த ஜனவரியுடன் முடிந்த நிலையில், ஏழு மாதங்களாக இந்த பதவி நிரப்பப்படாமல் உள்ளது.
அரசாணை: "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலனின் பதவிக் காலம், 2012, ஜன., 2ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, 3ம் தேதி முதல், புதிய தலைவர் பணியில் சேர வேண்டும்' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலர், கடந்த ஆண்டு, செப்., 29ம் தேதி, தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, 2011 நவ., 30ம் தேதி அன்று, ஆணையத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க, குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைவராகவும்; தமிழக அரசின் தலைமைச் செயலர்; மத்திய அரசின் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, தலைமைச் செயலர் சாரங்கி வெளியிட்ட அரசாணையில், தேர்வுக் குழு, மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு, இரண்டு நபர்களை பரிந்துரை செய்ய வேண்டும் என்றும்; தேர்வுப் பணிகளை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பம்: அரசாணை வெளியான பிறகு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவர் பதவிக்கு, பல்வேறு நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசு விதித்த கெடு முடிந்து ஆறு மாதங்களாகியும், இதுவரை புதிய தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தேர்வுப் பணிகளைத் துரிதப்படுத்த, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது. கடந்த ஆண்டு, நவ., மாத இறுதியில் அமைக்கப்பட்ட தேர்வுக் குழு, ஏழு மாதங்கள் கழித்து, முதல் முறையாக, கடந்த ஜூலை 2ம் தேதி அன்று தான் கூடியது. ஆனால், எந்த முடிவும் எடுக்காமல், ஐந்து நிமிடங்களிலேயே கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
மறைமுக தாமதம்: தேர்வுப் பிரச்னை குறித்து, மின் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடும் மின் பற்றாக்குறை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால், தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மின் துறையை ஒழுங்குபடுத்த வேண்டிய ஆணைய தலைவர் பதவிக்கு, இதுவரை யாரும் நியமிக்கப்படாமல் இருப்பதன் மர்மம் என்ன என்பது புரியவில்லை. தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் ஒருவரை தேர்வு செய்வதை தவிர்த்து, விண்ணப்பிக்காதவரை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்தால், அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறப் போகும், தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர், தாம் அந்த பதவிக்கு வருவதற்காகவே, ஆணைய தலைவர் தேர்வை மறைமுகமாக தாமதப்படுத்தி வருகிறார். இதனால், ஆணையத்தின் பணிகள் தொடர்ந்து முடங்கிப் போகும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மன்னிக்க முடியாத குற்றம். ஒரு ஆணையத்தின் தலைவர் பதவி அதுவும் மின் துறை சம்பந்தமானது நியமனம் செய்ய இவ்வளவு கால தாமதம், ஏன்?. மத்திய மின் ஆணையமும் மெளனமாக இருப்பதின் அர்த்தம் என்ன, புதிராக இருக்கிறது. யார் நடவடிக்கை எடுப்பது ?, யார் வழக்கு தொடுப்பது, யார் உண்ணாவிரதம் இருப்பது. என்ன காரணத்திற்காக இந்த ஒழுங்கு முறை ஆணையத்தை கொண்டு வந்தார்களோ அதன் மைய்ய கரு அப்பட்டமாக சிதைக்கப்பட்டுள்ளதே மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. எடுக்க மாட்டார்கள், அவர்களுக்கு ஆதாயம் தரும் பதவி என்றால் ஜனாதிபதி பதவி, துணை ஜனாதிபதி பதவி போன்ற பதவிகள் என்றால் அனைத்து கட்சிகளும் ஆக்ரோசமாக செயல்படுவார்கள். நாலா பக்கமும் இருந்து கொள்ளை அடித்த பணத்தை ஓன்று கூடி பங்கு வைக்கும் போது நடக்கும் கூத்து போல அவ்வளவு ஆர்வமாக செயல்படுவார்கள். எந்த தேர்தலிலாவது காலக்கெடுவுக்கு பின் பதவி ஏற்றிருக்கிரார்களா என்றால் இல்லை என்று தான் பதில் வரும். ஆனால் இந்த ஆணையத்தின் தலைவர் பதவி என்பது அரசுகளை அவர்கள் தவறை சுட்டி காட்டும் பதவி, எனவே பொருத்தமான தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். இது மக்களுக்கு செய்யும் துரோகம், ஜனநாயகத்திற்கு செய்யும் அநாகரீகம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.