அந்தியூர்: அந்தியூர் குருநாத சுவாமி கோவில் ஆடி தேர்த் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, நேற்று துவங்கிய குதிரைச் சந்தைக்கு வந்திருந்த, நூற்றுக்கணக்கான குதிரைகள், மாடுகள் மற்றும் அதிசய பிராணிகளைப் பார்க்க, கூட்டம் அலைமோதியது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர், புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்த பெற்ற குருநாத சுவாமி தேர்த் திருவிழா, ஆண்டுதோறும் ஆடி மாதம், வெகு விமரிசையாக நடைபெறும். நேற்று காலை, 11 மணிக்கு, தேர்த் திருவிழா நடைபெற்றது. புதுப்பாளையம் மடப்பள்ளியிலிருந்து, காமாட்சியம்மன், பெருமாள், குருநாத சுவாமி ஆகிய மூன்று சுவாமிகளையும், தேரில் வைத்து, பக்தர்கள் சுமந்து சென்றனர்.
மடப்பள்ளியிலிருந்து...: வனம் சென்றடைந்த மூன்று சுவாமிகளுக்கும், நேற்று இரவு முழுவதும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜை நடந்தன. இன்று அதிகாலை, வனத்திலிருந்து புறப்படும் சுவாமிகள், மடப்பள்ளியை வந்தடையும். இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மடப்பள்ளியில், குருநாத சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று நடந்த தேர்த் திருவிழாவில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவ்விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடந்து வரும், குதிரைச் சந்தையும் நேற்று கூடியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
"காட்டியவாடி' ரக குதிரை: நொக்ரா, மார்வார், காட்டியவாடி, கத்தியாவார், வெள்ளைக்கட்டை, இங்கிலீஸ் ப்ரீடு உள்ளிட்ட பல்வேறு ரக குதிரைகள், சந்தைக்கு வந்தன. இதில், தென்னிந்தியாவிலேயே உயரமான, 68 இன்ச், "காட்டியவாடி' ரக குதிரையை, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி என்பவர் கொண்டு வந்துள்ளார். இசைக்கு ஏற்றபடி நடனமாடும் வெள்ளை நிற, "நொக்ரா' குதிரைகள், டிரம்ஸ் கலைஞர்களின் இசைக்கேற்ப சளைக்காமல் நடனமாடி, பார்வையாளர்களை கவர்ந்தன. குதிரைகள் ரகத்துக்கு ஏற்ப, ஒரு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை விலை கூறப்பட்டன. காங்கேயம் காளை, நாட்டு மாடு, பூச்சிக்காளை, செவலக்காளை, ஜெர்சி, சிந்து, கொங்கன், மலை மாடுகளும் குவிக்கப்பட்டுள்ளன. காங்கேயம் காளை அதிகபட்சமாக, 1.25 லட்சம் ரூபாய், காங்கேயம் பசு மாடுகள் ஜோடி, 50 ஆயிரம் ரூபாய், இரண்டு வயதுடைய ஆந்திரா ஓங்கோல் இன காளை, 1.25 லட்சம் ரூபாய் என, விலை கூறப் பட்டன. ஜமுனாபாரி ஆடு, பாகிஸ்தான் செம்மறி ஆடு, அசாம் ஆடு, குட்டை டில்லி குதிரை மற்றும் செல்லப் பிராணிகள் நிறைந்துள்ளன. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின், வெர்ஜீனியாவில் உள்ள கால்நடை கல்லூரியில் பயிலும், எட்டு மாணவ, மாணவியர், இந்தியாவுக்கு கல்விப் பயணமாக வந்துள்ளனர். இவர்கள் நேற்று, அந்தியூர் சந்தையை அதிசயமாக பார்த்துச் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.