சென்னை:"இந்தியாவில், 1.2 லட்சம் பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்' என, சர்வதேச நீதி இயக்கம் தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாக கொத்தடிமை எண்ணிக்கை இருந்தாலும், வட மாவட்டங்களில் அதிகமாக உள்ளனர்.கொத்தடிமைகள் மீட்புக்காக இயங்கி வரும் இந்த அமைப்பு, சர்வதேச அளவில் கொத்தடிமைகளை மீட்டு, மறுவாழ்வு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் கொத்தடிமைகளாக உள்ளவர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு, மீட்டு வருவதையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.இந்த அமைப்பின் நடுவர் குழுவில் பங்கேற்றுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக பொருளாதார பேராசிரியர் ரவி ஸ்ரீவஸ்தவா, உத்தரப்பிரதேச கொத்தடிமைகள் ஆய்வாளர் ஜுயால் பைரவி, தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு பிரதிநிதி லட்சுமிதார் மிஸ்ரா, சர்வதேச நீதி இயக்கத்தின் இயக்குனர் ஆன்டிகிரிப்ட்ஸ் ஆகி யோர் கூறியதாவது:இந்தியா விடுதலை அடைந்து, 65 ஆண்டுகளாகிறது. இருந்தும், கொத்தடிமைத் தொழில் தொடர்ந்து கொண்டே உள்ளது. சர்வதேச அளவில், 2.2 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர். இந்தியாவில், 1.2 லட்சம் பேர் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறினாலும், முழுமையான விவரங்கள் சேகரிக்கப்படவில்லை. கொத்தடிமைகள் குறித்து விவரம் சேகரிப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதற்கு, பாரம்பரியமாக பின்பற்றப்படும் சமூக அமைப்பு முறையே
காரணமாக உள்ளன.22 தொழில்கள்: தமிழகத்தில், அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், கல்குவாரிகள்,
விவசாயப் பண்ணைகள் உள்ளிட்ட, 22 தொழில்களில் கொத்தடிமை முறை உள்ளது.
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட
இனத்தைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக இருக்கின்றனர்.இந்த இனங்களைச்
சேர்ந்தோர், பல தலைமுறைகள் கொத்தடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தின் வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை,
காஞ்சிபுரம் பகுதிகளில் கொத்தடிமை முறை அதிகமாக உள்ளது.பிற மாநிலங்களை
ஒப்பிடுகையில், தமிழகத்தில் கொத்தடிமை முறை குறைவாகவே உள்ளது. இதற்கு,
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் ஒருகாரணம்.
தொடர்ந்து நீடிக்கும் வறுமை, கொத்தடிமைகளாக இருக்க துணை நிற்கிறது. கொத்தடிமைகளாக இருப்பவர்களின் குழந்தைகளும், பெற்றோரைப் போலவே இருக்கின்றனர். "கொத்தடிமையாக உள்ளவரின் குடும்பத்தினர் வெளியில் செல்லக் கூடாது' என, முதலாளிகளால் அடைத்து வைக்கப்படுவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.சிக்கல்: கொத்தடிமைகளை மீட்டாலும், அதுகுறித்து வழக்குத் தொடர்வதில் பல சிக்கல்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகா மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக, 200
Advertisement
வழக்குகளே பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், சில வழக்குகளில் தான், தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.கொத்தடிமையாக இருக்க பணம் பெற்றுக் கொண்டாரா, வட்டி விதிக்கப்பட்டதா என்பதை
நிரூபிக்கத் தேவையில்லை. ஒருவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் அடைத்து
வைத்தல், விருப்பத்திற்கு ஏற்ற தொழிலை தேர்வு செய்வதைத் தடுத்தல்
போன்றவையே, கொத்தடிமையாக இருப்பதற்கு ஆதாரங்கள்.இதுபற்றிய விழிப்புணர்வு
மக்களிடம் மிகவும் குறைவாக இருக்கிறது. சமூக விழிப்புணர்வே, கொத்தடிமை
முறையை ஒழிக்க சிறந்த வழி. விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து செயல்பட்டு
வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மூன்றுதலைமுறையாக...:கல்பாக்கம் அருகே உள்ள நெல்லூர் நத்தம் என்ற பகுதியை சேர்ந்த ரமேஷ், அரிசி ஆலையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:மூன்று தலைமுறையாக கொத்தடிமையாக உள்ளோம். ஏழு குடும்பங்களைச் சேந்தவர்கள் கொத்தடிமையாக வைக்கப்பட்டு இருந்தோம். முதலாளி கூறும் பணத்தையோ, வட்டியையோ எங்களால் எந்தக் காலத்திலும் திருப்பிக் கொடுக்க முடியாது. அவர்களின் கொலை மிரட்டலும், அடி, உதையும், எங்களை பேச விடாமல் தடுத்து வந்தது. ஒரு முதலாளியிடமிருந்து, மற்றொரு முதலாளிக்கு விற்பதும் நடைபெற்றது. அரிசி ஆலை முதலாளியிடமிருந்து மீட்கப்பட்டு, அரசு வழங்கியுள்ள இலவச வீட்டுமனையில் வாழ்ந்து வருகிறேன். என் நான்கு குழந்தைகளை தற்போது பள்ளிக்கு அனுப்புகிறேன். விவசாயக் கூலியாக வேலை பார்த்து வருகிறேன்.இவ்வாறு, ரமேஷ் கூறினார்.