தமிழகத்தில் கோவில்கள் மற்றும் கதர் கிராம தொழில் வாரியம் ஆகியவற்றுக்கு சொந்தமான நிலங்களில், அந்தந்த துறைகளுடன் சேர்ந்து குடியிருப்புகளை கட்டும் திட்டத்தை மேற்கொள்ள, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. கூட்டு ஒப்பந்தம் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசின் வேறு துறைகள் வசம் உள்ள காலி நிலங்களை விலைக்கு வாங்கி, அதில் குடியிருப்புத் திட்டங்களை மேற்கொள்ள, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. இதற்காக, முதலில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவில்களுக்கு சொந்தமான காலி நிலங்களையும், கதர் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமான காலி நிலங்களையும் வாங்க முடிவு செய்யப்பட்டது.
நிலங்கள் தேர்வு:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான, 92.97 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதேபோல, கதர் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமான, சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள, 44.31 ஏக்கர் நிலம் தேர்வானது. இந்நிலங்களின் தற்போதைய நிலை, வழிகாட்டி மற்றும் சந்தை மதிப்பு விலை விவரங்கள் வருவாய்த் துறையிடமிருந்து கோரப்பட்டன. மேலும், இது தொடர்பாக ஒப்புதல் அளிக்குமாறு, இந்து சமய அறநிலையத் துறை, கதர் கிராம தொழில் வாரியத்திடமும் கேட்கப்பட்டது.
இது குறித்து ஆய்வு செய்வதற்கான உயர் அதிகாரிகளின் கூட்டம் சமீபத்தில் வீட்டுவசதித் துறை செயலர் பணீந்திர ரெட்டி அலுவலகத்தில் நடந்தது. வீட்டுவசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் செல்லமுத்து, இந்து சமய அறநிலையத் துறை செயலர் ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, வீட்டுவசதித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இத்திட்டத்துக்காக தேர்வான நிலங்களின் மதிப்பு குறித்து வருவாய் துறையிடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. திருவள்ளூர் சுந்தரபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 25.40 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்படும் திட்டத்தை, கூட்டு ஒப்பந்த அடிப்படையில் நிறைவேற்ற அறநிலையத் துறையிடம் இருந்து கருத்து பெற முடிவு செய்யப்பட்டது.இதேபோல, மற்ற இடங்களிலும், கூட்டு ஒப்பந்த அடிப்படையில் திட்டத்தை நிறைவேற்ற, அறநிலையத் துறை, கதர் கிராம தொழில்கள் துறை அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான கருத்து அந்தந்த துறைகளிடமிருந்து பெற்று அதை இறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய ஷரத்துகள், நிபந்தனைகள் விரைவில் இறுதி செய்யப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை வேறு துறைகளின் வர்த்தக நோக்கிலான திட்டங்களுக்கு அளிக்க சட்டத்தில் தெளிவான வழி இல்லை. இதனாலேயே, அந்தந்த துறைகளையும் இத்திட்டத்தில் பங்குதாரராக சேர்க்க வீட்டுவசதித் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசாள்பவரே, கோயில் நிலம் ஊருக்கு வெளியில் இருந்தால் உணவு விளைச்சலுக்கு பயன்படுத்து. கிராமத்துக்குள் இருந்தால் வேதம் சொல்லிக்கொடுக்கவோ, தேவாரம் பயிற்றுவிக்கவோ, பசுக்கள் காக்கும் மடமாகவோ, கனிதரும் மரத்தோப்பாகவோ பயன்படுத்து. ஊருள்ளேயாகின் கோயில் பெயருடன் ஆரம்ப பாடப்பள்ளியாகவோ, மாணவ கண்மணிகள் விளையாடும் களமாகவோ, இசை முதலான கலை வளர்க்கும் இடமாகவோ, மக்கள் மனம் கவர் பூங்காவாகவோ பயன்படுத்து. கடைத்தெருவிலேயாகின் அன்னச்சத்திரமாகவோ, தண்ணீர் பந்தலாகவோ உபயோகப்படுத்து. அறவோர் அளித்த செல்வத்தினால் அறம் வளர்க்கும் வழிகளை ஆராய மாட்டீரா?
கோயிலுக்கு உண்டான நிலம், எப்படி அரசு துறை நிலமாயிற்று. நிர்வாக பொறுப்பு மட்டும் தானே அரசு வசம் இருப்பது. மொழி இன புரட்டு கூடார அரசியலாளர் காலத்திலன்றோ, திருக்கோயில்கள் பெருங்கொள்ளை போகின்றன. எத்தனை காலந்தான் ஏமாறுவார், இந்த தமிழ் இயம்பும் நாட்டிலினிலே? சட்டத்தின் முன் நீதி கோர வேண்டும். பக்தரால் பொது கோவிலுக்கு கொடுக்கப்பட்டது யாவும் உள்ளே சிலா ரூபமாக குடியிருந்து அருளும் இறையையே சாரும். இறை ஓர் குழந்தை போல், சட்டத்தின் பார்வையில் "மைனர்" அந்தஸ்து கொண்டது. யார் கையாடினாலும் செல்லாது.
கோயில் போன்ற பொது இடங்களில் வீடு கட்டுவதில் தவறில்லை. அவற்றை மொத்தமாக விற்காமல் சந்தை நிலவரத்துக்கு பொருந்துகின்ற அளவு நியாயமான வாடகைக்கு விட்டு அதன் பலனை ஒரு பகுதி கோயிலுக்கும், மீதியை வாரியமும் எடுத்துக்கொள்ளலாம். அவற்றின் பராமரிப்பை வாரியமே கவனிக்கவேண்டும். அப்போதுதான் வீடுகளின் தரம் காப்பாற்றப்படும்.
உதாரணத்திற்கு சிங்கபூர் வீடு பராமரிப்பை கவனித்து அதே போல செய்யலாம். கட்டும் வீடுகள் தேவைக்கேற்ப பல மாடிகளோடு எல்லா வசதிகளும் அருகிலேயே கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கவேண்டும். அப்படி இருந்தால் மக்கள் உடனடியாக ஏற்பார்கள்.
தமிழகம் வளர்கிறது என்கிற பெயரில் சரியான திட்டமிடல் இல்லாமல் தாறு மாறாக விவசாய நிலங்களை அழித்து அவரவர் விருப்பபடி வீடு கட்டி கொள்வது அதிகரித்துள்ளது....இதனால் வந்த விளைவு தெருக்கள் கோணல் மாணலாகவும்,வீடுகள் ஓர் வரிசையில் இல்லாமலும் உள்ளது.....ஏதாவது ஒரு வீட்டில் விபத்து என்றால் அவசர காலத்தில் அந்த விபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாத சூழல் தான் உள்ளது......இதற்க்கு முதலில் அரசின் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டியது கட்டயாம்..... அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய நிலங்களை பாதிக்காமல் புறம் போக்கு நிலங்களை கண்டறிந்து அங்கு வீடுகளை ஒரு பெரிய நிறுவனத்தின் மூலமாக நிர்மாணிக்க வேண்டும் ...அப்படி நிர்மாணிக்கும் இடத்தில் நல்ல காற்றோட்ட வசதி,தீ அணைக்கும் நீர் குழாய்கள் (fire water line), நல்ல தரமான சாலைகள்,நல்ல பார்க்கிங் வசதி போன்றவற்றை உறுதிபடுத்தலாம்....அதாவது அவரவர் விருப்பத்திற்கு வீடு கட்டி கொள்பதை தவிர்த்து மேலை நாடுகளில் உள்ளது போல் நிறுவனங்கள் மூலம் கட்டிக்கொடுப்பதை மக்கள் தேர்ந்தெடுப்பதை ஊக்கபடுதலாம்..... இதனால் நிலம்,மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்துவதை அரசு மூலம் எளிமையாக்கலாம்.... உதாரனத்திற்க்கு குடி நீர் இணைப்பு,மின்வசதி போன்றவை அரசின் கட்டுபாட்டில் வந்து விடுவதால் அதை நிறைவேற்றுவதில் கால தாமதம் குறைக்கப்பட்டு எளிமையாகி விடும்....அவ்வாறு நிர்மாநிக்கப்டும் வீடுகளை ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்கி நிறுவனங்கள் வீட்டினை விற்கலாம்...இப்படி செய்வதன் மூலம் அந்த குடியிருப்பிர்க்கான மொத்த லே -அவுட்டும் அரசின் கையில் இருக்கும்.....இது அந்தந்த தீ அணைப்பு துறை,மின் துறை மற்றும் இதர துறைக்கு வழங்குவதால் அவசர காலங்களில் மக்களை காப்பாற்றுவது எளிதாகும்...அதே போல் மாநகராட்சி,பேரூராட்சி,போன்றவற்றில் இருபது சதுர கிலோமீட்டரில் தனி வீடு அமைப்பதை தடை செய்து அடுக்குமாடி குடியிருப்பை கட்டயாபடுதலாம்......இவ்வாறு செய்தாலே கோவில் நிலங்களில் வீடு அமைப்பது தேவைப்படாது...
இந்து வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று, காரணம் கோவில் என்றால் அதற்கு என்று ஒரு சிறப்பு உள்ளது, அமைதி, காற்றோட்டம், தூய்மை என்று, அப்படி இருக்க அந்த இடங்களில் மரங்களை வளர்த்து மக்களுக்கு இயற்க்கை அழகுடன் கூடிய நல்ல சுகாதாரமான களைப்பாறும் இயற்க்கை சூழலுடன் கூடிய இடம் அமைக்கலாம்., வீடு என்று கட்டினால் எந்த ஜாதி, எந்த மதம் என்று அடுத்த கேள்வி வரும், மாற்று மடத்தினர் வந்தால் இவர்களின் உரிமை பரிபோனதாகக் கூக்குரலிடுவார்கள், அவர்களோ தங்களின் வாழ்வாதாரம் பறிபோகி விட்டதாகப் பழி போட்டு கோர்ட்டுக்குப் போவார்கள், இதனால் மக்களிடையே ஜாதி மற்றும் மதக் கலவரமே வரப்போகிறது, எது எப்படிப் போனால் என்ன அரசுக்கு வருமானம், இவர்களுக்கு நான் ஒரு வழி கூறுகிறேன், சென்னை போன்ற இடங்களில் பல மாடிக் கட்டிடங்கள் பல ஆண்டுகளாகக் கட்டி முடிக்கப்படாமல் அப்படியே இருக்கின்றது, ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை கூறுகிறார்கள், ஆளும் கட்சியினர் இவர்கள் கட்டும் கட்டிடத்தில் சம அளவு பாகம் கேட்க்கிரார்களாம்? அதைவிட அரசு ஊழியர்கள் தங்கள் பங்கிற்கு பாகம் கேட்கிறார்களாம், இதனால் பணம் போட்ட முதலாளி செய்வது அறியாமல் இருக்கிறார்களாம். இது எது உண்மையோ தெரியவில்லை, மொத்தத்தில் இது போன்ற கட்டிடங்கள் பல ஆயிரம் இருக்கின்றன, இவைகள் கட்டி முடிக்கப்பட்டால் அரசுக்கு பல லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். நல்ல கருத்தக்களை யாரிடம் சொல்ல ?? வந்தே மாதரம்
ஒரு ஆட்சி அனைத்து ஏழைகளுக்கும் நிலத்தை அளித்து விட்டதாக செய்தி வந்தது, அது எப்படி சாத்தியம் என்று குரல் கொடுத்தவர்கள் பிறகு அடங்கி விட்டனர், இவர்கள் கோவில் நிலங்களில் வீடு கட்டப் போகிறார்களாம். சாடரனமாகவே கோவிலுக்கு செல்பவர்கள் அரசின் கட்டுப்பாடிற்கு வந்தவுடன் மிக மிக அதிக துன்பத்திற்கு ஆலகிக்க்கொண்டு வருக்ன்றனர். நல்ல ரோட்டில் வந்தால் வரி, ஊருக்குள் வந்தால் வரி, கோவிலின் வாசலில் வண்டியை நிறுத்தினால் வரி, சாமி கும்பிட டிக்கெட் என்ற பெயரில் வரி, அதிலும் பல தரம், எல்லாம் கடந்து சாமி கும்பிட சென்றால் அங்கு பூசாரியின் கொடுமை வரி மன்னர்கள் அன்று இலவசமாக மக்காள் ஆரோக்யமாக வாழ நடைப் பயிற்சி, காற்றோட்ட இட வசதி என்று அழகாகக் கட்டி வைத்தனர், இன்று இவர்கள் வசதியாக வாழ வரி என்ற பெயரில் சுகாதாரத்தையும் மற்றும் மனித நேயத்தையும் எல்லாம் விட திருக்கோவிலின் மாண்பினையும் சீரழித்து அதன் புராதான அழகையே சீர்குலைத்துக்கொண்டு வருகின்றனர், இனி யாருமே யாரையும் காப்பாற்ற முடியாது, தினமலரில் நம் குறைகளை கூறி அழுது நம்மை நாமே தேடிக்கொவதுதான் தீர்வு, வந்தே மாதரம்
நல்லதொரு வீட்டை சிங்கப்பூரு மாதிரி கட்டிகொடுத்து அதில் வரும் வருமானத்தை அக்கோவிலின் பராமரிப்புக்கும் மற்ற கோவில்களுக்கும் உபயோகிக்கலாம் ,பல பூசாரிகளுக்கு சம்பளமே பாக்கி இருந்தது ஒருகாலத்தில் இப்ப என்னவோ தெரியாது ,
கொவில்நிலத்தை வித்து வீடு கட்டலாம் ஆனால் அந்த முழுப்பணமும் கோவில் பராமரிப்புக்கு சென்றால் தான் விளங்கும் ,பலகோயில் இடிந்து விழும் நிலையில் உள்ளன மான்ன்ய நிலமும் அபகரிக்கப்பட்டுவிட்டது பல பேராசை மக்களால் ஆகவே தேவாலய நிலத்தின் சொத்தை தேவாலயத்துக்கே செயல் பட்டால் நன்று ,மாறாக செயல் பட்டால் அவ்விடத்தில் குடியிருப்போருக்கு பாதிப்பு ஏற்படலாம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.