கோவை:கோவையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பங்கேற்கும் பொதுக்கூட்ட இடம், திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். கோவை, சிங்காநல்லூர் கரும்புக்கடை பகுதியில், இன்று மாலை, 6 மணிக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு, கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிலையில், பொதுக்கூட்ட இடத்தை, மாற்றம் செய்து கொடுக்க வேண்டுமென்று, தே.மு.தி.க.,வினர், போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினர். எம்.எல்.ஏ.,க்கள் தினகரன், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில், தே.மு.தி.க.,வினர், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், துணை கமிஷனர் ஹேமா உள்ளிட்டோரைச் சந்தித்து, சிவானந்தா காலனியில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.
எம்.எல்.ஏ., தினகரன் கூறுகையில், ""கோவை பொதுக்கூட்டத்தில், பொதுமக்களுக்கு சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ சிகிச்சை மற்றும் பிசியோதெரபி சிகிச்சைக்காக, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து, மருத்துவ உபகரணங்களை, விஜயகாந்த் இலவசமாக வழங்குகிறார். சிங்காநல்லூரில் பொதுக்கூட்டம் நடத்த, முதலில் அனுமதி பெற்றோம். மேடை அமைத்து பார்த்தபோது, மக்கள் அமர்வதற்கு இடம் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்தோம். அதனால், சிவானந்தா காலனியில், பொதுக்கூட்டம் நடத்த, இடம் கேட்டு பெற்றுள்ளோம்,'' என்றார்.
கோவை, சிங்காநல்லூரில், அரசியல் கட்சியினர் யாரும் பொதுக்கூட்டம் நடத்துவதில்லை. அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., - கம்யூ., - பா.ஜ., போன்ற கட்சியினர் அனைவரும், சிவானந்தா காலனியில், தங்களது கட்சி பொதுக்கூட்டங்களை நடத்துகின்றனர்.இதனால், தே.மு.தி.க.,வினரும், விஜயகாந்த் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை, சிவானந்தா காலனியில் நடத்த வேண்டும் என்பதற்காக, பல லட்சங்களை செலவு செய்ததையும் பொருட்படுத்தாமல், இடத்தை மாற்றியுள்ளனர். இதற்கெல்லாம் அரசியல், "சென்டிமென்ட்' தான் காரணம் என்கிறது, தே.மு.தி.க., வட்டாரம்.
தொண்டர்கள் அதிருப்தி :
நீலகிரி மாவட்டத்தில், நலத்திட்ட உதவிகளை வழங்க, விஜயகாந்த் நேற்று வந்திருந்தார். அவரை வரவேற்க, குன்னூரில், தே.மு.தி.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க, பட்டாசு, மேளதாளங்களுடன் தொண்டர்கள் காத்திருந்தனர்.பகல் 12 மணியளவில், விஜயகாந்தின் வாகனம், அந்த வழியே வந்தது. அவரது வாகனம் நிற்காமல் சென்றதால், "விஜயகாந்த் வாகனத்தில் உள்ளாரா, இல்லையா' என்ற குழப்பம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின், பட்டாசு வெடித்து கோஷங்களை எழுப்பினர். எனினும், அவரது வாகனம் நிற்காமல் ஊட்டியை நோக்கிச் சென்றதால், தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.
படுகரின உடையணிந்து விஜயகாந்த் "டான்ஸ்':
பொதுக்கூட்ட மேடையில், படுகரின உடையணிந்து விஜயகாந்த் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்ட தே.மு.தி.க., சார்பில், ஊட்டியில் நடந்த விழாவில், 20 லட்ச ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கி, விஜயகாந்த் பேசியதாவது:நீலகிரியில் பச்சை தேயிலைக்கு விலையில்லை; குதிரை ஓட்டும் தொழிலாளர்களும், ஊட்டி ஏரியில் படகு ஓட்டுபவர்களும், அதே நிலையில் தான் உள்ளனர்; அவர்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. பணக்காரர்கள் பணக்காரர்களாகிக் கொண்டே இருக்கின்றனர்; ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர். மாவட்டத்தில் சுற்றுலா மேம்படவில்லை. இப்பிரச்னைகளை பற்றி முதல்வர் ஜெயலலிதா சிந்திப்பதில்லை; தேயிலை பிரச்னை உட்பட மாவட்டத்தின் முக்கிய பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள், மக்களுக்கு நல்லது செய்தால், நான் விலகிக் கொள்வேன்.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.
தொடர்ந்து, படுகரின மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் மேடையில் நடனமாடினார். உற்சாகமான தொண்டர்களும், ஆட்டம் போட ஆரம்பிக்க, பொதுக்கூட்ட திடல், ஆடுகளமாக மாறியது.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பேசும்போது, ""நீலகிரியில் தயாரிக்கப்படும் தேயிலை, உலகளவில் பிரசித்து பெற்றுள்ளது; சமீபத்தில் நடந்து முடிந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது, தேயிலைக்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது. எனவே, "ஊட்டி டீ'யை, தேசிய பானமாக அறிவிக்க வேண்டும்; அவ்வாறு செய்தால், "ஊட்டி டீ'க்கு சர்வதேச அளவில் சந்தை கிடைக்கும். அதற்கான முயற்சியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நல்லதுதான் மக்களை சந்திக்கிறீர்கள் மனைவியையும் ,மச்சானையும் மேடை ஏற்றாதீர்கள் அவர்கள் ஏ.சி லேயே இருப்பவர்கள் அல்லவா.அவர்களை விட சிறந்த பேச்சாளர்கள் , மக்கள் பிரச்னையை உணர்ந்தவர்கள் உங்கள் கட்சியிலேயே இருப்பர். இனம் கண்டு மேடை ஏற்றுங்கள்.சந்திப்பதோடு நிறுத்தாமல் கொஞ்சம் சிந்தியும் நம் வழி நல்ல வழியா என்று
எத்தனையோ திறமையான நல்லவர்கள் ஒதுங்கி இருப்பது இது போன்ற ஆட்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அனைவரும் வெறுக்கும் ஊழல் என்னும் சொல்லை கெட்டியாய் பேச்சளவிர்க்கேனும் பிடித்துக்கொண்டால் மலை ஏறி விடலாம் என்ற நினைப்புத்தான் இவருக்கு, என்று எனக்கு தோன்றுகிறது. எவ்வளவு சோதித்தாலும் இந்நாடு தாங்கும் அதனால் இவரையும் வைத்து சோதித்துவிடலாமென்று எட்டு-பத்து சதவீத வாக்காளர்கள் தமிழகத்தில் எண்ணுமளவிற்கு ஆகிவிட்டது.
ஏற்கெனவே டார்ஜீலிங் டி ஐ தேசீய பானமாக இந்தியா அரசு அறிவிசுடிச்சே.அதனால தான் ஊட்டி டி நு இவர் ஆரம்பிக்குராரோ?விஜய காந்துக்கு டேன்ஸ் ஆட தெரியாது,டேன்ஸ் காட்சி படம் புடிக்கிறதுக்குள்ள அஞ்சாறு பேண்டு கிழிஞ்சிடும்னு நக்கல் அடிப்போரே,இன்று அவர் என்ன ஆட்டம் போட்டார் பாத்தீரா?மன்னாதி மன்னன் கூட பிச்சை வாங்கணும்.அப்புடி ஒரு நளினமான ஆட்டம் ஆடினார்.அந்த கைய தூக்கி ரெண்டையும் வெவ்வேறு பக்கமா அசைத்து ,அட ஒரே கிக்கா வருதுங்க.ஊட்டி டி குடிச்சுட்டு ஆடியதால் அதை தேசிய பானமாக அறிவிக்கணுமுன்னு சொன்னாரோ?
பிரேமலதாவின் யோசனை அருமையாக இருக்கிறது.மாநில அரசு இதனை கவனத்தில் கொண்டால் சர்வ தேச அளவில் சந்தை கிடைக்க வாய்ப்பு உள்ளது.உண்மையிலேயே நானும் ஊட்டி" டீ"க்கு அடிமை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு டேஸ்ட்.சமீபத்தில் என் மனைவியோடு ஊட்டிக்கு சென்றிருந்த போது ஊட்டி தேனீரை அதிகமாக விரும்பி குடித்தேன்.சிங்கப்பூர் லையும் டீ குடுக்குறானுங்க ஆனா அஞ்சி பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது. ஒரு குடும்பமே குடிக்கிற அளவுக்கு பெரிய கிளாஸ் ல போட்டு குடுப்பானுங்க ஆனா வாயில வைக்க முடியாது...நம்ம ஊரு டீ ய போல வேற எங்க போனாலும் கிடைக்காது...
ஊட்டி" டீ" கருப்பு " டீ" அதனால வெளிநாட்டில் (மேலை நாடுகளில்) வரவேற்ப்பு குறைவு. சிகப்பு மஞ்சள் நிற " டீ" பால் ஊற்றாமல் (ஆங்கிலேயர் தவிர) பெரிய கிளாஸ் அளவில் " டீ" யை நீர்க்கச்செய்து சாபிடுவது வழக்கம்....ஆனால் அரபு நாடுகளில் கருப்பு " டீ" விரும்புவார்கள் . அவர்களும் பால் சேர்க்காமல் சிறிய கிளாசில் சாப்பிடுவது வழக்கம்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.