தேசிய கண் தானம் வாரம் ஆண்டுதோறும் ஆக., 25ல் துவங்கி செப்., 8ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நாம் மறைந்த பின்னும் இந்த அழகிய உலகை பார்க்கும் நம் கண்களுக்கு இறவா வரம் கொடுப்பது தான் "கண் தானம்' அந்த அர்ப்பணிப்பு மனதிற்கு நம்மை தயார் செய்வது தான் "தேசிய கண் தான வாரம்'
ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு பெயர் சூட்டி அதற்கு விழா எடுத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொள்கிறோம். அந்த வரிசையில் தேசிய கண் தானம் வாரத்தையும் நாம் வரவேற்று, பிறருக்கு நன்மை செய்யலாமே!
கோவை அரவிந்த் கண் மருத்துவமனை கருவிழி சிகிச்சை தலைமை டாக்டர் ரேவதி மற்றும் டாக்டர் மங்களா ஆகியோர் கூறியதாவது:கண் தானம் மகத்துவத்தை தெரிந்ததால் தான் இன்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் கண்களை தானமாக தர உறுதி அளித்துள்ளனர்; நம் நாட்டில் கண்புரைக்கு அடுத்து கருவிழி பாதிப்பால் ஏற்படும் பார்வை இழப்பு அதிகமாக உள்ளது.கருவிழி பாதிப்பை, கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். கருவிழி வெண்மையாக கொண்டு பிறக்கும் குழந்தைகள் மற்றும் கருவிழியில் தழும்பு ஏற்படும் குழந்தைகளுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒருவர் செய்யும் கண்தானம், இருவருக்கு கண் பார்வை கிடைக்க வழிவகுக்கிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் கண்கள் தேவைப்படுகிறது; ஆனால் 27 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாக பெறப்படுகிறது. இவற்றில் 40 முதல் 50 சதவீத கருவிழிகளே பயன்படுத்தும் நிலையில் உள்ளன. இறப்புக்கு பின், தாமதமாக கண்கள் பெறப்படுவதே, தானமாக பெறப்படும் கண்களில் பலவற்றை பயன்படுத்த முடியாததற்கு காரணம். அரவிந்த் கண் மருத்துவமனையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை கடந்த 1997ல் துவக்கப்பட்டது. முதலாமாண்டு 38 கண்களே கிடைத்தது. பல நல்ல உள்ளங்களின் முயற்சி மற்றும் ஆதரவு காரணமாக கடந்த 2010ல் 1,410 மற்றும் 2011ல் 1,204 கண்கள் கிடைத்தது.
கண்ணாடி அணிபவர்கள், கண்புரை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் என, யார் வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம். சமுதாயத்துக்கு உதவும் நோக்கில், ஒருவர் கண்தானம் செய்ய உறுதிமொழி அளிப்பது மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் கண்தானம் உறுதிமொழி அளிக்க வழிவகை செய்ய வேண்டும்.பல்வேறு காரணங்களால், கண் தானம் செய்ய உறுதிமொழி அளிப்பவர்களிடமும் சில நேரங்களில் கண்களை தானமாக பெற முடிவதில்லை. கண்தானத்தை ஊக்குவிக்க மருத்துவமனையில் "கிரீப் கவுன்சிலர்ஸ்' பணிறாற்றுகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்களை தானமாக பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு, டாக்டர்கள் ரேவதி மற்றும் மங்களா தெரிவித்தனர்.
தேசிய கண் தான வாரத்தை முன்னிட்டு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், வரும் 25ல் துவங்கி செப்., 8ம் தேதி வரை மருத்துவமனை, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்தான உறுதிமொழி அளித்தல், பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
- நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.