தற்போது கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கிரானைட் என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கிரானைட் தயாராவது எப்படி:
கிரானைட் பாறைகள், மலைகளை குடைந்து, வெட்டி அல்லது வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படுகின்றன. முதலில் கிரானைட் கல்லின் அளவு திட்டமிடப்படுகிறது. அப்போது தான், வெட்டும் போது கற்கள் வீணாவது தடுக்கப்படும். வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள், தேவையான அளவிற்கு மாற்றப்படுகின்றன. "வாட்டர் ஜெட் கட்டிங்' என்ற தொழில்நுட்பம் வெட்டுவதற்கு பயன்படுகிறது. சரியான அளவில், வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட்டின் ஓரங்கள், பக்கவாட்டுப் பகுதிகள் சரி செய்யப்பட்டு செப்பனிடப்படும். இது கல் குவாரியிலேயே நடக்கும்.
பின், மொத்தமாக இருக்கும் கிரானைட்டுகள் தேவையான எண்ணிக்கையில், சரியான அளவில் "கேலிப்ரேஷன்' முறையில் சிறு சிறு துண்டுகளாக்கப்படும். கற்கள் "பாலிஷ்' செய்யப்படும். பின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரத்தின் உதவியுடன், கற்களின் பரிமாணங்கள் சரி செய்யப்படும். இதை "ஆஷ்லர்' முறை என்பர். பின் கற்கள் விற்பனைக்கு தயாராகும்.
கிரானைட் எப்படி உருவாகிறது:
புவியின் மேல் ஓட்டில், இயற்கையாக உருவாகும் மிக உறுதியான கற்பாறை தான் கிரானைட். பூமியின் அடியில் உள்ள மாக்மா என்ற கற்குழம்பு குளிர்வடைந்து புளுட்டோனிக் பாறை உருவாகிறது. இதுவே நாளடைவில் கிரானைட்டாக மாறுகிறது. பூமிக்குள் 1.5 கி.மீ., முதல் 50 கி.மீ., ஆழத்துக்குள் இம்மாற்றம் நடக்கிறது.இப்பாறைகள், மிக கடினமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.கிடைக்கும் இடங்களை பொறுத்து, கிரானைட்டின் தன்மை அமைகிறது. இதை வைத்து, தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயிக்கப்படுகிறது. கட்டடங்கள் கட்ட கிரானைட் பயன்படுகிறது.கிரானைட்டில், குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார், மைக்கா ஆகிய தாதுக்கள் உள்ளன.
கிரானைட் கற்களின் பண்புகள்:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமிக்கு அடியில் இருந்த எரிமலைகள், பாறைகளை உருக்கி, திரவ நிலையில் குழம்புகளாக மாற்றின. நாளடைவில் இந்த குழம்பு, குளிர்ந்து கடினத் தன்மையுடைய எரிமலை பாறைகளாக மாறின. இந்த பாறைகள் பல வகைப்படும். அதில் ஒன்று தான் "கிரானைட்'. படிகங்களாலும், களிமண் பாறை களா<லும் இந்த கிரானைட், தனித்தன்மை, வடிவம் பெற்றன. மைக்கா மற்றும் சில தாதுக்கள் இதில் உள்ளன. இந்த தாதுக்களைப் பொறுத்து, கிரானைட்டின் நிறங்கள் மாறுகின்றன. இவற்றைப் பொறுத்தே, வலிமையும், நீடித்து உழைக்கும் தன்மையும் பெற்று, மற்றவற்றிலிருந்து தனித்துவம் பெறுகின்றன.
* உயர்தர "பாலிஷ்' செய்த பின்னும், கிரானைட்டின் சில இடங்கள் "டல்'லாக இருக்கும். பார்ப்பதற்கு "வாட்டர் மார்க்' போல் தெரியும். இதை மந்தமான புள்ளிகள் என்பர்.
9கிரானைட்டின் மற்றொரு பண்பு, குழி விழுதல். கிரானைட்டில் <உள்ள சிறிய தாதுப் பொருட்கள், "பாலிஷ்' செய்யும் போதும், வேறு சில காரணங்களாலும் நீங்கி விடும். அப்போது, அந்த இடத்தில் சிறு குழி விழும். இதையும் சரி செய்யும் தொழில்நுட்பங்கள் தற்போது உள்ளன.
*பாறைக் குழம்புகள், குளிர்ந்து தனி கல்லாக மாறும் போது, அதில் சில துவாரங்கள் இயற்கையாக உருவாகின்றன. இந்த துவாரங்கள், கிரானைட்டில் இருக்கும். ஆனால், நாளடைவில் இந்த துவாரங்கள், பெரிதாவதோ, சுருங்குவதோ கிடையாது.
கிரானைட்டில் இருப்பது என்ன:
கிரானைட் பாறைகளில், களிமண் பாறைத் தனிமங்கள், படிகக்கல், கறுப்பு அப்ரகம் (பயோடைட்) ஆகியவை இதன் முதன்மை உட்பொருட்கள். களிமண் பாறைத் தனிமங்கள், 65 முதல் 90 சதவீதமும், படிக்கக் கல் 10 முதல் 60 சதவீதமும், பயோடைட் 10 முதல் 15 சதவீதமும் இருக்கும். இது தவிர, வேறு சில வேதிப் பொருட்களும் இதில் உள்ளன. இவற்றை 2000க்கும் அதிகமான ஆய்வுகள் மேற்கொண்டு கண்டுபிடித்தனர்.
இதில் உள்ள தனிமங்கள்:
சிலிக்கன் டை ஆக்சைடு - 72.04 % (சிலிகா)
அலுமினியம் ஆக்சைடு- 14.42% (அலுமினா)
பொட்டாசியம் ஆக்சைடு - 4.12%
சோடியம் ஆக்சைடு - 3.69%
கால்சியம் ஆக்சைடு - 1.82%
இரும்பு (ஐஐ) ஆக்சைடு - 1.68%
இரும்பு (ஐஐஐ) ஆக்சைடு - 1.22%
மக்னீசியம் ஆக்சைடு - 0.71%
டைட்டானியம் டை ஆக்சைடு - 0.30%
பாஸ்பரஸ் பென்டாக்சைடு - 0.12%
மாங்கனீஸ் (ஐஐ) ஆக்சைடு - 0.05%
தண்ணீர் - 0.03%
கிரானைட் சிட்டி:
காலத்தால் அழியாத பல நினைவுச் சின்னங்கள், கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. எகிப்து பிரமிடுகள், கிரானைட் கற்களால் ஆனவை. பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தில் உருவாக்கிய சிற்பங்கள், ஒரு வகை கிரானைட் கற்கள் தான். 11ம் நூற்றாண்டின் தென்னிந்திய அரசர்கள், கிரானைட்டின் பயனை அறிந்திருந்தனர். ராஜராஜ சோழன், கிரானைட் கற்களை பயன்படுத்தி கோவில்களில், கலைநயம் மிக்க சிற்பங்களை அமைத்தார்.பிரிட்டனில் 1832ம் ஆண்டு, முதன்முதலில் கிரானைட் கற்கள், பாலிஷ் செய்து பயன்படுத்தப் பட்டன. இக்கால கட்டத்தில் தான், கிரானைட் கற்களின் உபயோகம், கவுரவத்தின் அடையாளமாக கருதப்பட்டது. நவீன காலத்தில், நினைவுச் சின்னங்கள் அமைக்கவும், சிற்பங்கள் வடிக்கவும் கிரானைட் கற்கள் பயன்படுகின்றன. கட்டடங்களில் அதிகளவு கிரானைட் உபயோகம் இருக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்தீன் நகரில், கிரானைட் கற்களை பயன் படுத்தி அதிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அந்நகரம், "கிரானைட் சிட்டி' என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் கிரானைட்டை பயன்படுத்தி, ரயில் பாதையே அமைக்கப் பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கிரானைட் கல் உருவாக ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகும், எரிமலை குழம்பு குளிர்ந்து கிரானைட் உருவாகிறது என்றால் கிரானைட் கிடைக்கும் இடத்தில் முன்பு எரிமலை இருந்தது என்று தானே அர்த்தம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தோண்டினால் கற்களின் உறுதித்தன்மை குறைந்து கல் அடுக்குகளில் மீண்டும் விரிசலோ அல்லது பூகம்பமோ ஏன் எரிமலையோகூட தோன்றலாம்தானே எந்த அடிப்படையில் அளவுக்கு மேல் தோண்ட அனுமதித்தார்கள். பணம் என்ற ஒற்றை ஆயுதம், எதிர்கால சந்ததி சமீபகால சுற்றுசூழல் என்ற எல்லாவற்றையும் மறந்து சுயநலம் மட்டும் பிரதானம் என்று செயல்பட வைத்துள்ளது இயற்கைக்கு எதிராக செயல்பட்டால் விளைவுகள் மிகமோசமாக இருக்கும் - ஸ்ரீனி சதுர்வேதமங்கலம்
பாறைகளைவிட கடினமான கல் மனது கொண்ட கிராதகர்களின் அடாது செயல்களால் நாட்டிற்கு உண்டாகும் நஷ்டங்கள் குறித்த கிரானைட் பற்றிய செய்தியை மிகவும் விவரமாகவும், அழகாகவும் தினமலர் வெளியிட்டுள்ளது குறித்து வாசகர்கள் சார்பில் நன்றி. அதே சமயம் சிலைகள் வடிப்பதற்குத் தேவைப்படும் கற்களைப் பற்றிய மேலும் சில விபரங்களைத் தந்திருந்தால் செய்தி மேலும் சிறப்பு அடைந்திருக்கும். அத்தகைய கற்களில் ஆண் கல், பெண் கல் மற்றும் நபும்சகக் கல் என்றும் உள்ளனவாம். சிலைகளைச் செய்யும் சிற்பிகளுக்கு அவைகளைக் கண்டறியும் ஆற்றல் உள்ளனவாம். அவைகளைப் பற்றியும் ஒரு கட்டுரை வெளியிட்டால் வாசகர்களுக்கு பயனுடையதாக இருக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.