"நிலக்கரி சுரங்க முறைகேட்டில், அனைத்து உரிமங்களையும் ரத்து செய்து விட்டு, அதன்பின், பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும்' என, இடதுசாரி கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி இருப்பதால், மத்திய அரசுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி விடலாம் என்ற, காங்கிரசின் நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது.இருப்பினும், "திட்டமிட்டபடி, பார்லிமென்ட் கூட்டத்தொடர், முழுவதுமாக நடக்கும்' என, அரசு தரப்பு அறிவித்துள்ளதால், அடுத்த, 10 நாட்களும், சபை நடவடிக்கைகள் வீணாகப் போவது உறுதியாகியுள்ளது.
நிலக்கரி சுரங்க முறைகேட்டில், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) அளித்த அறிக்கையை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டுள்ளன. மழைக்கால கூட்டத்தொடரில், சில நாட்கள் மட்டுமே அலுவல்கள் நடந்துள்ள நிலையில், இரு சபைகளுமே, தொடர்ச்சியான கூச்சல், குழப்பங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. எட்டாவது நாளாக நேற்றும், லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும், பெரும் அமளி நிலவியது; இதனால், இரு சபைகளிலும் கேள்வி நேரம் ரத்தானது. பின், பூஜ்ஜிய நேரமும் ரத்தாகி, முழுவதுமாக அலுவல்கள் நடக்கவில்லை. மதியம் சபை கூடியபோதும், ரகளை தொடர்ந்து கொண்டிருக்கவே, சபை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது."இந்தப் பிரச்னை தொடர்பாக, விவாதம் நடத்த வேண்டும்' என, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தும், சமாஜ்வாதி கட்சி எம்.பி., சைலேந்திர குமாரும், நோட்டீஸ் கொடுத்திருந்தனர். ஓட்டெடுப்பு இல்லாமல் நடத்தப்படும், இந்த விவாதத்திற்கு, சபாநாயகர் மீராகுமார் அனுமதி அளித்திருந்தார்.ஆனால், பார்லிமென்டில், நேற்றைய நிலைமை, சிறிதளவு கூட முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. எதிர்க்கட்சிகள் எந்த வகையிலும், பின்வாங்க தயாராக இல்லாத காரணத்தால், அமளி கடுமையாக இருந்தது; இதையடுத்து, அந்த விவாதமும் நடைபெற முடியாமல் போனது.
புதிய திருப்பம்:
"பிரதமர் பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையோடு சேர்த்து, "ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்' என்று, பா.ஜ., கோரிக்கை வைத்துள்ளது. இதே கோரிக்கையை, நேற்று இடதுசாரிகளும் கையில் எடுத்தன. இதனால், இப்பிரச்னையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது."இப்போது பிரச்னைக்கு உள்ளாகி இருக்கும், நிலக்கரி சுரங்கங்களின் அனைத்து உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும்; அதன்பின், பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும்' என, இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, நேற்று, நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் பிரச்னையில், சி.ஏ.ஜி., பல விவரங்களை சுட்டிக்காட்டியது; அப்போதும், இதேபோலவே அரசு பேசியது. பின், சுப்ரீம் கோர்ட் முன், இந்த ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களும், கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது.இப்போது, நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடான வகையில் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதனால், அரசாங்கத்திற்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் வரை, நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், சி.ஏ.ஜி., சொல்லியுள்ளது.ஸ்பெக்ட்ரத்தைப் போலவே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும், நிறைய குறைபாடுகளை, சி.ஏ.ஜி., சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த பிரச்னையையும், ஸ்பெக்ட்ரத்தைப் போலவே, பிரசாந்த் பூஷன் போன்றவர்கள், சுப்ரீம் கோர்ட்டிற்கு கொண்டு சென்று, வழக்கு தொடரலாம்.நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரித்து விட்டு, இப்போதைய சுரங்க ஒதுக்கீடுகளையும், சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யலாம். இதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எனவே, இந்த பிரச்னைக்கு முதற்கட்டமாக, அனைத்து ஒதுக்கீடுகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதன்பின், பார்லிமென்டில், இதுகுறித்த விவாதத்தை நடத்த அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு யெச்சூரி கூறினார்.
இதுவரை, பா.ஜ., மட்டுமே, "சுரங்க உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இடதுசாரி கட்சிகளும், அதே கோரிக்கையை முன்வைத்துள்ளது, மத்திய அரசுக்கு புதிய நெருக்கடியை அளித்துள்ளது.எதிர்க்கட்சிகள் மத்தியில், பிளவுகள் இருக்கும் வரை, இப்பிரச்னையில் தங்களுக்கு பெரிய ஆபத்து இல்லை என, காங்கிரஸ் கருதி வந்த நிலையில், இடதுசாரிகளின் முடிவு, காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னரே முடியுமா?
எதிர்க்கட்சிகளின் பிடிவாத போக்கால், "நடப்பு மழைக்கால கூட்டத்தொடர், முன்கூட்டியே முடிவடையும்' என்ற கருத்து நிலவியது. ஆனால், "முன்கூட்டியே கூட்டத்தொடரை முடித்துக் கொள்ளும் திட்டம் ஏதும் இல்லை; இப்பிரச்னையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும் திட்டமும் இல்லை' என, மத்திய அரசு வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்து உள்ளன.மழைக்கால கூட்டத்தொடர், செப்., 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, இதுவரை தொடர்ச்சியாக எட்டு நாட்கள், கூட்டத் தொடர் வீணாகியுள்ள நிலையில், மேலும், 10 நாட்கள் வீணாகப்போவதும் உறுதியாகியுள்ளது.
சோனியா தீவிரம்:
லோக்சபாவில் நேற்று, எப்போதும் இல்லாத வகையில், எதிர்க்கட்சி வரிசைக்கு வந்து, முலாயம்சிங்குடன் சோனியா பேசினார். அவரிடம், 10 நிமிடங்கள் வரை, பேசிக் கொண்டிருந்த சோனியா, பின், சபை ஒத்திவைக்கப்பட்ட போது, மைய மண்டபத்திற்கு வந்தார்.நீண்ட நாட்களுக்கு பிறகு, சோனியா இங்கு வந்ததால், காங்கிரஸ் எம்.பி.,க்கள் பலரும், அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். பிரணாப் முகர்ஜி இல்லாத நிலையில், பிரச்னைகளை தானே முன் வந்து, சமாளிக்க முயல்கிறார் எனக் கூறப்பட்டாலும், தற்போது எழுந்துள்ள புதிய சிக்கலில், சோனியா திணறுவதையே, இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன என்றும் கூறப்படுகிறது.
இங்கு பயிற்சி கொடுக்காதே:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்னையால், பார்லிமென்டில், தொடர் அமளி நிலவி வரும் நிலையில், நேற்று இன்னொரு பிரச்னையும் சேர்ந்து கொண்டது. இந்த அமளியில், தமிழக எம்.பி.,க்கள் தீவிரமாக பங்கேற்றனர்.இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுவதை எதிர்த்து, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,- எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர். கேள்வி நேரத்தின் போதும், பூஜ்ஜிய நேரத்தின் போதும், இவர்களின் இந்த அமளி தொடர்ந்தது.லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலுமே, தமிழக எம்.பி.,க்கள், இந்த பிரச்னைக்காக குரல் கொடுத்தனர். பயிற்சி கொடுப்பதை கண்டித்து எழுதப்பட்ட, சில காகிதங்களையும் கைகளில் பிடித்தபடி நின்றனர்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.