சொத்து குவிப்பு, நில ஆக்கிரமிப்பு, அவதூறு என, பல வழக்குகளால் தடுமாறும் தி.மு.க., தலைமைக்கு, இதையெல்லாம் விட, "டென்ஷன்' கொடுப்பது, கோஷ்டிமோதல் பஞ்சாயத்துகள் தான். அதிகார மையங்களின் ஆதரவாளர்களாக, மாநிலத்தின் பல பகுதிகளிலும், "பிரிந்து' கிடக்கும், "உடன்பிறப்புகளை' சமாதானப்படுத்துவதும், சமரசம் செய்து வைப்பதும் கருணாநிதியின் முக்கிய வேலையாக மாறி விட்டது என்று வருந்துகின்றனர் தி.மு.க., முன்னணி தலைவர்கள்.
அறிவாலயத்தில் சமீபத்தில் நடந்த மூன்று, "பஞ்சாயத்து'கள், கருணாநிதியை கவலைப்பட வைத்ததாக கூறும், தி.மு.க.,வினர், அது குறித்து தெரிவித்த விவரம்:
ஜாதி விவகாரம்:
கன்னியாகுமரியில் நடந்த, "டெசோ' மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில், பங்கேற்க சென்ற எம்.பி.., கனிமொழியை வரவேற்று, "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. கருணாநிதியின் பாசக்கனியே, கழகத்தின் மொழியே, எங்களின் அடையாளமே வருக' என்ற வாசகங்கள், இடம் பெற்ற போஸ்டர்கள், "நாடார் பேரவை' சார்பில், நெல்லையில் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டரில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, காமராஜர், மறைந்த நாடார் சங்க பேரவை தலைவர் கராத்தே செல்வின், கனிமொழி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, அவருக்கு ஜாதி ரீதியாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என, கருணாநிதியிடம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பு போஸ்டர்:
அடுத்த விவகாரம், சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபுவின் ஏற்பாட்டில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள். "மாற்றம் ஏற்படும் என நம்புவோமாக' (change we beleive in) என்ற வாசகத்துடன் கூடிய இந்த போஸ்டரில், கருணாநிதியின் படம் ஓவியமாகவும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நிற்பது போல் பெரியதாக இடம் பெற்றிருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன், ஓபாமா பயன்படுத்திய வாசகம் என்பதால், அ.தி.மு.க., ஆட்சி மாற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த போஸ்டர்களை சேகர்பாபு அடித்து உள்ளார். ஆனால், கனிமொழி தரப்பில், "கருணாநிதியின் தலைமையில் மாற்றம் தேவை' என்ற நோக்கோடும், "ஸ்டாலின் தான் அடுத்த தலைவர்' என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டவே, இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாக, கனிமொழி தரப்பில் புகார் ஓலை வாசிக்கப்பட்டுள்ளது.
விளக்க நோட்டீஸ்:
தி.மு.க.,விற்கு அடிக்கடி தலைவலியை கொடுக்கும், மதுரை பஞ்சாயத்துதான், மூன்றாவது விவகாரம். மதுரையில் சமீபத்தில் நடந்த, "டெசோ' மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில், நடிகை குஷ்பு பங்கேற்றார். இந்தக் கூட்டத்தை, மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்கள் சிலர் புறக்கணித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமைக்கு புகார் வந்தது. இதற்கு விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று விவகாரங்களும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை கவலைக்குள்ளாகி விட்டதாக கூறுகின்றனர் தி.முக.,வின் முன்னணி நிர்வாகிகள்.
அவர்கள் கூறியதாவது:
கட்சி தலைமையின் அதிகார மையங்களாக ஸ்டாலின், அழகிரி ஆகியோர் விளங்குகின்றனர். திகார் சிறை வாசத்திற்கு பின், கனிமொழியின் முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கையினால், அவரும் மூன்றாவது போட்டியாளராக மாறியுள்ளார். இவர்களின் ஆதரவாளர்கள் ஏற்படுத்தும் கலகமே, பஞ்சாயத்துகளுக்கு வழிவகுக்கிறது.
கண்டுகொள்ளவில்லை:
நெல்லை விவகாரத்தை பொறுத்தவரை, கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். அங்கிருந்து, காரில் நெல்லை வழியாக சென்ற போது, அவரை வரவேற்க, கட்சியினர் யாரும் வரவில்லை. நாடார் பேரவை நிர்வாகிகள் மட்டும் வரவேற்றுள்ளனர். அன்றைய தினம் ஸ்டாலின் நெல்லையில் இருந்ததால், அவர்கள் கனிமொழியை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், அதே நெல்லை மாவட்ட பிரமுகர்கள் சிலர், "ஜாதி ரீதியாக கனிமொழிக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது' என்ற புகாரை, கருணாநிதிக்கு தெரிவித்துள்ளனர். அதற்கு கருணாநிதி, "தானாகவே வந்து ஆதரவு கொடுத்தால் எந்த அரசியல்வாதி வேண்டாம் என சொல்ல முடியும்' எனக் கூறி, புகாரை தலைவர் தட்டிக் கழித்து விட்டார்
சரியான அர்த்தம் தான்:
சேகர்பாபுவின் போஸ்டர் விவகாரத்தையும், கனிமொழி தரப்பில் கருணாநிதியிடம் புகார் எழுப்பப்பட்டது. தி.மு.க., தலைவராக நீங்கள் இருக்கும் போது, "மாற்றம் தேவை' என்று எப்படி போஸ்டர் போட, ஸ்டாலின் அனுமதிக்கலாம்? உங்கள் படத்தை சிறியதாக போட்டு விட்டு, ஸ்டாலின் படத்தை மட்டும் பெரியதாக போடுவது, எந்த வகையில் நியாயம்? என்று பஞ்சாயத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரையும் அழைத்து, விசாரணை நடத்தியபின், "போஸ்டரின் வாசகத்தில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்ற அர்த்தத்தில் தான் இடம் பெற்றுள்ளது. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், அவரது படத்தை பெரியதாக போடுவதில் ஒன்றும் தவறில்லை' எனக் கூறி கனிமொழி தரப்பினரை சமாதானப்படுத்தியுள்ளார். ஆளுங்கட்சியின் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு நேரம் ஒதுக்க முடியாமல், கட்சியில் ஏற்படும் இந்த, கலகங்கள் கட்சித் தலைமையை பாதித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எந்தக் கட்சியில் கோஷ்டிப் பிரச்சினை இல்லை? ஆனால் தி.மு.க வில் சிறிய அளவிலான பிரச்சினை என்றாலும் எல்லோராலும் பூதாகரமாக ஆக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. கருணாநிதி குடும்பம் என்றால் பத்திரிக்கைகளுக்கும், விமர்சகர்களுக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரி இருக்கிறது. ஜெ - சசிகலா பிரிவு, சசி உறவினர்மீது வழக்குகள், மீண்டும் சேர்ந்தது பற்றி யாராவது மூச்சு விடுகிறார்களா என்றால் இல்லை. தி.மு.க வைப் பொறுத்தவரை ஸ்டாலின், அழகிரி ஆகியோர் தலைமுறை கடந்து வயதாகிவிட்டதால், அடுத்த தலைமுறை தலைவராக கனிமொழி உருவெடுத்து வருகிறார். தன் அமைதியான அணுகுமுறையினாலும், யதார்த்தமான பேச்சினாலும் தி.மு.க விழும், வெளியிலும் தன்னுடைய ஆதரவைப் பெருக்கிகொண்டிருக்கிறார். இது பலருடைய கண்ணையும் உறுத்தச் செய்திருக்கிறது.
@மரியா அவர்களே எப்போதும் திமுக பற்றி ஒரு குற்றம் சொன்னால் அதிமுக பற்றி சொல்லி சமாளிக்க முயல்கிரிர்கள் . இங்கு எழுதுபவர்கள் அனைவரும் ஒன்று திமுக காரன் அல்லது அதிமுக காரன் என்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கிறிர்கள் . ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் . தமிநாட்டில் வாக்களர்களில் எப்படியும் 70 சதவிகிதம் , இவர்கள் இருவரையும் பிடிக்காதர்வர்கலாகத்தான் இருப்பார்கள் . ஆனால் வாக்கு என்று வரும்போது , தலை எழுத்தே என்று யாராவது ஒருவருக்கு போடா வேண்டி உள்ளது . 91 -96 ல் ஜெயா போட்ட ஆட்டத்துக்கு , வேறு வலி இல்லாமல் திமுகவுக்கு , 2006 - 11 ல் திமுக வின் கொலைகார ஆட்சியை எப்பாடு பட்டவாது தூக்கி எறிய ஜெயாவுக்கு என்று போடா வேண்டி உள்ளது . இப்படி விழும் ஓட்டுக்கள் positive ஓட்டு என்று எடுத்து கொண்டு , திமுகவுக்கு 25 % , அதிமுகவுக்கு 30 % என்று தவறாக கணக்கு போடப்படுகிறது . Actually இவர்களுக்கு விழும் ஓட்டு எல்லாமே நெகடிவ் ஓட்டுதான் . அதாவது ஜெயாவை நீக்க முகவுக்கு , முகவை நீக்க ஜெயாவுக்கு .
சார், நல்லா சத்தம் போட்டு அந்த மரியா அல்போன்சேவோட செவிடன் காதிலே ஜவ்வு கிழியற மாதிரி சொல்லுங்க சார்,.......... ................. கிட்ட தட்ட அதே நினைவுகளில் தான் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். வேற என்னத்தை பண்றது, வேற வழியில்லை என்று தான் போட வேண்டியது ஆகி விட்டது என்று தமிழ் மக்கள் மனதில் இந்த எண்ணம் தோன்றி வெகு நாட்களாகி விட்டது....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.