"மன்மோகன் சிங் தலைமையில்' என்று சொல்லப்படும், நிஜமாகவே சோனியாவின் தலைமையில் இயங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின், அபாரமான சாதனை, பல துறைகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களில் ஊழல்களே!
சமீபத்தில் தெரியவந்த ஊழல், தனியாருக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கியதில், முறைகேடு, 1.86 லட்சம் கோடி ரூபாய் என்பதே! "சி.ஏ.ஜி., எனப்படும் தலைமைக் கணக்காயர், கணக்கில் தவறு செய்துவிட்டார்' என்கிறார் பிரதமர். "தலைமைக் கணக்காயர், சூப்பர் அரசாங்கமா?' என, கேள்வி கேட்கிறார், மத்திய அமைச்சர் வயலார் ரவி. பிரதமரோ, இந்த அமைச்சரோ, ஊழல் நடக்கவில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாமே. "ஒப்பந்தங்களை ரத்து செய்யத் தயார்...' என்கிறாரே பிரதமர். சமுதாயத்தின் பிரதிநிதிகள், ஊழல் செய்பவர்களை எதிர்த்து, எதுவும் கேட்க முடியவில்லை. ஏனென்றால், ஊழல்வாதிகள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கின்றனர். கேள்வி கேட்பவர்களின் நேர்மையும், சந்தேகிக்கப்படுவதனால், கேள்விகளில் நியாயம் இருந்தாலும், மரியாதை இல்லாமல் போய் விடுகிறது.
இதுவரை நடந்த ஊழல்களை, தன் அசாத்ய மவுனத்தால் பூசி மெழுகினார் பிரதமர். நிலக்கரித் துறை ஊழல், அவர் நிர்வகித்து வரும் துறை சம்பந்தப்பட்டது என்பதால், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அவர் பதவி விலக வேண்டும் அல்லது ஊழல் நடக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல வேண்டும். அவர் இரண்டையுமே செய்யவில்லை அல்லது அவரது முதலாளி அவரை அப்படிச் செய்யவிடவில்லை. அவரால் சொல்ல முடிந்தது, சி.ஏ.ஜி.,யின் கணக்கு தவறு என்பது தான். தன்னால், ஒரு பைசா நஷ்டம் ஏற்பட்டாலும், அது கவுரவப் பிரச்னை. ராஜினாமா செய்கிறேன் என்று, அவர் ஏன் சொல்லவில்லை? கவுரவம் என்ற ஏதோ ஒன்று, தனக்கு இருப்பதாக பிரதமர் பதவி ஏற்றதிலிருந்தே, அவர் நினைத்ததில்லை. அதில் மட்டும், அவருக்கு நேர்மை இருக்கிறது; பாராட்டுவோம். ஊழல் இல்லை என்று சொல்ல முடியவில்லை; ராஜினாமாவும் செய்ய முடியவில்லை என்றால், முறைகேட்டைச் செய்தது யார் என்பதையாவது சொல்லலாமே... அந்த அளவுக்குக் கூட, தன் அமைச்சர்கள் மீதும், அதிகாரிகள் மீதும், அவருக்கு அதிகாரமோ, கவனமோ இல்லையா? தனக்கு ஒன்றும் தெரியாது என்று சாதிக்கும் ஒரே பிரதமர், இந்தியப் பிரதமர் தான். அவருக்குத் தெரிந்ததெல்லாம், மனைவி, மக்கள் மற்றும் உதவியாளர்களின் பெயர்களே. அமைச்சர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் என்றால், பாவம், திணறிப் போய் விடுவார். தன்னை ஆட்டுவிப்பவர், இன்னார் என்பதை அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. மக்களுக்குத் தெரியும்... லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்களுக்கும் நன்றாகவே தெரியும். அந்த நபர் வேறு யாருமல்ல; சோனியா தான். பின் ஏன், அவர்கள் சோனியாவை எதிர்க்கவில்லை? என்ன பயம்? என்ன பேரம்?
பார்லிமென்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியை அகற்றலாமே. அது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாமல் இல்லை. பின், ஏன் அவர்கள் அப்படிச் செய்யவில்லை? அதற்கு சில காரணங்கள் உண்டு. ஊழல் பற்றிய விவாதம் வந்தால், சில எதிர்க்கட்சிகளின் நிலைமையும் நாறிப் போகும். அங்கும், கரியிலும், கல்லிலும் காசு கண்டவர்கள் இருக்கின்றனர். இரண்டாவது பணம். உலகிலேயே மிகவும் வலிமையான அந்த பசை, எல்லாவற்றையும் ஒட்டி விடும். ஜனாதிபதி தேர்தலில், கூட்டணிக் கட்சிகளிடம் கொஞ்சம் உரசல்கள், விரிசல்கள் இருந்தன. அப்போது, பணம் எல்லாவற்றையும் ஒட்டியது. நான்கும், மூன்றும் ஏழு என்பதைக் கூட, தன்னைக் கேட்டு தான் மத்திய அரசு சொல்ல வேண்டும் என்று அடம்பிடித்த மம்தா பானர்ஜி கூட, ஜனாதிபதி தேர்தலில் மடங்கி விட்டார். "கரி விஷயத்தில், உங்களை ஆதரிக்கிறேன்; பிறவற்றில் என் பேச்சைக் கேளுங்கள்' என்றார். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், ஆளும் கூட்டணிக்கு நஷ்டம் ஏதும் இல்லை. கூடுதலாகக் கொஞ்சம் பசை செலவாகும்; அவ்வளவு தான்! பார்லிமென்ட் கூச்சல், தலைப்பாகையை மட்டுமே எதிர்க்கிறது; தலையை அல்ல. தேசிய வளர்ச்சிக் குழு என்ற, சாசனத்திற்குப் புறம்பான மத்திய அரசிற்கும், பார்லிமென்டிற்கும் மேலானதொரு அமைப்பை உருவாக்கி, அதற்குத் தலைமை தாங்கி, அரசு நடைமுறைகள், நிர்வாக முடிவுகள் எல்லாவற்றிற்கும், சூத்ர தாரியாக இருந்தபடி, மத்திய அமைச்சரவையை ஆட்டிப் படைத்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து, பிறகு நெருங்கி வந்து, பல மாயா ஜாலங்கள் செய்யும் சோனியாவை எதிர்த்து அல்லவா, எல்லாக் கட்சிகளும் போராட வேண்டும்?
தேசபக்தி அதுவல்லவா? காங்கிரசை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. பிற கட்சிகளிடமும், நூற்றுக்கு நூறு நேர்மை இருப்பதாக யாரும் சாதிக்க முடியாது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியும், கூட்டணி ஆட்சியும் சோனியாவிடம் இருக்கும் வரை, ஊழல்களை ஒழிக்க முடியாது. பிற கட்சிக்காரர்கள் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களை அழைத்து, அப்படி யாரேனும் இருந்தால், "உங்கள் கட்சி ஏன் வெளிநாட்டில் பிறந்த பெண்மணிக்கு அடிமையாகிப் போய் விட்டது? குட்ரோச்சி விவகாரம் முதல், எல்லாவற்றிலும் நீள்வதாக சந்தேகிக்கப்படும் கை, உங்கள் தலைவியின் கை தானே. எந்த ஊழலிலுமே அவரோ, அவரது குடும்பத்தினரோ சம்பந்தப்படவில்லை என்றால், அவர் அதைத் துணிச்சலுடன் சொல்லலாமே, ஏன் சொல்லவில்லை? இது உங்கள் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே அவமானம்' என்பதை எடுத்துச் சொல்லலாம். காங்கிரஸ்காரர்கள் தாமாக அவரை விலக்கி வைக்காத பட்சத்தில், "சோனியாவே வெளியேறு' என்ற இயக்கத்தைப் பிற கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் துவங்கலாம். ஏனென்றால், இதுவரை இல்லாத அளவுக்கு, லட்சக்கணக்கான கோடிகளில் பல துறைகளில் ஊழல் செய்யப்பட்டிருப்பதாக, தகவல்கள் வெளிவருவது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தான். சோனியா காலத்தில், நாடு இப்படி ஊழலுக்கு அடிமைப்பட்டுப் போய் விட்டாலும், கட்சிக்காரர்கள் தம் தலைவியை விட்டுக் கொடுப்பர் என்று சொல்ல முடியாது. பல கட்சிகளின் தலைமை, ஊழல்களில் உழல்கிறது; அதனால், பல மாநிலங்களில் ஆட்சி சீரழிந்து விட்டது. மத்திய தலைமை ஒழுங்காக இருந்தால், மாநிலங்களின் ஆட்சியை ஒழுக்குப்படுத்தலாம். மத்திய தலைமை பெரிய பெரிய ஊழல்களைச் செய்தால், அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள், தம்மளவுக்கு ஏதோ கொஞ்சம் கொள்ளையடிக் கின்றனர். நிஜத்தை விட்டு விட்டு, நிழலைத் துரத்தும் எதிர்க்கட்சிகள், ஊழல் ஆட்சிக்குப் பின்னே உள்ள சோனியாவை அரசியலிலிருந்தும், பொது வாழ்விலிருந்தும் அகற்றும் திட்டத்தை முன்வைத்து, இந்தியாவின் இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தைத் துவங்கலாம். மன்மோகன் சிங் வெறும் நிழல்! புரிகிறதா? இ-மெயில்: hindunatarajan@hotmail.com
- ஆர்.நடராஜன், சமூக ஆர்வலர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திரு .ஆர் நடராசன் அய்யாவின் கருத்துக்களை மதிக்கிறேன்....மன்மோகன் நிழல் தான்...மன்மோகனை தான் எதிர்கட்சிகள் துரத்துகின்றனவே தவிர சோனியாவை அல்ல, என்று நீங்கள் இடிதுரைத்ததன் மூலம் ஓன்று தெளிவாக புலபடுகிறது... எதிர்கட்சிகளுக்கு தேவை ஆட்சி மாற்றம் அவ்வளவே... ஊழலுக்கு எதிராக அவர்கள் போராடுவதாக சொல்லி கொண்டால் நியாயப்படி சோனியாவுக்கு எதிராக தான் போராட வேண்டும், ஏனென்றால் அதிகாரம் சோனியா கையில் என்பதை நாடறியும்... ஆனால் எதிர்கட்சிகளுக்கு அந்த திராணி இல்லை என்பது அல்ல... அவர்களும் ஊழல் சிக்கலில் உள்ளார்கள் என்பது மட்டும் அல்ல... அதையும் மீறி, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஊழல் செய்ய வேண்டும் என்ற பேராசை தான் காரணம்... ஆட்சிக்கு வரத்தான் எதிர்கட்சிகள் துடிக்கின்றனவே தவிர ஊழலை எதிர்க்க அல்ல... இதற்க்கு நல்ல உதாரணம் BJP ஆறு வருடம் நாட்டை ஆண்டது...அப்போது அவர்கள் போபர்ஸ் ஊழலை எப்படி கையாண்டார்கள் என்பதை நாடறியும்...போபர்ஸ் ஊழல் பற்றி வாயே திறக்காமல் தான் BJP யின் ஆறாண்டு கால ஆட்சி நடந்தது என்பதை மறுக்க இயலுமா? ..நம்மில் பலர் BJP வந்தால் ஊழல் குறைந்துவிடும் என்று சொல்வதை நம்பினால் நானும் முட்டாள் தான்... ஏனென்றால் இந்தியாவில் எந்த கொம்பனாலும் ஊழலை ஒழிக்க முடியாது... ஒரு சின்ன உதாரணத்துடன் சொல்கிறேன்... ஊழல் என்பது ஏதோ சோனியா சம்பந்தப்பட்டது என்று நாம் பட்டம் கட்டினால், இந்தியாவில் ஊழல் செய்யும் அத்தனை பேருக்கும் சேர்த்து சோனியாவை பழி சுமத்துவதாகவே ஆகும்...சோனியா வருகைக்கு முன்னும் இந்தியாவில் ஊழல் இருந்தது... நம் நாட்டில் இருக்கும் கட்சிகள் எத்தனை ? பெரிய கட்சிகள் காங்கிரஸ் / BJP / கம்யுனிஸ்ட் - இவர்களில் பதவி பெறுவோம் என்ற ஆசையுடன் நாடு முழுதும் இருக்கும் தொண்டர்கள் குறைந்தது காங்கிரஸ் க்கு என்று 25 லட்சம் பேரும், BJP க்கு 20 லட்சம் பேரும், கம்யுனிஸ்ட்களுக்கு 10 லட்சம் பேரும் ஆக 55 லட்சம் ஆகிறது...அடுத்து மாநில கட்சிகள் DMK / ADMK /DMDK / PMK / VC / பலவகையான ஜனதாதளங்கள் / ஜெகன் கட்சி / நாய்டு - மம்தா கட்சிகள் / SP / BSP / அகாலிதளம் / சிவ சேனாக்கள் / காஷ்மிரி முஸ்லிம் கட்சிகள் - இவர்களின் தொண்டர்கள் குறைந்தது பதவி ஆசையுடன் கட்சிக்கு 1 லட்சம் பேர் இருந்தாலும் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இந்தியா முழுதும் இருப்பார்.... ஆக மொத்தம் இந்தியாவில் உள்ள பதவி ஆசை பிடித்த அணைத்து கட்சி தொண்டர்கள் மட்டும் கிட்டத்தட்ட 75 லட்சம் பேர் இருக்ககூடும்...அடுத்து உள்ளாட்சி பதவிகளில் ஒரு மாநிலத்துக்கு 1 லட்சம் பேர் என்று வைத்துகொண்டால் கூட 20 லட்சம் பேர் உள்ளாட்சி பதவிகளில் இருப்பர்... இவர்களில் பலர் கட்சி தொண்டர்களாகவும் இருக்ககூடும் ...ஆக குறைந்தது 80 லட்சம் கட்சியினர் கட்சிகளை நம்பி இருக்கிறார்கள்... இவர்களை யாராவது ஊழல் செய்யாமல் நிர்வாகம் நடத்துவார்களா? அதுமட்டும் அல்லாமல் ஒப்பந்தகார்கள்/ அரசியல் வாதிகளின் பினாமிகள் என்று ஒரு மாநிலத்துக்கு 1 லட்சம் பேர் என்றாலும் அது ஒரு 20 லட்சம் பேராகும்...மொத்தத்தில் கூட்டினால் 1 கோடி மக்கள் கட்சிகளை நம்பி , அரசாங்கத்தை நம்பி ஊழல் செய்ய இந்தியாவில் தயாராக உள்ளனர்....அடுத்து மத்திய மாநில அரசு ஊழியர்கள் , இவர்களின் எண்ணிக்கை நிச்சயம் பல லட்சங்களை தாண்டும்...பெரும்பாலானான அரசு ஊழியர்கள் ஊழல்வாதிகள் என்பதனால் தான் ஹசாரே குழு கூட , அவர்களையும் லோக்பாலின் கீழே கொண்டுவர வேண்டும் என குரல் எழுப்புகிறது..கிட்டத்தட்ட 1 கோடி மத்திய மாநில அரசு ஊழியர்கள் இருக்கிறார்களாம்... இவர்களில் ஊழல் ஒரு 25 % பேர் செய்கிறார்கள் என்று வைத்து கொண்டாலும் கட்சி காரர்களையும் சேர்த்து மொத்தம் 1 கோடியே 25 லட்சம் வருகிறது....அடுத்து, வரி ஏயிப்பு செய்யும் பணமுதலைகள், எப்படியும் இந்தியா முழுதும் மாநிலத்துக்கு 10 லட்சம் என்று வைத்து கொண்டாலும் ஒரு 2 கோடி பேர் வருவார்கள்....இதில் உலக மகா பணக்கார பணமுதலைகளும் அடங்குவர்... இப்போது எல்லாவற்றையும் கூட்டி பாருங்கள்... கிட்டத்தட்ட 3 . 5 கோடி பேர் ஊழல் செய்ய, அல்லது ஊழலில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈடுபட்டுள்ளனர்... இவர்களை நம்பி கிட்டதட்ட ஒருவருக்கு 4 பேர் என்று வைத்து கொண்டாலும் 14 கோடி பேர் வருகிறார்கள்...ஆக இந்தியாவின் மக்கள் தொகையில் 15 % பேர் அரசியல் சார்ந்த ஊழல் , அல்லது அரசுகளை ஏமாற்றி வரி ஏயிப்பு ஊழல் செய்தவர்களாகவே இருக்கிறார்கள்...அடுத்து லஞ்சம் கொடுத்தவர்கள் என்ற பட்டியலில் நாமெல்லாம் கூட இருப்போம்... நிச்சயம் இந்தியாவில் உள்ள 80 % மக்கள் ஏதாவது ஒரு விதத்தில் லஞ்சம் கொடுத்தவர்களாகவே இருப்பார்கள்...அதுவும் குற்றம் அல்லவா? அடுத்து கடைசியாக இந்தியாவில் நிலம் / வீடு / மனை வைத்திருக்கும் மக்கள் அனைவரிலும் 90 % நிச்சயம் அரசை ஏமாற்றி வரி ஏயிப்பு செய்து, கருப்புப்பணம் டீலிங் பண்ணியவர்கள் தான் என்ற உண்மையை மறுத்தால் , அது நம் தலையிலேயே நாமே மண் அள்ளி போட்டு கொள்வதற்கு சமம்...அரசுக்கும் தெரியும்.... FIXED ASSETS உள்ள அனைவரிடமும் கருப்பு பணம் புழங்குகிறது என்று... நியாயமான அரசுகள் அல்லவா , கண்டும் காணாமல் விட்டு விடுகிறது..... சோனியாவே வெளியேறு என்ற கோஷத்துக்கு முன்னர் அடிமட்டத்தில் இருந்து ஊழலே வெளியேறு என்ற கோஷம் தான் இந்தியாவிற்கு பொருத்தமானது..ஏனெனில் அநேக இந்தியரின் ஜீன்களில் ஊழல் என்னும் வியாதி ஒட்டி கொண்டுள்ளது.... திரு.நடராசன் அய்யாவின் கருத்துக்கள் வழக்கம் போல அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது... உரக்க சிந்தனையில் அவரது கட்டுரைகள் எப்போதுமே சிந்திக்க தூண்டும் விதத்தில் இருப்பது தனி சிறப்பு....
வெளி நாட்டவர் நமது அரசியழலில் ஈடுபடுவது தவறு இல்லை. ஆனால் அது நாடு மீது பற்றுடன் இருக்க வேண்டும். உ ம் பெசன்ட் அம்மையார். ஊழலில் நமது அரசியல் வாதிகளுடன் போட்டி போட வெளி நாட்டவர் தேவை இல்லை. இப்போதைய அரசின் செயல் பாடு நமது அரசியல் அமைப்பின் அஸ்திவாரத்தையே குறி வைத்து தகர்க்க பார்கிறது. தேர்தல் அதிகாரிகளை கட்டுபடுத்துதல்,தணிக்கை அதிகாரியினை தாறுமாறாக விமரிசனம் செய்வது. எதிர்த்து கேள்வி கேட்கும் சமூக சேவகர்களின் நம்பகத்தன்மையினை சந்தேகிப்பது. நீதி துறையை தவிர எல்லா துறைகளையும் குறை சொல்கிறார்கள். RBI கூட இவர்களிடமிருந்து தப்பவில்லை.
நம்மிடம் இயல்பாகவே சிறிது அடிமை புத்தி இன்னும் உண்டு, வெள்ளய்யன் போய் பல ஆண்டுகள் ஆகியும் இந்த நிலைமை. ஆகவேதான் இதனை சகித்து கொண்டு இருக்கிறோம்.
பலருக்கு இன்றைய நிலை புரிவதில்லை. ஊழல் பணமூட்டைகளின் பேச்சை கேட்டு, அவர்கள் சொல்கிறபடி வாக்களித்து, கொள்ளைகளுக்கு உடன் போனால் பாதுகாப்பான வாழ்க்கையும், இப்போதைக்கு ஒரு பெட்டியும் தேர்தலுக்கு உதவிகளும் கிட்டும். ஆனால் ஊழலை எதிர்தாலோ,உயிருக்கு ஆபத்து,ஊடகங்கள் சிலவற்றை வாங்கி அவை வழியே அவதூறு செய்தி வதந்தி , வருமானவரி, சி பி ஐ ரெய்டு மிரட்டல். மற்றும் நடை பயிற்சிகூட போகமுடியாத நிலைமை சொல்லுங்கள் .எது அரசியலில் தொடர வழி? நல்லெண்ணத்துடன் மக்களுக்காகப் போராடத் தயாரானால் சில நாட்களுக்குள் உங்கள் கதையையே முடித்துவிடுவர்.பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை அந்நியரிடம் மீண்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு,இப்போ வருந்தி என்ன பயன்?
பா.ஜ.க.வுக்கு உரைக்கும் விதத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எழுதியிருக்கலாம். சோனியாவை கண்டால் பா.ஜ.க. வினருக்கும் கொஞ்சம் தொடை நடுங்குகிறது, அதற்கு காரணம் ஆண்டினோவின் அடியாள் பலமா? அதிகார பலமா? பண காலமா? பா.ஜ.க. தன்னிடம் உள்ள சில குறைகளை கழைந்து விட்டு சோனியாவுக்கு, காங்கிரசுக்கு எதிராக வியூகம் வகுக்க வில்லை என்றால் மக்கள் அடுத்த ஒரு கட்சியை எதிர் பார்ப்பதை தவிர வேறு வழி இல்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.