தினமலர்- வாரமலர் சார்பில் வருடந்தோறும் வாசகர்களை குற்றால டூர் அழைத்துச் செல்வது அனைவரும் அறிந்ததே, டூருக்கு தேர்வான வாசகர்களை அவர்களது வீட்டிற்கே நேரில் போய் திருமணத்திற்கு அழைப்பது போல அழைத்து, அவர்களை வாழ்க்கையில் மறக்கவே முடியாத அளவிற்கு கவனித்து அனுப்புவது கடந்த 24 வருடங்களாக நடந்துவருகிறது.
இந்த வருடம் டூருக்கு தேர்வான வாசகிகளில் ஒருவரை சந்தித்த சுவராசியமான அனுபவமிது...
நம்மில் சிலர் வீடுகளில் உள்ள "டி.வி.,' பெட்டி மீதும், ஷோ- கேஷ்களின் மீதும் பூனை பொம்மை வைத்திருப்போம். ஆனால் விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி, பாரதமாதா தெருவில் உள்ள வாசகி ராதிகாவின் வீட்டில் "டி.வி.,' பெட்டி மீதும், ஷோ- கேஷ்களிலும் மட்டுமின்றி திரும்பிய இடங்களில் எல்லாம் நிஜமான பூனைகளை வைத்திருந்தனர்.
நிறைய பூனைகள் வளர்க்கிறீர்களா? என்று கேட்டபோது ஆமாம் ஒன்பது பூனைகள் வளர்க்கிறோம் என்று பதில் வந்தது. ஒன்பது பூனைகளா! என்று ஆச்சர்யப்பட்டபோது, பதினைந்து பூனைகள் வளர்த்து வந்தோம், அதில் ஆறு பேருக்கு சின்ன மனஸ்தாபம், அதுனாலே வீட்டைவிட்டு வெளியே போய்ட்டாங்க...என்றார்.
சிறிது நேரம் பிரிந்து போனவர்களை நினைத்து சிறு சோகத்தில் இருந்தவர் மீண்டு வந்து, மீதமுள்ளவர்களை நமக்கு அறிமுகம் செய்துவைத்தார். பெப்சி, சேட், கூகூ, லாடு, சாது... என்று சொல்லிக் கொண்டே போனவரை இடைமறித்து, "நீங்க சொன்னதிலேயே "சாது'ங்ற பெயர்தான் புரியுது, அவர் யார்? எங்கே இருக்கிறார் என்றதும், அவரா... அதோ நீங்க வாசல்ல கழட்டிப்போட்டிருக்கிற "ஷாக்சை' கடிச்சு மேய்ஞ்சுட்டிருக்கிறாரே, அவர்தான் "சாது' என்று சுட்டிக்காட்டினார். கால் ஷாக்சின் நிலமை பரிதாபமாகிக் கொண்டு இருந்தது, பதட்டப்பட்டு சத்தம் போட்டதும், ஐயோ "சாதுவ' அதட்டிராதீங்க... உங்க மேலே "உச்ச' போய்விடுவான் என்றதும் பதட்டத்தை அடக்கிக்கொண்டு நான் "சாது'வானேன்.
இதுக்கே மலைச்சு போய்ட்டீங்களே... நாங்க நாய் வளர்த்த கதையையும் கேளுங்க... நிறைய நாய் இருந்துச்சு, அதுல ஓண்ணு ரொம்ப கோபக்காரர், அவரு எதிர்ல உட்கார்ந்து யாராவது கையை ஆட்டி, ஆட்டி பேசினா, அப்படியே பேசிக்கொண்டு இருக்கணும், மறந்து போய் கையை மடக்கினா பாய்ஞ்சு கடிச்சுடும், எங்க வீட்டிற்கு வந்த பாட்டி ஓருத்தங்க உரல் உலக்கையில் வெற்றிலை பாக்கு போட்டு இடிச்சு சாப்பிடுவாங்க... அவுங்க வெற்றிலை இடிப்பதை தலையை ஆட்டி, ஆட்டி பார்த்துக் கொண்டு இருந்த அந்த நாய், வெற்றிலை இடிப்பதை நிறுத்தியதும் கடிச்சுடுச்சு, அப்புறம் பாட்டியோட கோபமும், சாபமும் தாங்கமுடியாம நாயைக் கொண்டுபோய் வேறுவீட்டில விட்டுவிட்டோம்., என்று மறுபடியும் நாயை இழந்த சோகத்திற்குள் ராதிகா மூழ்கினார், நமக்கோ அந்த நாய் போன வீட்டில் உள்ளவர்களின் நிலமையை நினைத்து பார்த்து மனம் துக்கப்பட்டது.
எங்க வீட்டு பூனைங்களுக்கு பால் கொடுப்பதற்காக மாடு வளர்த்தோம், பூனைங்க எண்ணிக்கை குறைஞ்சுட்டாதால மாட்டை வித்துட்டோம். இப்ப ஆவின் பாலால எங்க பூனைங்க வளருது. பால்னு இல்ல எது நாம சாப்பிடுறோமோ அதை சாப்பிட்டுக்கும். ஒவ்வொருத்தருக்கு ஒரு இடம் பிடிக்கும், சேட் பூனைக்கு வீட்டில் உள்ள ஊஞ்சல்னா ரொம்ப பிடிக்கும், அது ஊஞ்சல்ல இருக்கிற வரை யாரையும் ஊஞ்சல் பக்கம் வரவிடாது. மிக்சர், கருவாட்டுக்குழம்புன்னா எல்லோருக்கும் ரொம்ப பிரியம், தட்டுல ஒரே அளவுல வச்சு சாப்பிடுன்னு சொல்லணும், அப்பதான் சாப்பிடுவாங்க...ஒருத்தருக்கு மிச்சரோட அளவு குறைஞ்சுருந்தாலும் கோவிச்சுட்டு போய்டுவாங்க, அப்புறம் சமாதானப்படுத்திதான் சாப்பிட வைக்கணும்.
தனித்தனி படுக்கை எல்லாம் கிடையாது... எல்லோரும் எங்க பக்கத்துலயே படுத்துக்குவாங்க... விடிஞ்சு பார்க்கும்போது நாங்க கீழே படுத்துருப்போம், இதுங்கதான் பாய்ல படுத்துருக்குங்க...
மனித நேயத்தையும் தாண்டி பூனைகளை உறவாக மட்டுமின்றி, உயிராகவும் கருதி வளர்க்கும் ராதிகா சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில், "உங்களுக்கு மட்டும்தான் வீடு வாடகைக்கு விட்டுருக்கோம், உறவுக்காரங்களுக்கு கிடையாது, அதுனால அநாவசியமா யாரும் வரப்போக இருக்கக்கூடாது, அப்படியே தவிர்க்கமுடியாம வந்தாலும், வரவேற்பறையோட போயிடணும், அதைதாண்டி குளியலறை பக்கம் போகவிடக்கூடாது, ஏன்னா தண்ணீர் கஷ்டம், அப்புறம் ரொம்ப, ரொம்பமுக்கியமான விஷயம், இந்த நாய், பூனை எல்லாம் வளர்க்கலாம்ங்ற எண்ணமே இருக்கக்கூடாது''., என்று கடுவன் பூனையாக, கறராக சொல்லி சாவியை கொடுத்த, கொடுக்கும் சென்னை அபார்ட்மெண்ட் உரிமையாளர்களின் கலாச்சாரம் இந்த நேரம் அலையாக வந்து போனது.
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பூனை வளர்ப்பது கெடுதல். பூனைகளிமிருந்து ஒரு நுண் கிருமி பரவும். அதன் பெயர் Toxoplasma gondii . இந்த கிருமி எலிகளின் உடலில் புகுந்தால், எலிகள் பூனை பயம் நீங்கி பூனையைத் தேடி தானே வரத் தூண்டும். பொதுவாக கிருமிகள் உடலை பாதிக்குமே தவிர மூளை எண்ணங்கள் உணர்வுகளை பாதிக்காது என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கையில் இந்த ஆராய்ச்சி முடிவு அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் ஆய்வு செய்து பார்த்ததில் இந்த கிருமி மனிதர்களையும் பாதிக்கும், தற்கொலை உணர்வுகளைத் தூண்டும் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். எனவே பூனை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஆதாரம்: 7/05/2012 தேதி இட்ட Forbes magazine. இந்தக் கட்டுரையைப் பார்க்கவும் : Is Your Cat Hosting a Human Suicide Parasite? தின மலர் இதை செய்தியாகவே வெளியிட வேண்டும். பூனை வளர்த்தல் மிகவும் கேடானது.
பூனை பழமொழிகளை கேட்டு அவற்றை வெறுக்காதீர்கள் மனிதனின் அன்புக்காக ஏங்கும் இந்த ஜீவன்களை வளர்க்கமுடியாவிட்டலும் ஆண்டவனின் இந்த படைப்புகளை புரிந்துகொள்ளுங்கள் சென்னைவாசிகளே பூனையை வெறுத்தால் எலி இடமிருந்து தப்ப வேறு வழியே இல்லை corporation நாய்தான் பிடிப்பார்கள் எலிகளை எலிமருந்துபோட்டு கொன்றால் pleague தான் பரவும் பூனைவளர்தால் புண்ணியம்தான் ஜீவகாருன்யம்தான் பூனைக்கு கைகொடுப்போம் புண்ணியத்தை வளர்ப்போம் ..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.