ஒரு வீடு ஒரு வாரம் சோகம் மேகம் சூழ்ந்த இடமாகவும், அதே வீடு மறு வாரம் சொர்க்கத்தின் அடையாளமாகவும் மாறுவது சினிமாவிலும், கதையிலும் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம், ஆனால் நிஜத்தில் சாத்தியமாகுமா என்றால் ஆகும் என்பது நிரூபணமாகியிருக்கிறது. இதில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதை சாத்தியப்படுத்தியவர்கள் தினமலர் இணையதள வாசகர்களாகிய நீங்களேதான். உங்களை நேரில் பார்த்தால் பாதத்தில் பூ போட்டு நன்றி சொல்ல காத்திருக்கிறது, அந்த வீடும் வீட்டில் உள்ளோரும்.
நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்
சென்னை டிநகர் வரதராஜன் தெரு கதவிலக்கம் 26ல் குடியிருக்கும் ஓட்டல் தொழிலாளி எஸ்.கிருஷ்ணமூர்த்தி- பிருந்தா (வீட்டு வேலை செய்பவர்) தம்பதியினரின் மூத்த மகன் கோகுலகண்ணன். நல்ல மார்க்குகள் வாங்கி என்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தும் ,பொருளாதாரம் காரணமாக படிக்க முடியாமல் போய்விடும் என்ற நிலை கடந்த வார நிஜக்கதையில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது, இதை படித்த வாசகர்களின் முயற்சியால் அந்த பிரச்னை களையப்பட்டுவிட்டது, ஆசியுடன் நீங்கள் வழங்கிய பணம் கல்லூரியில் கட்டப்பட்டு பையன் கல்லூரிக்கு போக தயராகிக்கொண்டு இருக்கிறான்.
கொஞ்சம் விரிவாக சொல்லியே ஆகவேண்டும், காரணம் உங்கள் வார்த்தைகளும், ஆசிகளும், அன்பும் கொடுத்த பணத்தை விட அதிகம் மதிப்பு மிக்கவையாகும்.
"ஏங்க...நம்ம வீட்டில் வேலை செய்யும் பிருந்தா மகனுக்கு என்ஜினினியரிங் கல்லூரியில் இடம் கிடைச்சுருக்கு, ஆனா படிக்கவைக்க வசதி இல்லை'' என்று என்று என் மனைவி கலைச்செல்வி, என்னிடம் பிருந்தாவை அறிமுகம் செய்துவைத்தபோது இருவரது கண்களும் கலங்கியிருந்தது.
ஒட்டல் தொழிலாளியாக இருந்து அந்த வேலையையும் இழந்த தவிக்கும் அப்பா, நாலைந்து வீடுகளில் வேலை செய்து அதில் வரும் பணத்தில் மட்டுமே குடும்பம் நடத்தும், அதிகம் படிக்காத பிருந்தாவிற்கு ஒரு பத்திரிகையாளனாக எப்படி உதவ முடியும். இப்படி போ என்று கைகாட்டியாக இருக்கலாம், ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்து அவ்வளவுதான் என்னால் முடிஞ்சது. அதற்கு மேல் நீயே பார்த்துக் கொள்ளம்மா என்று சொல்லலாம், இதெல்லாம் சராசரியாக செய்யக்கூடியது, ஆனால் இந்த காரியங்களால் கோகுலகண்ணன் படிக்கும் விஷயத்தில் எதுவும் நடக்காது என்பது எனக்கு தெரியும், பிருந்தா போன்ற விவரமே இல்லாத குடும்பத்தாருக்கு கைபிடித்து கூடவேயிருந்து ஒரு கட்டம் வரை கொண்டு சென்றால் மட்டுமே சாத்தியம் என்ற போது வாசகர்களாகிய நீங்கள் மட்டும்தான் நினைவிற்கு வந்தீர்கள், உங்களிடம் நிலமையை இணையதளத்தில் எழுதி உதவிகேட்டுவிடவேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.
பிருந்தாவிடம் அப்போது போன் வசதிகூட இல்லை, ஆகவே உதவி செய்யவிரும்பும் வாசகர்கள் கேட்கும் விவரத்தை சொல்வதற்கு பொறுமை நிறைந்த ஒருவர் தேவைப்பட்டார். அனைவருக்கும் ஆயிரம் வேலை இருப்பதாக சொல்லி போன் நம்பரைக் கொடுப்பதை தவிர்த்தனர். அந்த நேரம் "ஏங்க...நான் பேசுறேன் என் நம்பரை கொடுங்க'' என்று என் மனைவி கலைச்செல்வி தானே முன்வந்தார், வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த என் முட்டாள்தனத்தை நொந்துகொண்டேன். ஆனால் "அம்மா...தாயே...உனக்கு நள்ளிரவு நேரம் என்பது இணையதள வாசசகர்கள் பலருக்கு பகல் நேரமாக இருக்கும், ஆகவே பகலோ இரவோ எப்போது போன் வந்தாலும் பேச வேண்டும். மேலும் வாசகர்கள் வெளிநாடுகளில் கடும் குளிரிலும், வெயிலிலும் கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் பணம், ஒவ்வொரு பைசாவிலும் அவர்களது வேர்வை இருக்கும். ஆகவே நிறைய சந்தேகங்கள் ,வினாக்கள், விளக்கங்கள் கேட்பார்கள். அனைத்திற்கு பொறுமையாக பதில் சொல்லவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளுடன் அவரது போன் எண் கொடுக்கப்பட்டது. (9445427673).
உண்மையிலேயே கொடுத்த பணியை கூடுமானவரை சிறப்பாக செய்தார் என்றே சொல்ல வேண்டும். கடந்த சனிக்கிழமை செய்தி வெளியானது. ஒரு படைப்பாளியாக அந்த செய்தியின் வேகத்தை, வீரியத்தை முதன் முதலாக பார்த்து வியந்து போனேன் என்பதைவிட மிரண்டு போனேன் என்பதே சரியாக இருக்கும்.
அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய், லண்டன், ஆஸ்திரேலியா, அபுதாபி, கத்தார், பஹைரன், நைஜிரியா, சவுதி, நார்வே, வெனிசுலா, பிரான்சு உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் மும்பை, பெங்களூர், எர்ணாகுளம், திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட நமது ஊர்களில் இருந்தும் ஒரு வாரமாக தொடர்ந்து போன் கால்கள். அத்துனை பேரிடமும் பேசிப்பேசி தொண்டை வறண்டு சோர்வடைந்தாலும், தான் சோர்வடையாமல் கலைச்செல்வி அருமையாக ஒருங்கிணைத்துக் கொண்டேயிருந்தார்.
பகலில் பேசிய வாசகர்கள் பலரையும் பிருந்தாவிடமும், கோகுலகண்ணனிடம் பேசவைத்தார், இரவில் பேசியவர்கள் எண்ணை குறித்துக்கொண்டே காலையில் பிருந்தாவிடம் சொல்லி வாசகர்கள் விருப்பப்பட்ட நேரத்தில் பேசவைத்தார். வாசகர்களின் பிரதிநிதிகளாக பிருந்தாவின் குடும்பத்தை நேரில் பார்த்து பண உதவி செய்ய வந்தவர்களை பிருந்தா உபசரித்தாலும், குட்டியூண்டு வாடகை வீட்டில் உட்காரவைக்கமுடியாததால் வந்தவர்கள் அனைவரையும் தன் வீட்டில் (அடுத்த வீடு) உட்காரவைத்து சிற்றுண்டி கொடுத்து உபசரித்தார், ஜீரோ பேலன்சில் இருந்த கோகுலகண்ணனின் அப்பா கிருஷ்ணமூர்த்தியின் இந்தியன் பாங்க் கணக்கை உயிர்பித்து கொடுத்து அதில் பணம் விழும்படி செய்தார், படிப்பிற்காக வந்த பணத்தை பைசா வாரியாக கணக்கு எழுதி பிருந்தாவிடம் ஒப்படைத்தார், ஒரு கட்டத்தில் பணம் போதுமானதாக இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்து தனக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் பலருக்கு போன் செய்து இந்த கட்டுரையை படித்து பார்த்துவிட்டு முடிந்தவரை பணம் போடுங்கள் என்று சொல்லி பணம் போடவைத்தார், பணம் கொடுத்த வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் நீ செலுத்தும் நன்றி என்பது நன்றாக படிப்பது மட்டுமே என்று சொல்லி கல்லூரிக்கு ஒன்றுக்கு இரண்டு முறை கோகுலகண்ணனை அழைத்துப்போய் தாளாளர் துவங்கி அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்து அவனுக்காக கடமையை உணர்த்தினார். மெயில் மூலமாக உன்னுடைய ஒவ்வொரு முன்னேற்றத்தையும் உனக்கு உதவியவர்களுக்கு சொல், அவர்கள்தான் தெய்வம் என்று மனதில் மந்திரமாக சொல்லிவைத்தார், பிருந்தா மற்றும் கோகுலகண்ணனிடம் பேசுவதற்கு ஒரு போனும் ஏற்பாடு செய்துகொடுத்துவிட்டார் (போன் எண்:9940339112). மனைவியாக இருந்தாலும் மனிதநேயத்தோடு மற்றவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு உங்கள் முன்னிலையில் மனைவிக்கு நன்றி சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
ஆனால் உண்மையில் நான் ஆரம்பத்திலேயே சொன்னது போல பேசிய வாசகர்கள் ஒவ்வொருவரும் மனிதருள் மாணிக்கம் என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தை தெரியவில்லை, அவர்கள் பெயரை எழுதினால் அது மிக நீளமான பட்டியாக இருக்கும், தவிர பலரும் தங்கள் பெயர், ஊர் போன்ற விவரம் வேண்டாமே என்று தவிர்த்துவிட்டார்கள், அனுப்பிய பணம் போதாது என்றால் ஒரு அண்ணனாக, தம்பியாக, அக்காவாக, தங்கையாக, அம்மாவாக எப்போது வேண்டுமானாலும் திரும்ப கேளுங்கள் என்று சொன்னவர்கள் நிறைய பேர், வீடு தேடிவந்து கொடுத்து ஆசீர்வாதித்து சென்றவர்கள் பலர், படிப்பு செலவிற்கு போக புத்தகம் நல்ல டிரஸ் மற்றும் காலணி போன்றவை வாங்க இந்த பணத்தை வைத்துக்கொள் என்று கொடுத்தவர்கள் உண்டு, மொத்தத்தில் கோகுலகண்ணனை வாசகர்கள் தங்களது பிள்ளையாக தத்து எடுத்துக்கொண்டார்கள் என்றே சொல்லவேண்டும், உள்ளுணர்வு கோகுலகண்ணன் ஒரு நல்ல மெக்கானிக்கல் என்ஜினியராகிவிட்டார் என்றே சொல்லுகிறது. காரணம் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியில் பணம் கட்டிய உடனேயே கோகுலகண்ணன் கேட்ட கேள்வி எப்போது புத்தகம் எல்லாம் தருவீர்கள் என்பதுதான்.
வாசகர்களே எந்த வார்த்தை போட்டாலும் அந்த வார்த்தை நீங்கள் செய்த உதவிக்கு ஈடாகாது என்றாலும் கோடானுகோடி நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்வதை தவிர எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை, உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் இதயபூர்வமான நன்றிகள்.
மீண்டும் நன்றி! வணக்கம்! அன்புடனும், நன்றியுடனும்
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Mr Rakappan has managed to collect Rs. 45,000. I would be sing Rs 8,000 on Monday (20/08/12). Stil he needs Rs 7,000 before 21/08/12. Mr SUbramani has sent me Rakkappan&39s mark list. I spoke to Rakkapan. His number is +919042960215. Your kind help is highly appreciated. Zakir Hussain, Makkah, Saudi Arabia. (I have contributed Rs 5,000 for Kokul)
Source Link : ://www.dinamalar.com/photogallery_detail.asp?id=32&nid=4442&cat=Album (2nd Pic of Album) Details of this Student :- Student Name: Rakkappan Education: Higher Secondary with 1104 marks Place: Rajapaalaiyam He got a place to do his B.E(Mech. dept.) in National Engineering college, Koivilpatti, but financial issue to continue his studies. Right now he is working in a Winding shop About his Parents, His father is no more and Mother is a labor(Daily wages) in Cookery agency and she has wheezing problem as well. Fee Details : Tution fee- 35,000 Hostel - 26,000 mess - 18,000 Due day to pay the Fee: Aug 14th College s: 22nd Aug... If you would like to help, Please contact on +919986462643 or Subramani.pm@gmail.com...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.