அச்சமது துச்சமென துணிந்து, துப்பாக்கி குண்டுகளுக்கு துவளாமல் முன்நின்று, அந்நியப் படைகளை அகிம்சை என்ற அறத்தால் வென்று யுத்த களத்தில், ரத்தம் சிந்தி நின்ற போதும், சுதந்திரமே மூச்சாக, விடுதலையே பேச்சாகக்கொண்டு உழைத்த தியாகியே...
தினமும் உங்கள் உடல்கள் வேதனையில் துடித்தாலும், அசைக்கமுடியாத உங்கள் மன உறுதியுடன், அந்நியப்படைகளை கலங்கடித்வர்தானே நீங்கள், உங்களைப் போன்றவர்களின் ஒப்பற்ற உயிர்த்தியாகத்தால், உயிரினும் மோலய் கருதிய சுதந்திர தாகத்தால் பெறப்பட்டதே இந்த சுதந்திரம்
நீங்கள் பட்ட துயரங்களை, வேதனைகளை எப்படி மறப்போம். வாழ்நாளெல்லாம் நெருப்பிலே நின்றவர்கள் நீங்கள். இன்றைய மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்க, நேற்றைக்கு வலியையும், வருத்தத்தையும் சுமந்தவர் தானே நீங்கள்,
இந்த மக்களுக்காக, இந்திய மண்ணிற்காக வாழ்வை அர்ப்பணித்த உங்களை எப்படி மறப்போம்... என்று உணர்ச்சிகரமான உரை படிக்கப்பட்ட மதுரை செளராஷ்ட்ரா இருபாலர் பள்ளியின் சிறுகூடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த தியாகிகளின் படங்களில் ஒன்றில் இடம் பெற்றிருந்தார் ஐஎன்ஏ வீரர் தியாகி வைத்தியலிங்கம்.
கடந்த 10-8-1997ம் ஆண்டு மதுரையில் தினமலர் சார்பில் இந்திய சுதந்திர பொன் விழா நடத்தப்பட்ட போது, இந்த புனிதமான விழாவின் நாயகராக யாரை போற்றுவது என்றவுடனேயே அனைவராலும் குறிப்பிடப்பட்ட பெயருக்கு சொந்தக்காரர்தான் தியாகி வைத்தியலிங்கம். கணுக்கால் வரை தூக்கி கட்டிய கதர் வேட்டி, கைகளை மூடும் நீண்ட கதர்ஜிப்பா... கதரின் வெளுமைக்கு நிகரான பெரிய மீசை, உடலில் தளராத வீரம், கண்களில் தலைவர் நேதாஜி கற்றுக் கொடுத்த தீரம், வார்த்தைகளில் நேர்மை. இவைகளுடன் எனக்கு அறிமுகமான வைத்தியலிங்கம் ஐயா, தினமலர் விழாவிற்கு நேதாஜியின் படை வீரனைப் போல சீருடையில் வந்திருந்தார், விழாவிற்கு வந்தவர்கள் விழிகளை வியப்பால் உயர்த்தினார்.
அதற்கு பிறகு அவரோடு பல சந்திப்புகள் ஒவ்வொரு சந்திப்பின் போதும் நேதாஜி பற்றிய புத்தகங்களை கொடுப்பார், நெகிழ்ச்சியோடு தனது பர்மா, ரங்கூன், பஹாங் போன்ற இடங்களில் போரிட்ட போர்க்கள சம்பவங்களை நினைவு கூர்வார், இந்த தலைமுறைக்கு சுதந்திர தாகம் குறைந்துவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் தனது பிரச்னையையோ தனது குடும்பத்து பிரச்னை பற்றியோ பேசியவர் இல்லை.
மதுரை முனிச்சாலையில் உள்ள அவரது அறையில் எங்கு பார்த்தாலும் நேதாஜியின் புகழ்பாடும் புத்தகங்களே நிறைந்து இருக்கும், வந்தவர்களிடம் வஞ்சனையில்லாமல் அந்த புத்தகங்களை வாரியும் கொடுப்பார்.
இப்படி மதுரை முனிச்சாலை சிங்கமாக, தியாகிகளில் ஈடு இணையற்ற தங்கமாக இருந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து போனார். இவரது மரணம் வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இவரது வரலாறு சாதாரணமானதல்ல என்பதை உணர்ந்த தேசிய வலிமை ஜெய்ஹிந்த் சுவாமிநாதன் கடந்த சுதந்திர தினத்தன்று இவரது படத்தை திறந்துவைத்து, இவரது வீர வரலாறை நினைவு கூறும் வாய்ப்பினை ஏற்படுத்திதந்திருந்தார், அதற்கேற்ப கவிஞர் சுரா எழுதியிருந்த தியாகி வைத்தியலிங்கம் பற்றிய வாழ்க்கை குறிப்புகளும் அவரது புகழை அனைவரும் அறிய உதவியது. பேசிய பலரும் தியாகி வைத்தியலிங்கம் ஐயா அவர்களை மதுரை உள்ள அளவு, மனதில் நினைவுகள் உள்ள அளவு மறக்கமாட்டோம் என்று கண்கலங்க குறிப்பிட்டனர்.
அனைத்தையும் படமாக இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார் தியாகி வைத்தியலிங்கம்.
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.