புதுடில்லி: கூட்டுறவு சங்கங்களின் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் அடங்கிய மசோதா அடுத்த பார்லிமென்ட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கூட்டுறவு சங்கங்களின் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான விதிமுறைகளை அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க, மத்திய அமைச்சரவை கடந்த வியாழனன்று அனுமதி வழங்கியது.
இந்த சட்டதிருத்தம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: இந்த புதிய சட்டதிருத்தத்தில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடத்துவது, அதன் அதிகாரிகளுக்கான ஐந்தாண்டு கால பணி, தனி தணிக்கை முறை, அதன் நிர்வாக குழு கலைக்கப்பட்டால், ஆறு மாதத்திற்குள் புதிய நிர்வாக குழு அமைத்தல் ஆகியவை தொடர்பான விதிமுறைகள் இருக்கும். மேலும், பொது வினியோக திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், நெல்லுக்கு குவிண்டாலுக்கு 50 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. இந்த ஊக்கத் தொகை அறிவிப்பால், அரசுக்கு, 1,884.79 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இந்த பருவத்தில் அரசு 250 லட்சம் டன் அரிசி கொள் முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். சட்டம் மற்றும் நீதித் துறையில், ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில், அரசு செயலர் அந்தஸ்திலான ஆலோசகர் ஒருவரை நியமிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
| வாசகர் கருத்து |