புதுடில்லி : ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுடன், முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. மது கோடா, சிபு சோரன் ஆகியோருக்கு மாநில அரசியலில் முக்கியத்துவம் குறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் - ஜே.வி.எம்., கூட்டணிக்கு தேர்தலில் சாதகமான அலை வீசக் கூடும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல் இம்மாதம் 25ல் துவங்கி ஐந்து கட்டங்களாக நடக்கிறது. தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர் களில் ஒருவராக இருந்தவருமான பாபுலால் மராண்டி, தற்போது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என்ற தனிக் கட்சியை துவக்கியுள்ளார். இந்த கட்சி சார்பில் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ், 49 தொகுதிகளுக்கான வேட் பாளர்களின் பெயர்களை அறிவித்துள் ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் அரசியலில் முக்கியத் திருப்பமாக, காங்கிரசும், ஜே.வி.எம்., கட்சியும் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளில் தீவிரமாக களம் இறங்கின; உடன்பாடும் நேற்று ஏற்பட்டது . ஜே.வி.எம்., தலைவர் பாபுலால் மராண்டி, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று டில்லியில் சந்தித்து பேச்சு நடத்தினார். மொத்தம் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ஜார்க்கண்ட் தேர்தல் நிலவரம் குறித்து, கட்சியின் மேலிட பொறுப்பாளர் கேசவ் ராவ், பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக் ஆகியோருடன் சோனியா ஏற்கனவே ஆலோசனை நடத்தினார். தற்போது பாபுலால் மராண்டியுடன் பேச்சு நடத்தியுள்ளதன் மூலம், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி அமைவது உறுதியாகி விட்டது. மாநில மக்களிடையே பாபுலால் மராண்டிக்கு உள்ள "மிஸ்டர் கிளீன்' இமேஜ், தேர்தல் வெற்றிக்கு கை கொடுக்கும் என, சோனியா கருதுகிறார். இவ்வாறு காங்., வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று மாலையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப் பட்டது. மொத்தம் உள்ள 81 இடங்களில் காங்கிரஸ் 55 இடங்களிலும், மராண்டி கட்சி 19 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டது. எஞ்சிய ஏழு இடங்களில் நட்பு ரீதியான போட்டி இருக்கும் என்று கூறப்பட்டது.
இத்திருப்பங்கள் குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: ஜார்க்கண்டை பொறுத்தவரை, முன்னாள் முதல்வர்கள் சிபு சோரன், மது கோடா ஆகியோர் செல்வாக்கு உடைய தலைவர்கள். இவர்களில் மது கோடா தற்போது ஹவாலா உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளதால்,அவரது செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. சிபு சோரனை பொறுத்தவரை, அவர் உடல் நலம் பாதிக்கப்பட் டுள்ளார். மேலும், அவருடன் கூட் டணி வைத்துக் கொண்டால், எதிர் பார்த்த அளவு வெற்றி கிடைக்குமா என, காங்கிரஸ் தயங்குகிறது. எனவே, பாபுலால் மராண்டி கட்சியுடன் கூட் டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாபுலால் மராண்டியின் இழப்பால், ஏற்கனவே மாநிலத்தில் பா.ஜ.,வுக்கும் செல்வாக்கு குறைந்துள்ளது. இந்நிலையில், இந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் - ஜே.வி.பி.,க்கு ஆதரவான அலை வீசுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
மது கோடா உதவியாளர் கைது: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் ஊழல், நாட்டையே உலுக்கியுள்ளது. மது கோடா மற்றும் அவருக்கு நெருக்கமான ஏழு பேர் 4,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் எட்டு பேர் மீதும் அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். மது கோடாவுக்கு நெருக்கமான ஏழு பேருக்கும், நேரில் ஆஜராகும்படி அதிகாரிகள் அளித்த காலக் கெடு முடிவடைந் துள்ளது. இதையடுத்து, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதில் முதல் நபராக, மது கோடாவின் உதவியாளர் விகாஸ் சின்காவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 14 நாள் காவலில் போலீசார் வைத்தனர். மது கோடா உள்ளிட்ட மற்றவர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட் டது.
| வாசகர் கருத்து |