திருவனந்தபுரம்:சபரிமலையில் மண்டல மகர விளக்கு சீசன் துவங்குவதற்கு முன்பே அங்கு பக்தர்களின் பல்வேறு வசதிகளுக்கான முன்னேற்பாடுகள் முடிவடைந்து விட்டதாக தேவஸ்வம் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளை மேற்கொள்ள திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும், மாநில அரசும் சில மாதங்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், முக்கியமாக பக்தர்களுக்கு இக்காலக் கட்டங்களில் பிரசாதம் கிடைப்பதில்லை என்ற புகார்களை அடுத்து பிரசாதம் தாராளமாகவும், எளிதாகவும் கிடைக்க வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரசாதங்களை வழங்க தனலட்சுமி வங்கியிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதில் அப்பம், அரவணை போன்ற வழிபாடு டிக்கெட்டுக்கள் வங்கியே நேரிடையாக பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீசன் துவங்குவதற்கு முன்பே 25 லட்சம் அரவணை டின்கள் தயாரிக்கப்படும். தற்போது, 10 லட்சம் டின்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்தது.அதில் தேவஸ்வம் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமசந்திரன் கலந்துகொண்டு, மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார். கூட்டத்தில் தனலட்சுமி வங்கியின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சதுர்வேதி கலந்துகொண்டு, பிரசாத விற்பனைக்கான கூப்பன்களை அமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.இவ்வங்கி மூலம் பிரசாத கூப்பன்களை வழங்குவது, கடந்தாண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இவ்வங்கியின் பல்வேறு கிளைகள் மூலம் பிரசாத கூப்பன்கள் வழங்கப்படும்.
| வாசகர் கருத்து |