மனம் நொந்த டாஸ்மாக் ஊழியர்கள்!
""ராஜ்யசபா
எம்.பி., தேர்தல் தொடர்பா, புகைச்சல் ஆரம்பிச்சிடிச்சு பா...'' என்றபடியே,
நாயர் கடைக்கு வந்த அன்வர்பாயிடம், ""இப்ப எந்த கட்சில பிரச்னைங்க...''
எனக் கேட்டார் அந்தோணிசாமி.
""ஆளுங்கட்சி சார்புல, ராஜ்யசபாவோட,
ஐந்தாவது எம்.பி., சீட்டை, இ.கம்யூ., கட்சி, மாநில செயலர் தா.பாண்டியனுக்கு
குடுக்கணும்ன்னு ஆசைப்படுறாங்க... ஆனா, பாண்டியனுக்கு கொடுக்க, மார்க்.,
கம்யூ., கட்சிக்கு விருப்பம் இல்லே...
""இ.கம்யூ., கட்சியோட, தேசிய
செயலர் டி.ராஜா, சிறந்த பார்லிமென்டேரியன்... அதனால, அவருக்கு ஆதரவு
குடுக்க, அந்த கட்சி முடிவு செஞ்சிருக்கு... ஆனா, டி.ராஜா, தி.மு.க.,வோட
அனுதாபி... அவருக்கு, எம்.பி., பதவி குடுக்க, ஆளுங்கட்சி தரப்புல
விரும்பலே... இதனால, அஞ்சாவது சீட், எம்.பி., பதவி, ராஜாவுக்கா,
பாண்டியனுக்காங்கற குழப்பம், தோழர்கள் மத்தியில உருவாகி இருக்கு பா... அதே
சமயம், அஞ்சாவது சீட்டிற்கு ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தினா,
ஆறாவது சீட்டுக்கு, தி.மு.க.,வை ஆதரிக்க, மார்க்., கம்யூ.,
தயாராயிட்டிருக்கு...'' என, விளக்கினார் அன்வர்பாய்.
""வட்ட செயலர் பதவியை பிடிக்க, இப்பவே பலரும் முண்டியடிக்கிறாங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி.
""ஆளுங்கட்சிக்காராளைச் சொல்றேளா...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
""அவங்களை
தவிர, வேறு யாரா இருக்க முடியும்... போன உள்ளாட்சி தேர்தலப்ப, மதுரை
மாநகராட்சியை விரிவு செஞ்சாங்க... 72 வார்டுகள்ன்னு இருந்தது, நூறாச்சு...
இப்ப, மாநகராட்சியில சேர்ந்த பகுதிகளை, ஆளுங்கட்சிக்காரங்க, கட்சியோட நகர்
பிரிவு கீழே கொண்டு வர முடிவு செஞ்சிருக்காங்க... அதுக்கப்பறமா, ஒவ்வொரு
வார்டுக்கும், புதிய செயலரை நியமிக்கவும் முடிவு செஞ்சிருக்காங்க... இதனால,
மாநகராட்சி விரிவாக்க வார்டுகளை சேர்ந்த ஆளுங்கட்சிகாரங்க, தங்களுக்கு
வேண்டப்பட்டவங்களை, வட்ட செயலராக்கணும்ன்னு, துடியா
துடிச்சிக்கிட்டிருக்காங்க... அதுக்கேத்தா மாதிரி, காய் நகர்த்தவும்
ஆரம்பிச்சிட்டாங்க...'' எனக் கூறி முடித்தார் அந்தோணிசாமி.
""தேனி மாவட்ட, டாஸ்மாக் கடைகள்ல ஏகப்பட்ட குளறுபடி ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
""சரக்குக்கும், உமக்கும் என்ன வே சம்பந்தம்... குளறுபடி பத்தியெல்லாம் பேசுதீரு...'' என, கிண்டலடித்தார் அண்ணாச்சி.
""காதுல
விழுந்ததைச் சொல்றேன் கேளுங் கோ... தேனி மாவட்டத்துல, விற்காத சரக்குகளை
கட்டாயப்படுத்தி விற்க ச்சு, குளறுபடி ஏற்படுத்தினதா, மாவட்ட மேலாளர் மேலே
புகார் கிளம்பிடுத்து...
""இந்த புகார் மேலே விசாரணை நடத்த,
சென்னைலேர்ந்து சிறப்பு அதிகாரிகள் அங்கே போனா... அவர் முன்னால, டாஸ்மாக்
ஊழியர்களை ஆஜர்படுத்திய அதிகாரிகள், "புகாரில் சிக்கின மாவட்ட மேலாளர்,
மிகவும் நேர்மையானவர்... எந்த தவறும் செய்யலே... எல்லா குளறுபடிக்கும்,
ஊழியர்களே காரணம்...'ன்னு சொல்லி, அதிகாரி முன்னாடியே, கட்டாயப்படுத்தி
எழுதி வாங்கிக் கொடுத்துட்டா... இதனால் தேனி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள்,
மனம் நொந்து போயிருக்கா ஓய்...'' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.
நண்பர்களுக்கு, நாயர் டீ கொடுத்தார்; குடித்ததும், அனைவரும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.