அன்புள்ள அம்மாவிற்கு —
நான், ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். பல பட்டங்கள் பெற்று, தற்போது, இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற இருக்கிறேன். என்னுடைய வயது, 45. நான் பார்ப்பதற்கு சுமாராக இருப்பேன். என்னுடைய கணவர் அழகாக இருப்பார். எனக்கு, இரண்டு குழந்தைகள். மகன் முதலாமாண்டு இன்ஜினியரிங் மாணவன். மகள் பிளஸ் 2 மாணவி. என்னுடைய கணவர் நற்குணம் படைத்தவர். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். ஆனால், ஒரு கோழை. இவருடைய கோழைத்தனத்தையே பலவீனமாகக் கருதி, இவருடைய தம்பிகள், இவரை அதட்டி பேசுவதை என்னால், சகித்துக் கொள்ள முடியாது. மேலும், பொருளாதாரத்திலும், படிப்பிலும் மிகவும் பின் தங்கியவர்.
என் கணவர், செக்ஸ் விஷயத்தில், சிறிது கூட ஆர்வமில்லாமல் இருப்பவர். ஆனால், என்மீது பிரியமாக இருப்பார். எனவே, எனக்கு இது ஒரு குறைபாடாகத் தெரியவில்லை. மேலும், எனக்கு, திருமணத்திற்கு பின் தான், "செக்ஸ்' என்றால் என்ன என்பது தெரிய வந்தது. என்னுடைய கணவர், வேலைக்கு செல்வதில் அதிக ஆர்வமில்லாதவர். 10ம் வகுப்பில் தோல்வி யுற்றவர். பல்வேறு பொய்களைச் சொல்லி, என்னை திருமணம் செய்து கொண்டவர். எங்களது திருமணம், பெரியோர்கள் பார்த்து செய்த திருமணம். என் கணவர், எங்களுக்கு தூரத்து உறவினர். திருமணம் முடிந்த, ஓரிரு மாதங்களில், தன் உண்மையான கல்வித் தகுதியை என்னிடம் கூறியபோது, மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்தேன். இதை என், மனதுக்குள்ளே வைத்து, என் பெற்றோர், உடன்பிறப்புகள் யாரிடமும், இதுவரை அவருடைய கல்வித்தகுதியை கூறவில்லை. ஏனெனில், என்னுடைய தம்பிகள் அனைவரும் பொறியாளராகவும், ஆசிரியராகவும், பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ளனர். அவர்களுக்கு முன்னால், என்னுடைய கணவர் தலை குனிந்து நிற்பதை நான் விரும்பவில்லை.
மிகக் குறைந்த சம்பளத்தில், பல்வேறு கம்பெனிகளில் வேலை பார்ப்பார். நின்று விடுவார். வேறொரு கம்பெனிக்கு உடனடியாகச் செல்ல மாட்டார். அவரிடம், நான் சண்டை போட்ட பின், ஏதாவது ஒரு கம்பெனியில் சேருவார். அவருக்கு சொந்த தொழில் செய்வதில் ஆர்வம் இருந்தது. ஆனால், மிகவும் கோழை. யாரைப் பார்த்தாலும், கூச்சப்படுவார். எனக்கு, சமையல் வேலை, வீட்டு வேலைகளில் உதவி செய்வார். பெண்களின் குணம் அதிகமாக காணப்படும். அன்பு, பணிவு, கனிவு, இரக்கம், பொறுமை, விட்டுக் கொடுத்தல் போன்ற பல குணங்களை உடையவர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு கான்ட்ராக்ட் வேலை துவக்கி கொடுத்தேன். அதில், போதிய லாபம் இல்லை என்பதை உணர்ந்து, ஏதாவது, ஒரு ஆபீசில் வேலைக்குச் சேரும்படி கூறினேன். அவர், "எனக்கு வயதாகி விட்டது...' எனக்கூறி மறுத்து வந்தார். அவருக்கு தற்போது வயது 46. இதுபற்றி, எங்கள் இருவருக்கும் சண்டை வந்து கொண்டேயிருக்கும். என்னுடைய மாமியாருக்கு, நான்கு மகன்கள் இருந்தும், எங்களுடனே கடந்த, 20 வருடங்களாக இருந்து வருகிறார். மாதந்தோறும், 500 ரூபாய்க்கு மருந்து மாத்திரைகள், அடிக்கடி மருத்துவ செலவு செய்வதும் வழக்கமாக இருந்தது. இப்படி பல காரணங்களால், அவர் மீது வெறுப்பு அதிகரித்து வந்தது. நாங்கள் போடும் சண்டையைப் பார்த்து, பிள்ளைகள் நொந்து போயினர். பிள்ளைகள் என் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, தம் தந்தையிடம் வேலைக்கு போகும்படி கூறினர். ஒரு வழியாக கடந்த, நான்கு மாதங்களாக, ஒரு கம்பெனியில், 6,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒருவிதமாக வாழ்க்கையில் நிம்மதியுடன் அவர்மீது அன்பும், பரிவும் காட்டத் துவக்கினேன்.
பிரச்னை என்னவெனில், அவர் என்னுடன் சேர்ந்து படுப்பதில்லை. நான் அருகில் படுத் தாலும், என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சட்டை செய்வதில்லை. மறுநாள் காலை எப்பொழுதும் போல, என்னுடன் சகஜமாக பேசுவார், சிரிப்பார். இரவு படுத்தவுடன் மிக அமைதியாக தூங்கி விடுவார். இதைப்பற்றி அவரிடம் கேட்டதற்கு, "வேலைக்கு போகாமல் இருந்த போது, நீ என்னை கேவலமாக பேசியது, மனதுக்கு உறுத்தலாக இருக்கிறது...' என்று காரணம் கூறுகிறார். நாங்கள், "செக்ஸ்' வைத்து, ஒரு வருடத்திற்கு மேலாகிறது.
சில நேரங்களில் இவரைப் பார்க்கும்போது, எனக்கு கோபமாக வருகிறது. என்னை, அவர் உதாசினப்படுத்துவது போலவும், பெண்மைக்கே மிக இழிவு போன்றும் தெரிகிறது. இவருக்கு ஆண்மை குறைவு என்பது தெரிகிறது. மேலும், வேண்டுமென்றே என்னை பழிவாங்க வேண்டும் என்றும் செயல்படுவதாகத் தெரிகிறது.
கல்வி, பணம், குடும்பப் பின்னணி, அறிவு சம்பளம் என அனைத்து தகுதிகளிலும் மிக, மிகக்குறைவான ஒருவரிடம் இந்த ஒரு உறவுக்காக, வலிய போகிறோமே என்பதை நினைக்கும் போது, மனம் வேதனையடைகிறது. அப்படி சென்றும், நம்மை உதாசினப்படுத்துகிறாரே என எண்ணும் போது, மனம் மேலும் துடிக்கிறது. எனக்கு, அவரை எப்படியும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. என்னுடைய சுகத்திற்காக, அவர் ஏங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் நாள்தோறும் ஏற்படுகிறது.
ஆண்மையை தூண்டக்கூடிய மருந்துகள் ஏதேனும் இருந்தால், அதன் பெயரை குறிப்பிடவும். அதனால், வேறு ஆபத்து ஏதேனும் உண்டா என்பதையும் குறிப்பிடவும். இவருக்கு சர்க்கரை நோய் எதுவும் கிடையாது. ஆனால், ரத்த அழுத்தம் சிறிதளவு உண்டு. வாயுதொல்லை உண்டு. இந்த மருந்துகளை கடைகளில் சென்று வாங்குவதற்கு கூச்சமாக உள்ளது. அதற்கும் ஒரு வழி சொன்னால் நன்றாக இருக்கும். இந்த யோசனைகளையெல்லாம் விடுத்து, புதியதாக தாங்கள் ஏதாவது அறிவுரை கூறினாலும், அதன்படி நான் நடக்க தயாராக இருக்கிறேன். நானும் ஒரு சராசரிப்பெண். அனைத்து ஆசாபாசங்களும் என்னுள் பொதிந்து கிடைக்கின்றன. என்னால் அன்றாட அலுவல்களை கூட ஒழுங்காக பார்க்க முடியவில்லை. இந்த ஒரு விஷயம் நீங்கலாக, மற்றபடி என் கணவர் நல்லவர். பொறுப்பாகவும், சிக்கனமாகவும் இருப்பார். என்னுடைய சம்பளத்தை, அப்படியே கொடுத்து விடுவேன். எந்தவொரு செயலையும், என்னை கலக்காமல் செய்ய மாட்டார். நான் சொல்வதை அப்படியே கேட்பார். எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார். சிகரெட், மது தொடுவதில்லை.
பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்று, சமூக அந்தஸ்துடன் வாழும் எனக்கு, பொருத்தமான நல்ல அறிவுரை கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு
அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு,
உன் கடிதம் கிடைத்தது. முழுவதும் படித்தேன். உன் கடிதத்தை மேலோட் டமாக படித்தால், உன் கணவரின் மீது குற்றச்சாட்டுகளை நீ அள்ளி வீசியிருப்பதாய் தெரியும். ஆனால், கடிதத்தின் அடிநாதமாய் உன் கணவர் மீதான காதல்தான் தெரிகிறது. என்னதான் அவர் தன் கல்வித்தகுதியை மறைத்து, உன்னை மணம் செய்திருந்தாலும் தாம்பத்யத்திற்காக உன்னை ஏங்கச் செய்தாலும், உன் இதயத்தில் அவருக்கு தனி இடம் ஒதுக்கி வைத்திருக்கிறாய். "கோணலாய் இருந்தாலும் என்னுடையதாக்கும்' என்கிற மனநிலை கொண்டிருக்கிறாய். கணவனிடம் தாம்பத்யம் கிடைக்கவில்லை என்பதற்காக, வழிதவறி போய் விடாமல், அவரை தாம்பத்யத்திற்கு இழுக்கும் மருந்து கேட்டிருக்கிறாய்.
உன் கணவர், தன் மனைவி தன்னை விட அதிகம் படித்து பெரிய வேலையில் இருக்கிறாள் என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறார். தவிர, தன்னை வேலைக்கு போகச் சொல்லி தன் மனைவி, குழந்தைகள் முன் அனுதினம் நிந்திக்கிறாளே என்கிற பழி வெறியும் அவரிடம் இருக்கிறது. அவரிடம் ஆண்மைக் குறைவு எதுமில்லை என நம்புகிறேன்.
நான்கு மகன்கள் வீட்டில், உன் கணவர் வீட்டை தேர்ந்தெடுத்து உன் மாமியார் இருப்பது உனக்கு அனுகூலமான விஷயமே. அவருக்கு செய்யும் மருந்து செலவுகளை நினைத்து பெரிதாய் வருத்தப் படாதே. உன் கணவரின் மீதிருக்கும் அதிருப்தியை மாமியாரிடம் காட்டாதே.
உனக்கும், உன் கணவனுக்கும் இருக்கும் முட்டல் மோதல்களை, மகன், மகளிடம் அப்பட்டமாக்கி, தந்தையின் மீது பிள்ளைகளுக்கு மனக்கசப்பு ஏற்பட அடிகோலி விட்டாய். இதையெல்லாம் நீ தவிர்த்திருக்கலாம். குடிக்காத, புகைக்காத, வீட்டு வேலைகள் செய்யும் கணவர்மார்கள் மிக அபூர்வம்.
கல்வி, பணம், குடும்பப் பின்னணி, அறிவு, சம்பளம் என, அனைத்து தகுதிகளிலும் மிக மிகக் குறைவான கணவரிடம் தாம்பத்யம் என்கிற ஒன்றுக்காக வலியப் போகிறோமே என்கிற உன் எண்ணம் தேவையற்றது. தாம்பத்யத்திற்குள் பிரவேசிக்கும் போது, எல்லா புற இணைப்பு களையும் கத்தரித்து விட்டு, காதல் மிகு மனைவியாக கணவனை அணுகுதல் நலம். கணவனும் பழிவாங்கும் எண்ணத்தை தவிர்த்து, காதல் மிகு கணவனாக மனைவியை அணுகுதல் உசிதம்.
<உங்களிருவருக்கும் இடையே, ஈகோ புகுந்து விளையாடுகிறது. அதை, "ஓடு' என விரட்டி விட்டால், உங்களுக்குள் எல்லாம் சுமுகமாகி விடும் மகளே! நீ உன் கணவனுடன் தனித்து மனம் விட்டு பேசு. அவருடைய சமூக மரியாதைக்காகத்தான் அவரை பணிக்கு செல்ல நச்சரித்ததாக சொல்.
கடந்த இருபது ஆண்டுகளில், உங்களுக்குள் நிகழ்ந்த அழகிய காதல் பொழுதுகளை இருவரும் அசை போடுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம், உணவை சேர்ந்து உண்ணுங்கள். ராசியான பட்டுப்புடவை வைத்திருப்பாய். அதை கட்டிக்கொண்டு கணவனுடன் வெளியே போய் வா.
உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுத்து வந்தாலும், தற்காலிக ஆண்மைக்குறைவு ஏற்படும். குடும்ப மருத்துவரிடம் உன் கணவனை அழைத்துச் சென்று மாத்திரைகளை மாற்றலாம். நீண்ட நேர தாம்பத்யத்திற்கான மாத்திரைகளை நாமே மருந்தகத்தில் வாங்கி உட்கொள்வது ஆபத்தானது. அதை மருத்துவரிடம் கேட்டு பெறலாம். அலோபதியிலும், ஹோமி யோபதியிலும் ஆண்மையை நீட்டிக்கும் சிறப்பான மாத்திரைகள் பல உள்ளன.
சில ஆண்களுக்கு தொழில் தோல்வி, தொடர் குடும்ப சண்டைகள் காரணமாக, "மேல் மெனோ பாஸ்' எனப்படும் தற்காலிக ஆண்மைக்குறைவு ஏற்படும். இதம்பதமாய் மனைவிமார் அணுகி அக்குறையை போக்கலாம்.
ஒரு மனைவிக்கு, கணவனிடம் கட்டாயமான தாம்பத்ய உரிமை உண்டு. அந்த உரிமையை சாம தான பேத தண்ட முறைகளில், ஒரு புத்திசாலி மனைவி வென்றெடுக்கலாம். கணவனை தொட்டு தடவி அங்க அசைவுகளால் பேசி உசுப்பேத்தலாம்.
பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்ற சமூக அந்தஸ்துடன் வாழும் நீயும், தாம்பத்யத்திலும் தன்னிறைவு அடைவாய் மகளே! வாழ்த்துக்கள்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அன்பு பாலாவிற்கு,
திருமணத்திற்குப் பின் உடல் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது இரு பாலாருக்கும் நல்லது. என் சித்தி சொல்லுவார், உடம்பு சுகம் கண்ட ஆணுக்கோ பெண்ணுக்கோ அந்த விஷயங்கள் மறக்காது, ஆயுளுக்கும் தொந்தரவு செய்யும் என்று. நீங்கள் இப்போது அந்தப் பெண்ணிடம் மனம் விட்டுப் பேசுங்கள், உண்மையான காதலாக இருந்தால் மன்னிப்பு கேட்பார், அப்படி இல்லை என்றால் தன் மேல் தவறில்லை என்று வாதிடுவார். சில ஆண் நண்பர்கள் பெண்களிடம் உரிமையாக வாடி, போடி, வாடா, போடா என்று பேசிக் கொள்வது சகஜம். சகஜமாகப் பழகி இருந்தால் உங்கள் அன்பைப் புதுப்பிக்கலாம். இல்லை என்றால் விலகி அவரவர் வழிகளைப் பார்த்துக் கொள்ளலாம். திருமணத்திற்குப் பின்னே மனைவியை மட்டுமே தொடுவேன் என்று சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள் மன நிம்மதிக்காக.
அன்பு ரேவதிக்கு,
எந்தப் பிரச்சினைக்கும் சாவு வழியில்லை. நாளை இந்தப் பிரச்சினை தீர்ந்து வேறொரு பிரச்சினை வரும் போது கழிந்த பிரச்சினை சிறிய புள்ளியாகத் தெரியும். தெரிந்தே புதைகுழியில் விழவா? தினம் தினம் சித்ரவதை அனுபவிக்கவா? எரியும் நெருப்பில் விழும் விட்டில் பூச்சி வாழ்க்கை வாழவா என்று கேட்டிருக்கிறீர்கள். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். கல்யாணம் பண்ணி வச்சா திருந்திடுவான் என்று குடிகாரர், பெண் பித்தனுக்குத் திருமணம் செய்து விட்டு இந்த மனைவிகள் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அதனால் உங்கள் அத்தைப் பையன் வேண்டாம். அவரால் உங்களுக்கு அமையப் போகும் வாழ்க்கையை ஒன்றும் கெடுக்க முடியாது. பெரியவர்களை வைத்துப் பேசி எனக்கு இவரைப் பிடிக்கவில்லை, ஒதுங்கச் சொல்லுங்கள் என்று ஒரு முடிவுக்குக் கொண்டு வரலாம், வேறொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளலாம். அம்மா சொன்னா, அக்கா சொன்னா, திருத்தப் போறேன் என்று களம் இறங்கினால் போராட்டம் உங்களுக்குத் தான். படங்களிலும் நாடகங்களிலும் கடைசி ரீலில் திருந்தும் கெட்டவர் வாழ்க்கையில் முதல் ரீலிலேயே த்ரிஉந்துவார் என்று எதிர்பார்ப்பது தவறு. உங்கள் வாழ்க்கையை வாழப் பாருங்கள். உங்கள் அப்பாவிற்குப் பிடிக்கவில்லையே அந்தப் பையனை, வீட்டிலேயே ஒரு ஆதரவு கிடைத்து விட்டதே, பிறகென்ன, நிதானமாக யோசித்து எப்படி வெளியில் வருவது என்று சிந்தியுங்கள். வேறொரு நல்ல வாழ்க்கை காத்திருக்கிறது என்று நம்புங்கள். வெற்றி உங்களுக்கே. எந்தச் சூழ் நிலையிலும் தற்கொலை எண்ணத்தைக் கையில் எடுக்க வேண்டாம். வாழ நினைத்தால் வாழலாம். சின்ன சின்ன பிரச்சினைகளுக்காகத் துவண்டு போகக் கூடாது. கடவுள் கொடுத்த உயிர், வாழ்க்கை, அடுத்தவர் பாராட்டும் படி நம் வாழ்க்கையைச் சிறப்பக வாழ வேண்டும்.
அன்பு அம்முவிற்கு,
அனேக குடும்பங்களில் நடப்பது தான் உங்களுக்கும் நடக்கிறது. பாதி குடும்பங்களில் மாமியார்- நார்த்தனார்- மருமகள் சண்டைகளுக்கு அடிப்படை காரணமே திருமணமாகி குடும்பத்தில் அடியெடுத்து வைக்கும் பெண்ணிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் தான். தங்களிடம் அதிகாரமும் உரிமையும் இருப்பதாக எண்ணிக் கொண்டு அகங்காரத்துடன் வரும் பெண்ணிடம் நடந்தால் காலம் முழ்வதும் அந்தப் பெண்ணிற்கு அந்தக் குடும்பத்துடன் இணக்கமாக ஒட்டிப் பழகும் சூழல் அமையாது. அன்பு காட்டவும் மனம் வராது. இவர்களின் ஆட்டம் சிறிது காலம் தான், பிறகு ஒரு குழந்தை வந்து உங்கள் கணவர் உங்கள் மேல் பிரியம் காட்ட ஆரம்பித்தவுடன் தன்னால் இவர்களின் கொட்டம் அடங்கும். நான் சொல்வது இது தான், உங்கள் கணவரின் அன்பிற்கு ஏங்கி இருக்காமல் பகலில் உங்கள் மாமியாருக்குத் தேவையானதைப் பார்த்து பார்த்து பணிவிடை செய்யுங்கள். அவர் உங்கள் நல்ல மனதைப் புரிந்து நெருக்கமாகும் சூழலில் தன் பெண்ணைக் கட்டுப்படுத்துவார். அதே போல் கணவரிடம் அன்பிற்கு ஏங்காமல் நீங்களும் நாத்தனார் பேசும் போது கூட சேர்ந்து மொக்கை போடுங்கள், முடிந்தால் மாமியாரின் கதைகளை இரவு நேரத்தில் கேளுங்கள், இவர்கள் பேசுகிறார்களா, ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி விட்டு கணவரிடம் சொல்லி விட்டு உறங்கப் போங்கள். கணவரின் மனது மனைவி தன்னிடம் அன்பு காட்ட வேண்டும், பணிவிடைகள் செய்ய வேண்டும், அன்பிற்கு ஏங்கி இருக்க வேண்டும், தன்னைத் தவிர வேறு எதற்கும் அவர்கள் முக்கியத்துவம் தரக் கூடாது என்று எண்ணுவர். சில நேரங்களில் கணவர் மனது குழந்தைத்தனமாய் இருக்கும். குழந்தையின் விளையாட்டு எப்படி இருக்கும், தானே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை அம்மா கொஞ்ச அழைத்தாலும் வராது, இதே குழந்தையைக் கண்டு கொள்ளாமல் அம்மா வேறு வேலைகளில் கவனம் செலுத்தும் போது அன்பு காட்டச் சொல்லி வரும். கணவர் நிலையும் இதே தான். அவருக்கும் இவர்கள் செய்வது அதிகம் என்று தெரியும், விட்டுக் கொடுக்க முடியவில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் எதிர்ப்பதமாக செய்ய வேண்டும், எங்கேயாவது படம் போக வேண்டும் என்றால் அவருக்கு முந்தி நாத்தனார் மற்றும் அவர் குழந்தைகளிடம் தெரிவித்து செல்ல தயாராக இருக்கச் செய்ய வேண்டும். அம்மா, நாத்தனாருடன் பேசறீங்களா? சரி காலையில் வேலை இருக்கு என்று தூங்கச் சென்று விடணும், அன்பிற்கு ஏங்குவது போல் காட்டாமல் வேறு வேலைகளில் ஒரு வாரமோ ஒரு மாதமோ செய்து பாருங்கள். அவர்களின் செயல் கணவருக்கே எரிச்சலை வரவழைக்கும். சற்று அடக்கி வைப்பார். அதை விட்டு விட்டு என்னிடம் அன்பு காட்டுங்கள், அவர்களை உங்களிடம் நெருங்கச் செய்யாதீர்கள் என்று அழுது புலம்பினால் கணவருக்குப் பிடிக்காது. வேண்டுமென்றே செய்வார். எந்தக் கணவருக்கும் மனைவி அழுவது புலம்புவது அவர்கள் வீட்டாரைக் குறைப் பாட்டு பாடுவது பிடிக்காது. இதே அன்பு காட்டி கொஞ்சிக் குலவினால் பிடிக்கும். இந்த முறையில் செய்யும் போது அவருக்கே பயம் வரும், இவர்களின் பேச்சு இரவு நேரத்தில் அர்த்தமற்றது என்பது புரியும். 9 மாதங்கள் தானே ஆகி இருக்கிறது, போகப் போக உங்கள் அன்பிற்கு மதிப்பளிப்பார், குழந்தை, குடும்பம் என்று மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். தற்போதைய தேவை சமயோஜிதமும் பொறுமையும் தான். நாத்தனார், மாமியாரும் பார்த்து பார்த்து வரன் தேடி திருமணம் செய்து வைத்து விட்டு இந்தப் பாடுபடுத்தக் கூடாது. தங்களுக்குரிய எல்லைகள் உணர்ந்து நடக்க வேண்டும். தன் நிலையில் அந்தப் பெண்ணை வைத்து ஒவ்வொரு மாமியாரும் நாத்தனாரும் பார்த்து நடந்தால் அனேகக் குடும்பங்களில் சண்டையே வாராது.
அம்மா,நான் ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன் ஆனால் நான் இரண்டு வருடமாக எனது சொந்தகார பெண்ணை காதலித்தேன் . எங்களுக்குள் கணவன் - மனைவி என்னென்னே செய்வான்களோ எல்லாம் முடிந்தது . நான் ஒரு பழக்கம் உள்ளவன் . என்னவென்றால் என் பொண்டடியை போடி வாடி என்று சொல்லும் உரிமை எனக்கு மட்டுமே வேண்டும் . இதற்கிடையில் ஒருவன் அவளை போடி வாடி என்று மெசேஜ் அனுப்பினான் . அதை கண்டித்தேன் அவள் மிண்டும் அவன் அனுப்புனதை என்னிடம் மறைத்தால் மிண்டும் கண்டித்தேன் . இதனால் அவள் என்னை விட்டு பிரிந்து விட்டால் இதை சரி செய்ய ஒரு யோசனை குடுங்க அம்மா
ரேவதி - kOTAGIRI,இந்தியா
காதலித்து உடல் உறவு கொள்கிறவர்கள் கூட பின்பு வேறு ஒருவரை திருமணம் செய்கிறார்கள் ...நிங்கள் ஏன் தயங்குரிங்க ரேவதி...நிங்களும் அவரு ஒரு தொடர்பில் இருந்தால் கூட அவர் கெட்டவர் என்று தெரிந்த படியால் அவரை விடுத்து வேறு ஒருவரை திருமணம் செய்யுங்கள் ,ஆனால் திருமணம் செய்த பிறகு எந்த காரணம் கொண்டும் உங்கள் பழைய காதலை புதுப்பிக்காமல் கணவருக்கு உண்மையா இருங்கள்...வாழ்த்துக்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.