கடந்த வாரம் ஒரு நாள் மாலை, கலங்கரை விளக்கிலிருந்து, விஸ்க், விஸ்க் என கண்ணகி சிலை நோக்கி வாக்கிங் போய் கொண்டிருந்தோம். மத்திய அரசு பணியில் உள்ள நண்பரும், மொபைல்போன் நிறுவன ஆபீசரான நண்பரும் உடன் வந்தனர்.
நடந்து கொண்டே இருக்கும்போது, தொடர்ந்து நாலைந்து தும்மல் போட்டார் அரசு பணி நண்பர். "என்ன ஜி... ஜலதோஷமா?' எனக் கேட்டேன்.
"அதை ஏம்ப்பா கேட்கறே... இந்தக் கருமம், ஆறு மாசமாவே இருக்கு... என்னோட டாக்டர், தலைமுடிக்கு, "டை' அடிக்கிறதை விட்டு விடச் சொல்றாரு... அந்த, "டை' எனக்கு ஒத்துக்கலியாம். அந்த அலர்ஜியால தான், தும்மல் போக மாட்டேங்குது என்கிறார்... "டை' அடிக்காமப் போனா, என் சாயம் வெளுத்துடும். ஆபீஸ் லேடி ஸ்டாப் எல்லாம் என்னை கேவலமா பாக்க மாட்டாங்களா?' எனக் கேட்டார்.
"இயற்கை மூலிகைகளால் ஆன, "டை' எல்லாம் கிடைக்கிறதா சொல்றாங்களே... அதை பயன்படுத்திப் பார்க்கலாமே...' என்றேன்.
அதற்குள் நடுவே புகுந்து, "அண்ணா... பாருங்கண்ணா... எனக்கு இப்பவே நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. நான் எப்படிண்ணா, "டை' போட்டுக்கிறது?' எனக் கேட்டார் மொபைல் போன் ஆபீசர் நண்பர்.
வேகமான நடையை நிறுத்தி விட்டு, "டிப்ஸ்' கொடுக்கலானார் அரசு பணி நண்பர். அது உங்களுக்கும் பயன்படலாம்... அவை:
டை போட்டுக் கொள்ள சவுகரியமான இடம் குளியலறை. ஆனால், இதில் ஒரு அபாயம் உண்டு... நீங்கள் பாட்டுக்குச் சுவாரசியமாக சர், சர்ரென்று பிரஷ் மூலம் தலைக்கு, "டை' அடிப்பீர்கள். அப்புறம் பார்த்தால், துவைப்பதற்காக, ஏற்கனவே குளியல் அறையில், வாளிகளில் வைத்துள்ள துணிகள் பூராவிலும் சாயம் ஸ்பிரே ஆகியிருக்கும். துணியிலிருந்து கறை அவ்வளவு சாமான்யமாகப் போகாதாகையால், குடும்பத்தில் சிறு பூசல்கள் விளைய வாய்ப்புண்டு.
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்னும் அமுதமொழி, "டை'க்காரர்களுக்கென்றே ஏற்பட்டது. கன்னங்கரேலென்று முற்றிலுமாகச் சாயம் பூசிவிடக் கூடாது; லேசாக சில நரைத் திட்டுக்களை இங்குமங்கும் விட்டு வைக்க வேண்டும். நரை மூலம், நம் வயதைக் கணிக்கிறவர்களுக்குத் திணறல் ஏற்படுத்த நல்ல உபாயம்.
தலைக்கு, "டை' போடுவதால் ஏற்படும் இளமைத் தோற்றம், மனைவியிடம் நம் அந்தஸ்தை ஓரளவு உயர்த்தினாலும், சில மனைவியர்களுக்கு சாயத்தின் வாடை பிடிக்காமல், கட்டிலைத் தள்ளிப் போட்டு விடக்கூடிய அபாயம் உண்டு.
கடைசி சமாச்சாரத்தை கேள்விப்பட்ட மொபைல் போன் ஆபீசர் நண்பர் ஓட்டம் எடுத்தார்!
***
பெண்கள் எவ்வளவு சுலபமாக ஆண்களால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதற்கு இக்கடிதம் ஒரு சான்று; விருத்தாசலத்தில் இருந்து வாசகி ஒருவர் எழுதிய கடிதம் இது: நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். நான் — இனத்தை சேர்ந்தவள். நான் ஒருவரை மனமார காதலித்து வருகிறேன். அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. இரண்டு பிள்ளைகள். அவர் மனைவி வேலை பார்க்கிறார்; இவர் வேலைக்குப் போகவில்லை. எங்கள் காதல் விஷயம் அவர் மனைவிக்கோ, எங்கள் குடும்பத்திற்கோ தெரியாது. கல்யாணத்திற்கு பிறகு நடக்க வேண்டியதெல்லாம், இப்போதே அவர் மூலம் எனக்கு நடந்து விட்டது.
"காதல்' என்றாலே எனக்கு பிடிக்காமல் இருந்தது. ஆண்களைக் கண்டாலும் எனக்குப் பிடிக்காது; ஆனால், இவரிடம் மனதை பறிகொடுத்தது எப்படி என்று தெரியவில்லை. எங்களுக்குள் இதுவரை, எந்த வேற்றுமையும் இருந்தது இல்லை. ஆனால், இப்போது என்னை வேற்றுமையாக நினைக்கிறார். என் உடம்புக்கு ஏதாவது என்றால், முன்பு பதறிப் போய் விடுவார்; ஆனால், இப்போது என் உடம்பிற்கு ஏதாவது என்றால் பதறுவது கிடையாது.
ஏதாவது மனதில் நினைத்துக் கொண்டு திட்டுகிறார். எங்கே போனாலும், என்னிடம் சொல்லாமல் போக மாட்டார்; ஆனால், இப்போது எங்கே போனாலும் சொல்வதில்லை. என் சகோதரிக்கும், தோழிக்கும் எங்கள் விஷயம் தெரியும். மற்றவர் யாருக்கும் தெரியாது. அதுபோல், அவருடைய நண்பர்களுக்கும் தெரியும்; ஆனால், எப்படிப்பட்ட பழக்கம் என்று அவர்களுக்கு தெரியாது.
நாங்கள் காதலிக்கிற விஷயம் மட்டும் தான் தெரியும்; மற்ற விஷயம் எதுவும் தெரியாது. "நம் விஷயம், உங்கள் மனைவிக்கு தெரிந்தால், நீங்கள் என்னை கைவிட்டு விடுவீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர், "யார் தடுத்தாலும், என்ன சொன்னாலும் நான் உன்னை கைவிட மாட்டேன்...' என்று சொல்லி, அவர் ஆசையை தீர்த்துக் கொண்டார். "உன்னை கல்யாணம் செய்து, சென்னையில் குடி அமர்த்தி விடுவேன்...' என்றார்.
அவர் முன்பு இருந்தது போல், இப்போது இல்லை. ஆள் மாறி விட்டார். "உன்னை கை விட மாட் டேன்...' என்றும், "உன்னை கண் கலங்காமல் காப்பாற்றுவேன்...' என்றும் சொன்னவர், இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.
என்னிடம் சரியாக அவர் பேசுவது கிடையாது; ஆனால், இப்போது, என் தோழியிடம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்து பேசுகிறார். எங்கே போனாலும், என் தோழியிடம் சொல்லிக் கொண்டு போகிறார். என் தோழி, சில விஷயங்கள் என்னிடம் சொல்வாள்; சில விஷயங்கள் மறைத்து விடுவாள். எங்கள் கல்யாணம் நடக்குமா? என்னை விட்டு அவர் பிரியாமல் இருப்பாரா? என்னைக் கைவிட்டு விடுவாரா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். என்னால் எதையும் தாங்கிக் கொள்கிற சக்தி கிடையாது.
...என்ற ரீதியில் தொடர்கிறது கடிதம்! தேன் குடித்த வண்டு, அடுத்த மலர் தாவப் பார்க்கிறது என்று கூட தெரியாமல் இருக்கும், இந்த வாசகிக்கும், தெரிந்தே கிணற்றில் விழ உள்ள வாசகியின் தோழிக்குமாக அறிவுரை தனிப்பட்ட கடிதத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
படித்து, பணியிலுள்ள பெண்களில் கூட, சிலர் இவ்வாறான அறியாமை கொண்டுள்ளதை நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.
***
இது பொம்பளைங்க சமாச் சாரம். படிக்கிறதுன்னா, ஆம்பளைங்களும் படிக்கலாம். "பிரம் பர்னிங் த பிரா டு பிளாண்டிங் இட்!' என்ற சிறிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றை சமீபத்தில் படித்தேன்! (படித்துக் காட்டியவர் வழக்கம் போல் உதவி ஆசிரியர்) புத்தகத்தை எழுதியவர் சூசி மென்கீஸ் என்ற பெண்மணி.
இந்தப் புத்தகத் தலைப்பின் கிட்டத்தட்ட தமிழாக்கம்: மார் கச்சையை எரிப்பதில் இருந்து அதை வெளியே அணிவது வரை!
சூசி கூறுகிறார்: சரியாக, 42 வருடங்களுக்கு முன், 1970ல், மார்கச்சை - பிராவை நடு ரோட்டில் தீயிட்டுக் கொளுத்தினர் அமெரிக்கப் பெண்கள்!
"ஒரு போகப் பொருளாக பெண்களை சித்தரிக்க உதவுவது இந்த, "பிரா'தான். பெண்கள் விடுதலையின் எதிரியாக இந்த, "பிரா'வைக் கருதுகிறோம். எனவே, இனி இதை அணியப் போவதில்லை. தீ இட்டுக் கொளுத்துவோம் இதை...' என பிரகடனம் செய்தனர்.
அன்று முதல், பெண் விடுதலை விரும்பும் அம்மணியர், "பிரா' அணிவதை சுத்தமாக நிறுத்தினர். தம் முடிவுக்கு ஆதரவாக, பிராவுக்கு எதிராக உள்ள அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் தேடி எடுத்துப் பேசினர், எழுதினர்.
ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இன்று, "பிரா' அணிவதை, அதுவும் மேலாடைக்கு வெளியே தெரியும்படி அணிவதை பெண்களின், "செக்சுவல்' சுதந்திரத்திற்கு ஆதாரமாகக் கூற ஆரம்பித்துள்ளனர். நிலைமை இப்படி தலைகீழாக மாறுவதற்கு வழி வகுத்தவர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜாய்ஸ் நட்ரோரி என்ற பெண்மணி. இவர் பெண்களின் உடைகளை வடிவமைப்பதில் புகழ் பெற்றவர். அமெரிக்காவில் வாழ்கிறார்.
பிரபல ஆங்கிலப் பாடகி மடோனாவிற்கு பிராவுடன் கூடிய அமைப்பில் ஒரு உடை வடிவமைத்துக் கொடுத்தார். அந்த உடையை அணிந்து, இசை நிகழ்ச்சிகளில் மடோனா பங்கேற்கவும், பெண் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அம்மணியர் மீண்டும், "பிரா' அணியத் துவங்கியுள்ளனர். அதன் தயாரிப்பும், விற்பனையும் அமெரிக்கா, ஐரோப்பாவில் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது...
— இப்படி எழுதியுள்ளார். எது எப்படியோ, அங்குள்ள அம்மணியர் போல, "எடுத்தேன்... கவிழ்த்தேன்' என்பது போல் அல்லாமல், நம்மூர் பெண்கள் தம் குறிக்கோளான, "பெண் விடுதலை' நோக்கி நிதானமாக முன்னேறுவது வரவேற்கத்தக்கது தான்!
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கல்யாணம் பண்ணின ஆண்கள் கன்னி பெண்களுக்கு வலை வீசுவது ஒரு மததாரால் தீவிரமாக செயல்படுத்த படுகின்றது. அதற்கு என்னுடைய உறவுக்கார பெண் பலியானது மிகவும் வருத்தமான விசயம். பெண்கள் இன்றைக்கு ஆடு போல் மாறிவிட்டனர். ஆடு தான் இரை போட வந்தவனை முட்ட வரும்,கசாப்பு கடைக்காரன் பின்னாடி அமைதியாக செல்லும். இந்திய பண்பு சிரழிந்து வருவது வருத்தமான உண்மை.
(1 )திருமணமானவர்கள் திருமணமாகாதவர்களை காதலிப்பதும், திருமணமாகதவர்கள் திருமணமானவர்களை காதலிப்பதும் ஏற்க முடியாதது.(2 ) கணவனோ,மனைவியோ,குழந்தைகள் உள்ளவர்களையோ காதலிப்பதும் ஏற்க முடியாதது.(3 )இந்தமாதிரியான சிந்தனை கொண்ட பெண்களும் இருக்கிறார்கள் தாகம் தீர்க்க பல ஆண்களை நாடுவது.ஒருவன் அயோக்கியன் தன்னை அடைய மட்டும்தான் பழகுகிறான் என தெரிந்தால் புத்திசாலித்தனமாக தன்னை இழக்காமல் விலகுவது நல்லது.இந்த அளவிற்கு உலகமறியா பெண்ணாக இருப்பது பரிதாபத்திற்குரியது.நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தால் பணிமாறுதல் வாங்கி வேறு இடத்திற்கு சென்று விடுங்கள்.அவனைவிட்டு நீங்கள் விலகுங்கள்.இந்த சமூகம் ஊசி நூல் என்று வியாக்கியானம் பேசும்.வழி சொல்வது எளிது வாழ்க்கை கிடைப்பது கடினம்.அதுபோக "நல்ல சகோதரி நல்ல தோழி" பரிதாபத்திற்குரிய இந்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அன்பரே! உங்களின் சகோதரிகள், மகள்கள் இவர்களை யாராவது இந்தமாதிரி செய்தால் அங்கீகரிபீர்களா? "இன்று அவர்களுக்கு என்றால் நாளை நமக்கும் வரும்."மீண்டும் இந்தமாதிரியான செயல்களை நிறுத்த முயற்சியுங்கள்."ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது உயரிய பண்பாடு"இல்லை எனில் வாழ்வின் இறுதிகாலம் மிகுந்த சிரமமாகிவிடும். நிறைந்த அன்புடன் ............................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.