அண்மையில் மயிலை பெத்தாச்சி கலையரங்கத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து தாயகம் வந்து நடனம் ஆடிய இரண்டு இளம் பூஞ்சிட்டுக்களான மவுனிகா நாராயணன் - இஷானா சகோதரிகள், ரசிகர்களை தனது நடனத்தில் கவர்ந்தனர். நாட்டியக் கலைக்கு பெருமை சேர்த்த ஆசான்களாக மும்பை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திர் நடனப் பள்ளி உள்ளது. இதன் குரு - மகாலிங்கம் பிள்ளை மற்றும் கோவிந்தராஜன் ஆகியோரிடம் பயின்று, தற்போது, அமெரிக்காவில் கிருபா டான்ஸ் கம்பெனியை நடத்தி வரும், நடன ஆசிரியை விஷால் ரமணியிடம், இந்த சகோதரிகள் பிஞ்சு பருவம் முதல் நடனம் கற்று, நிறைய மேடைகளில் அடியுள்ளனர். அண்மையில் அசத்தி விட்டனர் தம் நாட்டியத் திறமையில்.
நடன ஆசிரியை விஷால் ரமணியின் சிறந்த நாட்டிய வடிவமைப்பு, இந்த நிகழ்ச்சி முழுவதும் சிறப்பாக அமைந்தது. நடனத்திற்கு தேவையான கொடியுடல், எடுப்பான தோற்றம், உயரம் - அழகிய விழிகள் எல்லாமே பளிச்சென்று இருந்தன. இரு இளம் மலர்களாக மலர்ந்து வாசந்தி - கல்யாணி ராகமாலிகை (ஆதி தாளம்) புஷ்பாஞ்சலியை ஆடலரசன் நடராசப் பெருமானை வணங்கி, நிகழ்ச்சியை இனிதே துவக்கியது நல்லதோர் ஆரம்பம்.
மன்னார்குடி சாம்பசிவ பாகவதருடைய பெயர் சங்கீத வரலாற்றில் பொறிக்கப்பட்ட பெயர். இந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களே மவுனிகா - இஷானா இருவரும், இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி சாம்பசிவ அய்யர் இயற்றிய சிறந்த சாகித்யமான "நாதுபை நீகு தயலேதா' என்ற (அடாணா ராகம் - கண்டசாபு) பாடலின் மூலம் ஸ்ரீ ராமருடைய தயாள குணம், காருண்யம் இவை அனைத்தையும் மிக அழகாக வெளிப்படுத்திய புராண நிகழ்வுகள் மூலம் சிறப்பாக ஆடினர்.
பிரதான வர்ணமாக ஸ்ரீ பாபநாசம் சிவனுடைய சிறந்த வர்ணம், "சுவாமி நான் உந்தன் அடிமை' (நாடக்குறிஞ்சி - ஆதி) மூலம் சிவ பெருமானின் கருணை, மார்க்கண்டேயனுக்கு அருளியது - மன்மதனை மீண்டும் உயிர் பெறச் செய்தது என அடுக்கடுக்கான நிகழ்ச்சிகளை அபிநயித்தனர். அம்புஜம் கிருஷ்ணாவின் அரவிந்த பதமலர் நோகுமே (பூர்வி கல்யாணி - காபி) (ஆதி) பதத்திற்கு அருமையாக அபிநயம் அமைந்திருந்தது. பாரதியாருடைய, "தீராத விளையாட்டுப் பிள்ளை' பதத்தில், கண்ணனின் குறும்புகள் கொள்ளையழகாக ஆடினர். நிறைவாக ஊத்துக்காடு வேங்கட கவியின், காளிங்க நர்த்தன தில்லானா (கம்பீர நாட்டை) (ஆதி)வைத் தேர்வு செய்தனர்.
இதில் பாடல், வசனங்கள், ஜதிகள் எல்லாமே இருக்கும். அபாரமாக இதனை உயர்வான அபிநயம், காளிங்க முத்திரைகள், நிருத்தம் இவை சேர இருவரும் ஆடியது பாராட்ட வைத்தது.
கலைமாமணிகள் ராதா பத்ரியும் (பாட்டு), நெல்லை கண்ணனும் (மிருதங்கம்) பாராட்ட வார்த்தை இல்லை. தூள் கிளப்பிய நிகழ்ச்சி. கலையரசன் (வயலின்), தேவராஜன் (குழலிசை) அனைத்திற்கும் மேலாக உயர்வான நட்டுவாங்கத்திற்காக வித்யாவைப் பாராட்ட வேண்டும். செதுக்கிய சிற்பங்கள் இரண்டு இடம் பெயர்ந்து வந்து ஆடியது போல் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.
- மாளவிகா.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.