திருச்சி போக வேண்டிய நிர்பந்தம்...
எழும்பூரில் ரயில் பிடித்தேன். சவுகரியமாக அமர்ந்த பின், உடன் எடுத்துச் சென்றிருந்த எஸ்.எம்.கமால் எழுதிய, "மன்னர் பாஸ்கர சேதுபதி' என்ற நூலை படிக்க ஆரம்பித்தேன்.
அதிலிருந்து சுவையான பகுதி:
பாஸ்கரர் ஐந்தாண்டு பிராயத்தினராக இருக்கும் பொழுதே அவரது தந்தை இரண்டாவது முத்துராமலிங்க சேதுபதி காலமானார். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்ட பிரிட்டிஷ் துரைத்தனத்தாரின்,"கோர்ட் ஆப் லார்ட்ஸ்' என்ற ஆட்சிக்குழு, மறைந்த சேது மன்னரது மக்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. பாலகர்களாக இருந்த பாஸ்கரரையும், தினகரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்கு கல்வி கற்க ஏற்பாடு செய்தது. தம் அன்றாட வாழ்க்கையை பற்றி முறையாக நாட்குறிப்புகளிலும், சொந்தச் செலவுகளை கணக்குப் பதிவேடுகளிலும் பதிவு செய்து வந்தார் பாஸ்கரர்.
இளவரசர் பாஸ்கரர், 1888ல், எப்.ஏ., பட்டத் தேர்வில் தேர்வு பெற்ற பின், அரசாங்கத்தார் பாஸ்கரது திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர். அத்துடன் சமஸ்தான நிதியில் இருந்து திருமணச் செலவிற்காக, 50 ஆயிரமும் ஒதுக்கீடு செய்தனர். ஆனால், ராணியார், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து, பாஸ்கர சேதுபதி திருமணத்தை மே 13, 1888ல், ஆடம்பரமாக நடத்தி வைத்தார்.
மன்னரது வாழ்க்கைத் துணையாக வந்தவர், களவரி கிராமம் சேதுராஜ தேவர் மகள் மங்களேசுவரி நாச்சியார். இந்தத் திருமணம் நடைபெற்ற சில நிமிடங்களில் மன்னருக்கும், சிவபாக்கியம் நாச்சியார் என்ற மங்கை நல்லாளுக்கும் அரண்மனை அந்தப்புரத்தில் மற்றுமொரு திருமணமும் நிறைவேறியது. ஏற்கனவே, கும்பினியார் இந்த இரண்டாவது திருமணத்திற்கு அனுமதி மறுத்ததால், உறவினர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் தனியாக நடந்தது.
மன்னரது தூரத்து உறவினரான தூவல் கிராமம் கண்ணுச்சாமி தேவர், தம் மகள் சிவபாக்கியத்தை ராமநாதபுரம் அரண்மனைக்கு அழைத்து வந்து, கி.பி. 1885ல், மன்னரது தாயாரிடம் ஒப்படைத்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரினார். துரைத்தனத்தாரின் முன் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தின் பொழுது, ராணியின் இன்னொரு உறவினரான களவரி கிராமம் சேதுராஜத் தேவர், அவரது மகள் மங்களேசுவரியை மன்னருக்குத் துணைவியாக ஏற்றுக் கொள்ளுமாறு ராணியை வற்புறுத்தி வந்தார்.
இருவரும் மன்னரது உறவினர்கள். இவர்களில் யாராவது ஒருவரைப் புறக்கணித்தாலும், சுற்றத்தாருக்குள் மனவருத்தம் ஏற்படுவது இயல்பு; ஆதலால், இருவரையுமே மணப்பெண்களாக வரித்துக் கொள்ளும் நிர்பந்தம் மன்னருக்கு ஏற்பட்டது.
ராமேசுவரத்தில் தங்கிய போது, ராமநாத சுவாமி @காவிலில் அர்த்தசாம பூஜையில், முழுவதுமாக கலந்து, சுவாமி, அம்பாள் திருமேனிகள் பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்படும் பல்லக்கிற்கு முன், மிகவும் எளியவராக தங்கத்தீவட்டி தூக்கிக் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் மன்னர்.
வேம்பு ஐயர் என்ற புலவர், தமிழில் இரு பொருள்பட பேசுவதில், பாக்களைப் புனைவதில் சிறந்து விளங்கினார். இதனால், அவருக்கு சிலேடைப்புலி என்ற பட்டமும் உண்டு. ஒருநாள் அவர், மன்னரது அவைக்கு வந்தார். அப்பொழுது புலவர்கள் பகுதியில் இருந்த அனைத்து இருக்கைகளிலும் புலவர்கள் நிறைந்து இருந்தனர்.
செய்வதறியாது ஒரு நிமிடம் அவர் மலைத்து நின்றார். அவரை ஏளனமாக ஒரு புலவர், "வேம்பு நிற்பதுதான் இயல்பு...' என்றார். நிலைமையைப் புரிந்த மன்னர், புலவரை அழைத்துத் தமக்கு அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்து, அவரைப் பெருமைப்படுத்தினார்.
மகிழ்ச்சியால் திளைத்த புலவர், "அரசு அருகில் தான் வேம்பு இருக்கும்!' என்று சிலேடையாகச் சொன்னார். (அரச மரமும், வேப்ப மரமும் அருகருகே வளரச் செய்வது தமிழக மரபு) புலவரது திறமையான பதில், அவையில் இருந்த அனைவரையும் மகிழ்வித்தது.
இந்த சமயத்தில், அமெரிக்க நாட்டில் அனைத்துச் சமயங்களின் பேரவை கூடவிருக்கிறது என்ற செய்தி மன்னருக்கு கிடைத்தது. தாம் மேற்கொண்டுள்ள தெய்வீகத் திருப்பணி அனைத்திலும், இந்தப் பேரவையிலும் கலந்து, இந்து சமயச் சிறப்பையும், இந்திய நாட்டின் பண்பாட்டு கலப்பையும் மேல்நாட்டார் புரிந்து கொள்ள செய்வது தம் கடமையெனக் கருதினார்.
இந்திய நாட்டின் எந்த மடாதிபதியும், சனாதனவாதியும் எண்ணிப் பார்க்காத செயல் இது. மதுரை ஜில்லாக் கலெக்டராக இருந்த கரோல் என்ற வெள்ளையர் மூலமாக, தம் பயணத்திற்கு ஏற்பாடுகளைச் செய்தார் பாஸ்கரர். இதற்கிடையில் கன்னியாகுமரிக்கு யாத்திரையாக வந்த சுவாமி விவேகானந்தரை (நரேந்திரர்) சென்னை நண்பர் ஜஸ்டிஸ் சுப்ரமணிய ஐயர் மூலமாகக் கேள்விப்பட்டு சந்தித்தார். அவருடன் ஆன்மிக சித்தாந்தச் செய்திகளை அளவளாவி, பரிமாறிக் கொண்ட பின், தம் பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டார் மன்னர்.
இல்லறத்தில் இருக்கும் தம்மை விட, ஒரு துறவி மூலமாக அந்தக் கருத்துக்களை ஆங்கில மொழியில் உலகப் பேரவையில் வெளியிடுவது இன்னும் பொருத்தமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று எண்ணினார். முதலில் சுவாமிகள் தயங்கினாலும், பின் ஒப்புக் கொண்டார்.
சுவாமிகளும் பம்பாய் துறைமுகத்திலிருந்து பெனின்சுலா என்ற கப்பலில், மே 31, 1893ல், அமெரிக்க பயணத்தைத் தொடங்கினார். ஜூலை கடைசி வாரத்தில் சிகாகோ போய் சேர்ந்தார். நான்கு ஆண்டு கால வெற்றிப் பயணத்தை மேனாடுகளில் சிறப்பாக முடித்துவிட்டு, "சுவாமி விவேகானந்தராக' தாயகம் திரும்பினார் நரேந்திரர்.
கொழும்பு துறைமுகத்தை அடைந்த சுவாமிகள், யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து தென்மேற்கு திசையில் ராமநாதபுரம் சேதுபதி மன்னரது துறைமுகமான பாம்பனுக்கு ஜன., 20, 1897 அன்று வந்து சேர்ந்தார். முன்னதாகவே அந்த ஊருக்கு வந்து இருந்து, சுவாமிகளுக்கான வரவேற்பு ஏற்பாடுகளில் முனைந்து காத்திருந்த பாஸ்கர சேதுபதி மன்னர், பாம்பன் துறையில் தன் பரிவாரங்களுடனும், பக்த கோடிகளுடனும் பிரமாண்டமான வரவேற்பு ஒன்றை வழங்கினார். நினைவுச் சின்னம் ஒன்றையும் திறந்து வைத்தார்.
படகில் இருந்து தரையிறங்கிய சுவாமிகளது புனித பாதங்களை, தன் தலையிலே வைத்து தரை இறங்குமாறு மன்னர் வேண்டிக் கொண்டார்...
— இப்படி இன்னும் சுவையான சம்பவங்களை புத்தகம் விவரிக்கிறது; இன்னும் படித்து முடிக்கவில்லை!
***
"சமண மதத்தைத் தோற்றுவித்தவர் மகாவீரர் தானே?' என்று குப்பண்ணாவிடம் கேட்டார் அன்வர் பாய்.
"இல்லையில்லை; மகாவீரருக்கு முன்னே சமண மதம் இருந்தது...' என்றார் குப்பண்ணா.
"சமண மதத்தை இந்தியாவெங்கும் பரப்பியவர்தான் மகாவீரர். அவருடைய இயற்பெயர் வர்த்தமானர். இன்று பீகார் என வழங்கும் மகத நாட்டில் பாடலிபுத்திரத்திற்கு அருகில் குண்டலபுரம் என்ற ஊரில் கி.மு., 599ல் பிறந்தார்.
"இவருடைய தந்தை ஒரு சிற்றரசர். தம் 30வது வயதிலேயே தம்முடைய செல்வத்தையெல்லாம் மக்களுக்கு வழங்கி துறவியானார் மகாவீரர். கடுந்தவத்தால் விருப்பு, வெறுப்புகளை வென்றதால் இவரை, "மகாவீரர்' என்றனர்.
"சமண மதத்தின் கொள்கைகளை வகுத்தவர்கள் தீர்த்தங்கரர்கள். இவர்கள், 24 பேர். இவர்களில் முதலாமவர் ரிஷபதேவர். தீர்த்தங்கரர்களின் வழி நின்று மக்களுக்குப் போதித்தார் மகாவீரர். இவரைக் கடைசி தீர்த்தங்கரர் என்பர்.
"தம் 72ம் வயதில் பவாபுரி என்னும் இடத்தில் மறைந்தார் மகாவீரர்...' என விளக்கம் கொடுத்தார்.
அன்வர் பாய்க்கும் புரிந்தது; எனக்கும் புரிந்தது!
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
செல்வத்தை எல்லாம் மக்களுக்கு வழங்கினார், துறவியானார், விருப்பு வெறுப்புகளை ஒதுக்கினார் என்று ஒற்றை வரியில் சொல்லாமல் அது போல் எவ்வாறு தங்களை மாற்றுவது அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்று தனி புத்தகமோ அல்லது ஆராய்ச்சியோ செய்ய வேண்டும்.
ஊழல், கொள்ளை, பிறரை துன்புறுத்துவது போன்ற மனிதத்தன்மையற்ற செயல் பெருகிவரும் இந்த நேரத்தில் அந்த மகான்கள் எவ்வாறு தனது மனதை பொதுநலத்திற்காக மாற்றினார்கள் என்ற சூத்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
ஆராய்ச்சிக்காக அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் இல்லை

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.