அன்றைக்கு குப்பண்ணா வீட்டிற்குப் போய் இருந்தேன். வீடு முழுவதும் புது வர்ணம் பூசிஇருந்ததால், பெயின்ட் நெடி மூக்கைத் துளைத்தது.
"இந்தப் புதுவர்ண நெடியைப் போக்க, ஒரு வழி இருக்கிறது. வர்ணம் பூசப்பட்ட அறைக்கு மத்தியில், சில வெங்காயங்களை இரண்டாக வெட்டி அப்படியே வையுங்கள். வர்ணப் பூச்சின் நெடியை கிரகித்து விடும் சக்தி, வெட்டிய வெங்காயத்திற்கு இருக்கிறது...' என்று அவரிடம், "ஐடியா' கொடுத்தேன்.
உடனே குப்பண்ணா, "நாங்க, வெங்காயம், பூண்டு சேக்கறது இல்லே... இருந்தாலும், வெங்காயத்தைப் பற்றி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கேன்; கேட்டுக்கோ...' என்றபடியே ஆரம்பித்தார்: வெங்காயம், "லில்லி' இனத்தைச் சேர்ந்தது என்கின்றனர் தாவரவியல் விஞ்ஞானிகள். வெங்காயத்தில், 500 இனங்களுக்கு மேல் இருக்கின்றன. வெங்காயத்தை, சமையற்கட்டை அரசாளும் ராஜா என்றாலும் தகும். ஆசியப் பகுதியில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டது என்கின்றனர்.
வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறோம். இது லத்தீன் வார்த்தையான, "யூனியோ' என்பதிலிருந்தும் பிரெஞ்சு சொல்லான, "ஆன்னான்' என்பதிலிருந்தும் தோன்றியது.
"முதன் முதலில் சக்திமிக்க மருத்துவ மூலிகையாகவே வெங்காயம் அறிமுகம் ஆனது. நல்ல கண் பார்வையை பெற வெங்காயம் உதவுவதாக நம்பினார், மருத்துவ தந்தையான ஹிப்போகிரேடஸ். 1596ல் வெளியிடப்பட்ட, "இறந்த மூலிகைகள்' என்ற நூலில், வழுக்கைத் தலையில் முடி வளர, வெங்காயச் சாறு உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெங்காயம், வலிப்பு நோயைக் குணப்படுத்தும், ஜலதோஷத்தைப் போக்கும், மூட்டுவலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை குறைக்கும், உடலின் அதிகபட்ச கொழுப்பை நீக்கும், அஜீரணத்தைப் போக்கும் என்றும், ஆயுர்வேத மருத்துவ நூல்களில் குறிக்கப்பட்டுள்ளது.
கால்ஷியம், இரும்பு சத்து, புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள், வெங்காயத்தில் நிறைய உள்ளன.
வெங்காயத்தின் மகாத்மியத்தை வெகுவாக அறிந்திருந்தனர் பண்டைய எகிப்தியர்கள். எகிப்திய பிரமிடுகளை உருவாக்கிய அடிமைகளுக்கு சக்தியூட்ட, வெங்காயத்தையே முழு உணவாக அளித்தனர்; அவர்கள் வெங்காயத்தை புனிதப் பொருளாகவும் கருதினர்.
ரோமில் நீரோ மன்னன், தான் இனிய குரலைப் பெற்றதற்கு, வெங்காயமே பெரும் காரணம் எனப் புகழ் பாடினான். மத்திய கால ஐரோப்பியர்கள் திருமணப் பரிசாக வெங்காயத்தை அளித்து வந்தனர்...
இவ்வளவு புகழும், பலனும் உள்ள வெங்காயத்தை, ஆத்துக்குள் (வீட்டிற்குள்) சேர்க்கவிட மாட்டா எங்காத்து மாமி... "அது ராட்சஷ குணத்தை கொடுக்கும்... சேக்கப்படாது...' என்று சொல்லி விடுவாள். அவளுக்கு தெரியாம, ஓட்டல், நண்பர்கள் வீடுகளில் தான் வெங்காய சாம்பார், சட்னி, வெங்காய பஜ்ஜி எல்லாம், "வெட்டி' வருகிறேன்... என முடித்தார்!
— நமக்கு இந்தத் தொல்லை இல்லை என எண்ணியபடியே நடையைக் கட்டினேன்!
***
சிதார் இசை கலைஞர் ரவிசங்கர் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவரது சிதார் இசை கச்சேரிக்கு நேரில் சென்று இருக்காவிட்டாலும், "டிவி' நிகழ்ச்சியிலாவது கண்டு களித்திருப்பீர்கள். அவரது சுயசரிதை நூலை சமீபத்தில் படித்தேன். அதில், விமர்சகர் ஒருவர் பற்றி ரவிசங்கர் இப்படிக் குறிப்பிடுகிறார்...
டில்லியிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையின் சங்கீத விமர்சகர், எல்லா கலைஞர்களிடமும் குறை காண்பவர். கச்சேரியின் போது சரியாக எந்த நேரத்தில், பாடகர் பிசகு செய்கிறார் என்று குறிப்பிட்டு எழுதுவது அவரது வழக்கம்.
ஒரு முறை, அலி அக்பர்கான் சரோட்டுடன் நான் சிதார் இசைத்துக் கொண்டிருந்தேன். ஓரிடத்தில் தவறு செய்து விட்டேன். அடுத்த நாள் வழக்கம் போல் அந்த விமர்சகர், "இரவு 10.45மணிக்கு ரவிசங்கரின் விரல்கள் பிசகின...' என்று எழுயிருந்தார்.
மறுபடியும் அலியும், நானும் இணைந்து கச்சேரி செய்தோம். இம்முறை அலி அக்பரின் விரல்கள் பிசகு செய்தன. உடனே வாசிப்பை நிறுத்தி, சிதாரை கீழே வைத்தேன். ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தேன்... "நேரம் சரியாக, 11 மணி, 20 நிமிடம், 20 விநாடி ஆகிறது. அலி அக்பர் இப்பொழுது மூன்று இடங்களில் பிசகியிருக்கிறார்! குறிப்பிட்ட விமர்சகர் இதைக் குறித்துக் கொள்ளட்டும்' என்றேன். சபையில் பலத்த சிரிப்பொலி, விமர்சகர் வெளிநடப்பு செய்து கொண்டிருந்தார்.
— இவர் இசை மேதை மட்டுமல்ல; சரியான கிண்டல் பேர்வழி கூட என்பது புரிந்தது.
***
அன்று ஞாயிற்றுக்கிழமை! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கினேன் - சேலத்திலிருந்து! அடுத்த பெட்டியில் இருந்து இறங்கினார் நண்பரான அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி. ஏராளமாகப் படிப்பவர்; நல்ல அறிவாளி; திறமைசாலி.
"ஹலோ' சொன்னவர், தம் காரிலேயே என்னை கொண்டு விடுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார்.
பேச்சினூடே, "இன்று முழுவதும் ஓய்வு தானே சார்?' என்றேன். என் இருப்பிடம் சென்று சேரும் வரை, "ஞாயிறு' பற்றி பேசித் தீர்த்தார்:
ஞாயிற்றுக்கிழமை என்றாலே உலகமெங்கும் ஓய்வெடுக்கும் நாள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த அமைதியான நாளுக்கும், உலகத்தையே நடுங்கச் செய்த அநேக சம்பவங்களுக்கும் தான் எவ்வளவு தொடர்பு...
வாட்டர்லூ போரில் நெப்போலியன் கடைசியாகத் தோல்வியுற்றது 1815, ஜூன் மாதம் 18ம் தேதி ஞாயிறன்று! அமெரிக்கப் போர் கப்பல்கள், ஸ்பானிஷ் கடற்படையை நிர்மூலமாக்கியதும், 1898ம் ஆண்டு மே மாதத்திலொரு ஞாயிறன்று தான்!
போலந்து நாட்டின் மீது படையெடுத்து இரண்டாவது உலகப் போரைத் தொடங்கி வைத்தான் ஹிட்லர். இரண்டு வருடங்களுக்கு பின், ஜூன் மாதம் 22ம் தேதி ஞாயிறன்று ரஷ்யாவின் மீது படையெடுத்தான் ஹிட்லர்.
ஆறு மாதங்கள் கழித்து, டிசம்பர் மாதத்திலொரு ஞாயிறன்று ஜப்பானியர்கள், "பேர்ல் ஹார்பரில்' குண்டு வீசி, போரை அமெரிக்க கரைக்கே கொண்டு போய் விட்டனர்.
ஜூன் 4, 1941ல், ஞாயிற்றுக்கிழமை அன்று ரோமாபுரி நகரத்தை நேசப் படைகள் கைப்பற்றி, ஹிட்லரின் வெறியாட்டத்துக்கு முதல் சவக்குழியைத் தோண்டின.
மே 6, 1945ல் ஞாயிறு அன்று, ஐரோப்பாவில் போர் நிறுத்தப்பட்டு, ஹிட்லரின் சாம்ராஜ்யக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா நகரத்தில், ஆகஸ்ட் 5, 1945 ஞாயிற்றுக்கிழமையன்று அணுகுண்டு வீசப்பட்டு, உலகத்தில் அணு சகாப்தம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம், ஒரு ஞாயிறன்று, "மிசோரி' என்ற போர்க்கப்பல் ஜப்பானியர்களால் நொறுக்கப்பட்டது... அதனால், ஞாயிறு என்றால் ஓய்வு எனக் கொள்ள வேண்டாம் என்று முடித்தார்.
— ஏதோ பேச வேண்டும் என்பதற்காக, அனாவசியமாக பேசி வம்பை விலைக்கு வாங்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்!
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வெங்காயம் தலை முடி வளர உதவும் என்பது உண்மையே. 15 வருடங்களுக்கு முன்பு எனக்கு தலையில் புழு வெட்டு வந்து, தலையின் முன் பகுதி முழுதும் உதிர்ந்து விட்டது. தெரிந்த ஒரு barbar வெங்காய சாரும், குமிட்டிக்காய் சாரும் கலந்து என்னமோ செய்து குடுத்தார். உடனே முடி வளர்ந்தது. அதை பார்த்து இயற்கைலேயே சொட்டையான ஒருவர் என்னிடம் வங்கி தேய்த்து பார்த்தார். அவருக்கு பலன் கிடைக்கவில்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.