அண்மையில், சென்னை பிரும்மகான சபா ஏற்பாடு செய்திருந்த, ஆடி நாட்டிய விழாவில், நாட்டியக் கலையில் சுடர் விட்டு பிரகாசிக்கக் கூடிய, திறமையான பல இளங்கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த ஆடி நாட்டிய விழாவில், மனதை விட்டு அகலாத நாட்டிய நிகழ்ச்சியாக பதினோரு வயதே நிரம்பிய, சுவேதா பரத்வாஜ் நடனம் சிறப்பாக இருந்தது. சரசுவதி கான நிலையம் எனப் புகழ் பெற்றதொரு கலை அமைப்பு, மிகப் பழமையானது. இதில், நாட்டியக் கலைக்கு பெயர் பெற்ற, பல பிரபலங்கள் உருவாகி, வரலாறு படைத்துள்ளனர். குறிப்பாக, இதில் நாட்டியக் கலையை போதிக்கும் நாட்டிய குரு, கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமன், கிட்டத்தட்ட, 70 ஆண்டுகளாக, இக்கலையில் பிரசித்தி பெற்றவர்; 450 அரங்கேற்றங்களை செய்தவர். இளம் சுவேதா பரத்வாஜ், இப்படி புகழ்வாய்ந்த ஒரு குருவிடம் ஏழு ஆண்டுகளாக பயிற்சி பெற்று ஆடி வருகிறார் என்பதோடு, குருவின் சிறந்த வழிகாட்டுதலுடன், நடன அடவுகளையும், சஞ்சாரிகளையும் கச்சிதமாகவும்; மிகையேதும் இல்லாமலும், சம்பிரதாய சுத்தமாகவும், நடனத்தில் ஆடி வழங்கியதும் பாராட்ட வைத்தன.
நிருத்த வந்தனம் (கம்பீர நாட்டை - கண்ட சாபு) நிகழ்ச்சியிலே, நடை பேதங்கள் சிறப்பாக அமர்க்களமான துவக்கம் எனலாம். தொடர்ந்து இடம் பெற்ற ஊத்துக்காடு, வேங்கட கவியின் பிரபல பாடல் "ஸ்ரீவிக்னமராஜம் பஜே' (கம்பீர நாட்டை) மூலம் ஸ்ரீகணநாதரை அழகிய முத்திரைகளுடன் நர்த்தன கணபதியாக இடைச் செருகல், ஜதிக் கோர்வைகளுடன், சிறப்பாக ஆடியதும் மனம் கவர்ந்தது.
பிரதான வர்ணமாக, ஸ்ரீசரவணபவா நந்தாவின் தமிழினிமை சொட்டிய, ஸ்ரீதயை செய்தே சொல்லுவாய் (கரஹரப்ரியா - ஆதி) வர்ணம் முருகப்பெருமானின் மீது சிருங்கார பக்தியுடன் மயிலை தூது விடும் தலைவியின் காதலை வெளிப்படுத்தும் விதமாக, அமைந்த உருப்படியின் ஒவ்வொரு வரிகளையும் அனுபவித்து, அழகான, மென்மையான; அபிநயங்களுடன் சுவேதா ஆடியது, சிறப்பாக இருந்தது.
இந்த நடன நிகழ்ச்சியில், நட்டு வாங்கம் மிக அருமை என்பதற்கு, வர்ணத்தின் இடையே இடம் பெற்ற அடவுகளே, உதாரணம். நடைபேதங்கள், ஜதிகள், சிறப்பான பாத அசைவுகள் எல்லாமே மன நிறைவாக இருந்தன. அம்புஜம் கிருஷ்ணாவின், சின்ன சின்ன பதம் (காபி) பதத்திற்கு குழந்தை கண்ணனாக, மேடையில் தவழ்ந்து, மிரள விழித்து; உரி வெண்ணெய் திருடி மண்ணை தின்று, வாயில் ஈரேழு உலகங்களையும் காண்பித்தது, அருமையான அபிநயமாக இருந்தது.
சரசுவதிகான நிலையம் புகழ் லலிதா இயற்றிய, அம்ருதவர்ஷணி ராகம் - ஆதி தாளம் தில்லானா நிகழ்ச்சியில் நிருத்தம், நிருத்யம் இரண்டிற்கும் சரியான உதாரணமாக சிறப்பாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், நிறைய சிறப்பு அம்சங்கள் இருந்தன. கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமனின், நாட்டிய வடிவமைப்பு முதல் தரம் நட்டு வாங்கம் செய்த பத்மினி கிருஷ்ண மூர்த்தி, (சீனியர் ஸ்டூடண்ட் குருவிற்கு என்று கூறப்பட்டது.) மிக அருமையாக இருந்தது நட்டு வாங்கம். சிறுகுழி தாளத்தை, அழகாக உபயோகித்து மெருகேற்றினார். தம் பங்கை சிறப்பாக அவர், இந்நிகழ்ச்சிக்குப் பாடிய கலைமாமணி, ராதா பத்ரியின் அருமையான பாட்டு - பாடலும், தெளிதேனும் பாகும், பருப்பும் இவை நான்கும் கலந்து, நமக்கு தந்த இசை விருந்தாகும்.
லயம் கலைமாமணி, நெல்லை கண்ணனுடைய வாசிப்பு, மயங்க வைத்தது. கேட்கவே சுகமாக இருந்தது.
வயலினில் கண்டதேவி விஜயராகவனும், புல்லாங்குழலில் பாக்யலட்சுமியும், மிகச் சிறப்பாக வாசித்து மனம் மயக்கினர்.
காயத்ரி சுவாமி நாதன் ஒப்பனை படு ஜோர். ரீத்தி ஸ்வரூபி நிகழ்ச்சி வருணனையும் அருமை. இளம் நடனமணி சுவேதா, கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளியில், ஏழாம் வகுப்பு மாணவி.
- மாளவிகா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.