உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், பின்னாளில் சட்ட மொழி பெயர்ப்புத் துறை தலைவராக பதவி வகித்தார். அப்போது அவர் சொன்னார்:
ஷேக்ஸ்பியரின், "கிங்லியர்' நூலை மொழி பெயர்க்கும் போது எனக்கு ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. இளவரசி கார்லியா இறந்து போய் விட்டாள். அவளுடைய பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான் லியர் அரசன். தன்னுடைய அருமை மகள் இறந்திருக்க மாட்டாள் என்ற சந்தேகம் அவன் உள் மனதில் எழுகிறது.
அவன், "ஒரு கண்ணாடியை கொண்டு வாருங்கள்... அவள் மூக்குக்கு எதிரே அதைப் பிடித்தால் சுவாசம் இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்து விடும்...' என்று கூறினான்.
'It with mist the mirror' என்பது ஆங்கில வாக்கியம் - அதை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது?
பத்து நாட்கள் ஆகியும் பொருத்தமான தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை. ஒருநாள் சமையலறையில் என் மனைவி இட்லி தயார் செய்து கொண்டிருந்தாள். அதை பார்த்தவுடன், "கொப்பரையின் மூடியில் ஆவி படிகிற போது அதற்கு என்ன சொல்வது வழக்கம்?' என்று கேட்டேன்.
அவள், "வேர்த்து விடறதைக் கேட்கிறீர்களா?' என்றாள்.
கண்ணாடியை மூக்குக்கு எதிரே கொண்டு போனால், "கண்ணாடி வேர்த்து விடும்!' என்று மொழி பெயர்த்தால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்! Mist என்கிற வார்த்தைக்கு அப்படியே பொருள் கொண்டேன்.
சற்றே சிரமம் எடுத்துக் கொண்டால், எந்த ஒரு ஆங்கிலச் சொல்லுக்கும் பொருத்தமான தமிழ்ச் சொல், புழக்கத்திலுள்ள தமிழிலேயே இருப்பதைக் காணலாம்.
மூலத்தினுடைய அந்தராத்மாவை எப்படியாவது சொல்லித் தீர்த்துவிட வேண்டும் என்பதே நம்முடைய உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்குப் புறம்பான எந்த கருத்தையும் புறக்கணிக்க வேண்டியது மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை.
ஒரு குறிப்பிட்ட சொல் சுயம்பான தமிழ்ச் சொல்லா, பிற மொழி சொல்லா என்பது அல்ல பிரச்னை. அது உயிருள்ள சொல்லா, செத்த சொல்லா, மூல நூலின் சுவையையும், மணத்தையும் தமிழில் தரவல்ல சொல்லா, இல்லையா என்பது தான் பிரச்னை.
உயிருள்ள சொல்லானால், தமிழ்நாடு சமபந்தி போஜனம் செய்து கொண்டிருக்கிற சொல்லானால், அதை விட்டுக் கொடுக்கக் கூடாது; அது கிடைக்காது.
கத்தரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். கதே என்பது சீனச் சொல். அதை, தமிழில் கத்தரிக்காய் என்று புழக்கத்தில் கொண்டு வந்து விட்டோம். கத்தரிக்காய்க்குள் சீன மொழி இருக்கிறது. அதனால், கத்தரிக்காய்க்கு வேறு சொல்லையா கண்டுபிடிக்க வேண்டும்?
"கஷ்டம்' என்கிற சொல்லும் அம்மாதிரி தான். அது சமஸ்கிருதச் சொல் தான்; ஆயினும், பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழில் ஏற்றுக் கொண்டு விட்டோம்.
"டாய்லெட்' என்பதை, பிரெஞ்சு மொழியில், "துவாலே' என்று உச்சரிக்க வேண்டும். நாம் குளிப்பதற்கு உபயோகப்படுத்துகிற, "துவாலைத் துண்டு' என்கிற தமிழ் சொல் இந்த பிரெஞ்சு சொல்லிலிருந்து தான் நம்முடைய பழக்கத்திற்கு வந்திருக்கிறது.
மயில் தோகையில் உள்ள, "தோகை' என்கிற சொல்லையே ரோமில், "தோகா' என்று குறிப்பிடுகின்றனர். "தோகை' என்ற சொல் தமிழிலிருந்து ரோமுக்குப் போயிருக்கிறது.
துருக்கி மொழியில், "கூலி' என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். துருக்கியில் இருந்து வந்திருந்த தூது கோஷ்டி, நம் ஊர், "ஹார்பரில்' பேசப்படுகிற, "கூலி' என்கிற வார்த்தையை கேட்டுவிட்டு, "இந்த சொல்லை எப்படி நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?' என்று கேட்டார்களாம்.
அப்போது ரா.பி.சேதுபிள்ளை, "எவ்வளவு ஆண்டு காலமாக துருக்கி இலக்கியத்தில் இந்த சொல் பயன்படுகிறது?' என்று கேட்டார். "துருக்கி இலக்கியம் பிறந்தே ஆயிரம் ஆண்டுகளுக்குள் தான்!' என்று பதில் வந்தது. "மெய் வருத்தக் கூலி தரும்!' என்று திருவள்ளுவர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்...' என்று சேது பிள்ளை விளக்கம் தந்தபோது, "கூலி' என்கிற சொல் தமிழ் சொல்தான் என்று அவர்களே ஒப்புக் கொண்டனர்.
ஆகவே, தாராளமான மனப்பான்மையுடன் கொடுக்கல் - வாங்கல் செய்ய வேண்டும்.
Unless the context other wise required என்று சட்ட சம்பந்தமான ஆங்கிலச் சொற்றொடர் உண்டு. இதை, "தருவாயின் தேவை வேறானால் அன்றி' என்று மொழி பெயர்த்திருக்கின்றனர்.
"சூழ்நிலை வேறு பொருள் குறித்தாலன்றி' என்று எவரும் புரிந்துகொள்ளக் கூடியவாறு மொழி பெயர்க்கலாமே.
In any other case என்பதை, "பிற எந்த தேர்விலும்' என்று மொழி பெயர்த்து வந்திருக்கின்றனர். "பிற தருணம் எதிலும்' என்று மாற்றியமைக்கலாம். இதைவிட நல்ல சொற்களை மற்றவர்கள் சொல்லக் கூடும்.
— விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளை தமிழர்கள் தமிழில் படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நம்மில் பலரிடையே உண்டு... அவற்றை தமிழில் மாற்றும் போது எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்!
***
"அடுத்த வாரம் மும்பை போகிறேன்; தாதர் எக்ஸ்பிரசில் ரிசர்வ் செய்திருக்கிறேன்...' என்றார் நடுத்தெரு நாராயணன் சார்!
"ஜாக்ரதை! எவனாவது மயக்க பிஸ்கட் கொடுத்து, அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு, அம்பேல் ஆகிவிடப் போகிறான்...' என்றார் குப்பண்ணா.
மயக்க மருந்துகள் பற்றி, எனக்குத் தெரிந்த சரக்குகளை அப்போது அவிழ்த்து விட்டேன்:
அறுவை சிகிச்சையின் போது மயக்கம் உண்டாகச் செய்வதற்கு, வாயுவாக அல்லது ஊசி மருந்தாக மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.
பலவிதங்களில் மயக்க மருந் தைக் கையாளலாம். நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிஇருந்தால், உடல் முழுவதும் உணர்ச்சி இழக்கச் செய்து மயக்கம் உண்டாகும்படி மருந்து கொடுக்க வேண்டும்.
இடுப்பில், தண்டுவடத்தில் ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தினால், இடுப்பிற்குக் கீழே உள்ள பகுதி உணர்ச்சியற்றுப் போகும்.
இது தவிர கைவிரல், கால் விரல் போன்ற உறுப்புகளில் மட்டும் அறுவை சிகிச்சை செய்வதானால், உணர்ச்சி நீக்கும் மயக்க மருந்தை அப்பகுதிகளில் மட்டும் செலுத்தலாம்.
சிரிப்பூட்டும் வாயு எனப்படும், நைட்ரஸ் ஆக்சைடு, ஈதர், குளோரோபார்ம், கோக்கயின் முதலியன முக்கியமான மயக்க மருந்துகள்.
மயக்க மருந்தாக நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்தலாம் என்று, 1842ல், தெரிவித்தார் சர் ஹம்ப்ரி டேவி. முதன் முதலாக அமெரிக்க நாட்டினர் இதைப் பயன்படுத்தினர்.
பிறகு, ஜேம்ஸ் சிம்சன் என்ற ஆங்கிலேயர் குளோரோபாமை கண்டுபிடித்தார்; ஆனால், அதை பயன்படுத்த பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
இம்மயக்க மருந்து, 1853ல், விக்டோரியா ராணிக்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகே, பலரும் இம்மருந்தைப் பயன்படுத்த இசைந்தனர். மயக்க மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத் துறையில் சிறப்பான சாதனைதான்... என முடித்தேன்.
ஆமோதிக்கும் விதமாக அனைவரும் தலையாட்டினர்.
***
"மன்னராட்சி முறை உலகமெல்லாம் ஒழிந்து போனாலும், இங்கிலாந்து, அரேபியா, ஏன் நம் பக்கத்து நாடான மலேசியாவிலே கூட இன்னமும் மன்னராட்சி முறை தானே நடக்கிறது... ஏன்?' என்றேன் குப்பண்ணாவிடம்.
அவர் சொன்னார்:
மலேசியாவில் நடப்பது முழுமையான மன்னராட்சி முறை அல்ல. மலேசியா ஒரு கூட்டாட்சி நாடு. மன்னர் தலைமையில் இங்கு ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், இம்மன்னரும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுபவரே!
முன்பு தனித்தனியாக ஆட்சி செலுத்திய அரசர்கள், இன்று ஒன்பது மாநிலங்களில் அதிபதிகளாக உள்ளனர். இவர்களுள் ஒருவர் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர், அமைச்சரவையும், நாடாளுமன்றமும் கூறும் ஆலோசனையின்படி ஆட்சி செலுத்துகிறார்.
மலேசிய தீபகற்பத்தில் பண்டைக் காலத்தில் இந்திய அரசர்களின் ஆட்சி நடந்து வந்தது. இந்நாட்டில் கிடைத்துள்ள சமஸ்கிருதக் கல்வெட்டுகளில் இருந்து இதை தெரிந்து கொள்ளலாம்.
மலாய் மொழியில் சமஸ்கிருத சொற்களும், தென்னக மொழி சொற்களும் பல உள்ளன. பின், இந்நாட்டில் இஸ்லாம் மதம் பரவியது.
போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர் ஆகியோர் பல பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செலுத்தினர். இறுதியாக இந்நாடு ஆங்கிலேயர் வசமாயிற்று.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியர் கைப்பற்றி கொண்டனர். யுத்தத்திற்குப் பின் மீண்டும் இது ஆங்கிலேயர் வசமானது.
கடந்த, 1957ல், விடுதலை பெற்ற பின், மலேயா, சராவாக், சபா ஆகிய மூன்று பகுதிகளும் இணைந்து ஒரே மலேசிய நாடாக
உருவானது... என்றார் குப்பண்ணா. தெளிவானது சந்தேகம்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கத்தரிக்காயின் பூர்விகம் தெனிந்தியா, குறிப்பாக தமிழ்நாடுதான். கத்தரிக்காய் என்ற வார்த்தை தமிழ் வார்த்தை. அது சீன மொழியிலிருந்து வரவில்லை. மாறாக இங்கு தமிழ்நாட்டில் இறந்து..சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றது. நிறைய தமிழ் வார்த்தைகள்...சீனா, கம்போடிய, விஈட்நாம்,மாலாய், இந்தோனேசை, ஜப்பான் மொழிகளில் உள்ளது. காத்ரிக்கையின் பூர்விகம் தமிழ்நாடுதான். இவைகள் புத்தமதம் இங்கருந்து கீழ்த்திசை நாடுகளுக்கு சென்றபோது ..இது போன்று பல தமிழ் வார்தைகள் சென்றன. அதேபோல் அப்பா என்ற வார்த்தை கொரியமொலியில் உள்ளது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.