ஆக., 25-சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களை, இவர்கள் வீட்டுக்கு ஆகாதவர்கள், நாட்டுக்கு ஆகாதவர்கள் என்று ஒதுக்கித் தள்ளுகின்றனர். அதற்கேற்றாற் போல், சில சொலவடைகளையும் சொல்லி வைத்திருக்கின்றனர். எப்படியோ அவை மக்கள் மனதில் பதிந்து விட்டன. ஆனால், இதெல்லாம் மூட நம்பிக்கை. தெய்வத்திற்குரிய திருவிழாக்கள் கூட, ஒதுக்கப்பட்ட நட்சத்திரங்களில் தான் நடக்கின்றன.
குறிப்பிட்ட சில நட்சத்திரங்களின் தன்மை, ஏதேனும் ஒரு மாதத்தில் மட்டும் கடுமையானதாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான், சித்திரை மாத சித்திரை, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், ஆவணி மூலம், கார்த்திகை மாத கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் திருவிழாக்களை, முன்னோர் ஏற்பாடு செய்தனர். இந்நாட்களில் தெய்வ வழிபாடு செய்தால், அந்த நட்சத்திரங்களினால் ஏற்படும் துன்பத்தின் தாக்கம் குறையும்.
"ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டுமுடனே ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே' என சம்பந்தர் பாடியது கூட இதனால் தான்! "சிவபெருமான் துணையிருக்கும் போது, மேற்கண்ட கிரகங்கள், நம்மை என்ன செய்து விட முடியும்?' என்று கேட்கிறது இந்த இளஞ்சிங்கம்.
இந்த அடிப்படையில், சரியான சீதோஷ்ண நிலை அமைய வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திப்பதற்கான நாள் தான் ஆவணி மூலம். இதற்கென்றே, தனித் திருவிழா, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடத்தப்படுகிறது. முதன்முதலாக ஆணுக்கு நிகராக, பெண்ணுக்கு சமஉரிமை கொடுக்கப்பட்டது மதுரை நகரில் தான். இங்கு மாசி மாதம் மீனாட்சியம்மனுக்கும், ஆவணி மாதம் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடத்தி, தலா ஆறு மாதம் ஆட்சி நடத்துவர். அதனால் தான், மாசித் திருவிழாவின் போது, சுவாமி வலம் வரும் வீதிகளுக்கு, "மாசி வீதி' என்ற பெயர் வந்தது. ஆக, மாசி முதல் ஆடி வரை, ஆறு மாதம் அம்பாளின் கையில் ஆட்சி இருந்தது. ஆவணியில் பொறுப்பேற்கும் சொக்கநாதர், ஆடி வரை ஆட்சி நடத்துவார். இந்த சமமான மாதங்கள், திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மாறியது. மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப்பட்டது. அதனால் தான், மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது. நான்கு மாதங்கள், அம்பாள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறாள்.
சித்திரை வீதி, ஆடி வீதி, மாசி வீதி என்று மதுரை நகர தெருக்களுக்கு பெயர் இருக்க, ஆவணி வீதியை மட்டும் மூல நட்சத்திரத்துடன் இணைத்து, "ஆவணி மூல வீதி' என்கின்றனர். ஏன் தெரியுமா?
ஆவணி மூலம், இந்த உ<லகத்திற்கு நல்லதோ, கெட்டதோ செய்யப் போகிற ஒரு முக்கிய நாள். இந்த நாளில் இருக்கும் சீதோஷ்ணத்தை பொறுத்தே, உலகத்தின் சீதோஷ்ண நிலை ஓராண்டுக்கு அமையும். அன்று சூரியன் உதயமாகும் போது, மேகம் மறைத்திருந்தால், அந்த ஆண்டில் மழை கொட்டி, வெள்ளச் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. சுட்டெரிக்கும் வகையில் வெளிப்பட்டால், மழை குறைந்து பஞ்சம் கூட வந்து விடலாம். இதில், எது நடந்தாலும் நமக்கு கேடு. இந்நிலையில் இருந்து நம்மை பாதுகாப்பது இறைவன் மட்டுமே. அதனால் தான் ஆவணி மூலத்தை ஒட்டி, சுந்தரேஸ்வரரின் கையில், உலகத்தின் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறோம். அவர், நம்மை ஆட்டுவிக்க வரும் சீதோஷ்ண நிலையை சீராக்கி அருள் புரிவார் என நம்புகிறோம்.
எந்தக் காலத்திலும் இறைவன் நம்மை கைவிட்டதில்லை. ஆவணி மூல நன்னாளில், நம் ஊர்களிலுள்ள எல்லாக் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து, சிறந்த சீதோஷ்ண நிலை அமைய, வேண்டுதல் வைப்போம். இந்த கூட்டுப் பிரார்த்தனை, இறைவனின் மனதைக் கனிய வைக்கும். நமக்குத் தேவையான நல்ல சீதோஷ்ணமும் கிடைக்கும்.
***
தி. செல்லப்பா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.