இந்தியன் எக்ஸ்பிரசில், 1960-ம் ஆண்டு புகைப்படக் கலைஞராக வாழ்க்கையை துவங்கி, சீனியர் புகைப்படக் கலைஞராக வளர்ந்து, சீப் போட்டோகிராபராக உயர்ந்து, டெக்கான் ஹெரால்டில் போட்டோ எடிட்டராக இருந்து ஓய்வு பெற்ற புகைப்படக் கலைஞர் எம்.எஸ்.வெங்கடாசலம்.
பத்திரிகை புகைப்படக்காரராக வர வேண்டும் என்பதற்காகவே, லண்டன் சென்று புகைப்படத் தொழில் நுட்பத்தை படித்தவர்.
வார்த்தையிலும், வாழ்க்கையிலும் மட்டுமல்ல, தான் எடுத்த புகைப்படங்களிலும் நேர்மையையும், உண்மையையும் மட்டுமே வலியுறுத்தியவர். இதை நிலைநிறுத்த, யாரிடமும் போராட தயங்காதவர்.
மதுரை, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றியவர்.
கடந்த 1964ல், தனுஷ்கோடியை அழித்த புயலில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். புயலில் சிக்கி சின்னாபின்னமான ரயிலில், மாணவர்கள் பலரும் அடங்குவர்.
அதிகம் வசதி இல்லாத, கேமரா தொழில் நுட்பம் வளர்ந்திராத அன்றைய சூழ்நிலையில் நடந்த சம்பவத்தின் கோரத்தை, சோகத்தை பதிவு செய்ய, பல கிலோமீட்டர் தூரம் நடந்தும், நீந்தியும் சென்று படம் எடுத்து திரும்பினார்.
ஒரு புயலுக்கு எவ்வளவு வேகமும், வலுவும் இருக்கும் என்பதை இவரது படங்களை பார்த்தபின் தான் பலரும் உணர்ந்தனர். தண்டவாளங்கள் எல்லாம் நூல்கண்டு போல சுருண்டு கிடந்தன. ரயில் நிலையம் மண்மேடாக காட்சி தந்தது.
பிரான்ஸ் நாட்டு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை, இந்த படங்கள் இவருக்கு பெற்று தந்தன.
அந்த வகையில், முதன் முதலில் புகைப்படம் எடுத்ததற்கான, "பை-லைன்' இவருக்குத்தான் முதலில் கொடுக்கப்பட்டது.
கர்நாடக மாநில முதல்வராக அனுமந்தையா இருந்த போது, பெங்களூரில் உள்ள விதான்சவுதா என்ற புகழ்பெற்ற சட்டமன்ற கட்டடத்தை கட்டினார். பின், அவர் இறந்த போது நடந்த இறுதி ஊர்வலத்தில், அவரது உடலும், விதான்சவுதா கட்டடமும், ஒரே நேர்கோட்டில் வருவது போல இவர் எடுத்த படமும் மறக்க முடியாதது.
பெங்களூரு சர்க்கஸ் கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்து படங்கள், இன்றைக்கும் சோகம் சுமந்து நிற்கும் படங்களாகும்.
எம்.ஜி.ஆர்.,முதல்வராக இருந்த போது, இன்றைய முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வரும், மனைவியுமான ஜானகி ஆகியோருடன் சேர்ந்து ஆசிய விளையாட்டு போட்டியை பார்வையிட்ட படம் உட்பட, பல்வேறு அரசியல் தலைவர்களை, இவர் எடுத்த படங்கள், வாசகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. பத்திரிகைக்கு வரும் பல கடிதங்களில், இவரது படங்களை பாராட்டி வரும் கடிதங்களும் கட்டாயம் நிறைய இருக்கும்.
பல்வேறு தலைவர்களும், இவரது படங்களை ரசித்து பாராட்டியதுடன், இவர் எடுத்த படங்களை கேட்டு வாங்கியுள்ளனர். அந்த வகையில், இந்திரா பிரதமராக இருந்த போது, இவர் எடுத்த, தன் சம்பந்தப்பட்ட படத்தை பார்த்துவிட்டு, நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தற்போது பத்திரிகை அலுவலில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், அனுபவத்திற்கு ஓய்வு தராமல் குன்னூரில் (ஊட்டி) உள்ள தன் இல்லத்தில், தன்னை சந்திக்க வருபவர்களிடம் பழைய அனுபவங்களை சுவை குறையாமல் பகிர்ந்து வருகிறார்.
பத்திரிகை அனுபவத்தை பற்றி பேசும்போது மிகவும் ரசித்து பேசுகிறார். எதிர்பாராத சம்பவத்தை எதிர்பார்த்து, அதை யாரும் எதிர்பார்த்திராத கோணத்தில் படம் எடுத்து பதிவு செய்வதே சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞரின் பணி என்று, பத்திரிகை புகைப்படக் கலையின் சூட்சுமத்தை விளக்கும் இவர், யாருக்கும் கிடைத்திராத அனுபவங்களை மனதிற்குள் நிறைய தேக்கி வைத்துள்ளார்.
தம் அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட்டால், பத்திரிகை புகைப்படக் கலைஞராக வர விரும்பும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு தகவல் களஞ்சியமே கிடைத்தது போலிருக்கும்.
***
"பலே பாண்டியா' முதல் "பில்லா' வரையிலான சினிமாவை பார்த்தவர் களுக்கு, நடிகரும், தயாரிப்பாளருமான மறைந்த பாலாஜியை நன்றாகவே தெரிந்திருக்கும்.
அவரது மகன்தான் சுரேஷ் பாலாஜி. சினிமா தயாரிப்பு தொடர்பாக, எப்போதும் பிசியாக இருப்பவர். தற்@பாது, திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், "பில்லா 2' படத்தின் தயாரிப்பு நிர்வாகியும் இவரே.
இவருக்கு புகைப்படக்கலைஞர் என்ற இன்னொரு முகமும் உண்டு.
வெளிநாடுகளுக்கு செல்லும் போது, புகைப்படங்கள் எடுத்து வந்தவர், ஒரு கட்டத்தில், புகைப்படங்களை எடுப்பதற்காகவே வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இவர் எடுத்த படங்களுக்கு, இவர் மட்டுமே பிரதான ரசிகர்.
"ஆம்... நான் என் ரசனைக்காக படம் எடுக்கிறேன். மற்றவர்கள் பார்வைக்காகவோ, பாராட்டுக்காகவோ அல்ல' என்கிறார்.
இவர் எடுத்த படங்கள் எதுவும், இதுவரை பத்திரிகைகளில் வெளியாகவில்லை, புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்றதும் இல்லை. இவரும், இவரது குடும்பத்தாரும், இவரது நண்பர்களில் சிலரும் மட்டுமே பார்த்து ரசித்து வந்த புகைப்படங்களை, முதன் முதலாக, நம் வாரமலர் இதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
"வைல்டு லைப் போட்டோகிராபி' என்பது, இப்போது, பலரால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இவருக்கு பிடித்ததே இந்த, "வைல்டு லைப் போட்டோகிராபி' தான். எந்தெந்த நாட்டின் காடுகளில், எந்தெந்த விலங்குகள் சிறப்பாக இருக்கும் என்பது இவருக்கு அத்துப்படி. அந்த வகையில், இவர் எடுத்த படங்களில் ஒன்றான சிங்கம், தன் உணவிற்காக காளையை வேட்டையாடும் படம் மிகவும் அபூர்வமானது. இது போல பல நாடுகளில் எடுத்த பல படங்கள் உள்ளன. ஒவ்வொரு படத்திற்கு பின்னாலும், ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது என்கிறார்.
"இருவர்' படம் எடுத்த போது, கதாநாயகியான ஐஸ்வர்யா ரா# எந்தளவு தான் கற்பனை செய்துள்ள பாத்திரத்திற்கு பொருந்துவார் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினார் டைரக்டர் மணிரத்னம். அதற்கான ஒப்பனை மற்றும் ஆடைகள் அனைத்தும் அணிந்து கொள்ளச் செய்த பின், அருகில் இருந்த சுரேஷ் பாலாஜியை புகைப்படம் எடுத்து தரச் சொன்னார். அந்த நேரத்தில் இவர் எடுத்த கருப்பு, வெள்ளை படங்கள் மிகவும் பாராட்டப்பட்டது.
***
எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.