நவ., 18 திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
முருகனுக்கு பல கோவில்கள் இருந்தாலும், ஆறு தலங்கள் படைவீடுகளாக உள்ளன. சூரபத்மனை வதம் செய்ய சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர். இது, படைவீடுகளில் இரண்டாவதாகும். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே, கந்தசஷ்டியாக கொண்டாடப்படுகிறது. சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருசமயம், முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென, ஐப்பசி அமாவாசை துவங்கி, ஆறு நாட்கள் யாகம் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக, ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை, ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். அவ்வாறு முருகன் அவதரித்த நாளே, கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும், ஐப்பசியில் ஆறு நாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச் செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதை நினைவுறுத்தும் விதமாகவே, கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கின்றனர்.
திருச்செந்தூரில் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பர். ஆறாம் நாள் மாலையில், சூரசம்ஹாரம் நடக்கும். ஏழாம் நாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த, ஐந்து நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என, 12 நாட்கள் கொண்டாடப்படும்.
விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு, மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன், "ஜெயந்திநாதர்' எனும் பெயர் தாங்கி முருகன் எழுந்தருள்வார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில், முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். யாக பூஜை முடிந்தவுடன், ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருள்வார். ஆறாம் நாளன்று தனித்து கடற்கரையில் எழுந்தருள்வார். அங்கே, சம்ஹார நிகழ்ச்சி நடக்கும். சூரனுக்கு யானை, சிங்கம் மற்றும் மனித தலைகள் பொருத்தப்படும். முருகனின் வேலுடன் வரும் அர்ச்சகர், சூரனைக் குத்துவது போல் பாவனை செய்வார். அப்போது சூரனின் தலை, அறுபட்டதாகக் கருதி, தலையை மாற்றுவர். மூன்று தலைகளும் போனதும், சூரனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி அருட்கொண்டதை நினைவுபடுத்தும் வகையில், சேவலை பறக்க விடுவர். சூரன் மாமரமாக மாறியதன் அடிப்படையில், அவனது தலை இருந்த இடத்தில் மாவிலை வைத்துக் கட்டப்படும். பின், பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னிதிக்கு வரும் ஜெயந்திநாதர் முன், ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் முருகனின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். சாயா என்றால், நிழல். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக, இந்த அபிஷேகம் நடக்கும். இத்துடன், சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.
சூரசம்ஹாரம் காண்பவர்களின் மனதிலுள்ள அகங்காரம் மறையும். குழந்தையில்லாதவர்கள், சஷ்டி விரதம் இருந்தால் மழலை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கிளம்பி விட்டீர்களா, செந்தூர் வெற்றித்திருவிழாவைப் பார்ப்பதற்கு!
***
தி. செல்லப்பா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.