கொஞ்சம் நன்றாகப் பேசினாலே போதும்... பெண்கள், தங்கள் மனக் கவலைகளை எல்லாம், கொட்டித் தீர்த்து விடுவர். அதனால், பாதிப்பு ஏற்படும் போது தான், இவரிடம் போய் எல்லாவற்றையும் உளறினோமே என்று மனம் குமுறுவர். இப்படித் தான், எங்கள் வீட்டு அருகில் புதிதாக குடியேறினர் அவர்கள். அந்தக் குடும்பத் தலைவிக்கும், அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும் நட்பு ஏற்பட, குடும்ப விஷயம் உட்பட, பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர். சமீபத்தில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, பெண்களுக்கே உரிய ஜாடை பேச்சுகள், அவ்வப்போது அரங்கேறின. ஒரு நாள், "இவ லட்சணம் தெரியாதா... இவ புத்திக்கு தான், இவளோட பொண்ணுக்கு ஒரு லூசு, புருஷனா கிடைச்சிருக்கான்... இப்ப, இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க, வேற மாப்பிள பார்க்கிறா... ' என்று, சுற்றியுள்ள அனைவரும் கேட்கும்படி கூற, இடிந்து போயினர் தாயும், மகளும். அதுவரை, கல்லூரி மாணவி போல் தோற்றம் கொண்ட அவரது மகளை, திருமணம் ஆகாதவர் என்றே நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். உண்மை தெரிந்ததும், பலரும் பலவாறு தூற்ற, மனமுடைந்த அந்தப் பெண், "இதை ஏன் இவர்களிடம் கூறினாய்... எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை...' என்று, தன் அம்மாவிடம் சண்டையிட்டு, விடுதிக்கு சென்று விட்டாள். தான், சரியாக விசாரிக்காமல், திருமணம் செய்து வைத்ததால் தானே மகளின் வாழ்க்கை, வீணாகிவிட்டது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த அவளது அம்மா, தற்போது, தன் செயலாலே, மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள் என்பதால், நொந்து, நூடுல்ஸ் ஆகிவிட்டார். நட்பு என்ற பெயரில், கண்டவரையும் நம்பி, வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியதால் தானே இந்த பிரச்னை... தேவையா இது? பெண்களே... குடும்பப் பிரச்னைகளை, பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி, பின், விழி பிதுங்காதீர்கள்! — ஆஞ்சலா ராஜம், சென்னை.
இவரன்றோ நல்லாசிரியர்!
என் வீட்டில், வெள்ளையடிப்பு நடந்தது. வெள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரை பார்த்து, பள்ளியில் படிக்கும் என் பேத்தி, வீட்டிற்குள் ஓடினாள். என்னவென்று விசாரித்தேன். அதற்கு அவள், "இவர் எங்கள் வகுப்பாசிரியர். என்னை பார்த்தால், அவருக்கு சங்கடமாக இருக்கும்...' என்றாள். இது பற்றி அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், தான் ஒரு எம்.ஏ.,பட்டதாரி என்றும், என் பேத்தி படிக்கும் பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார். மேலும், "அங்கு தரும் மாத சம்பளம், குடும்பம் நடத்தப் போதாது. அதனால், விடுமுறை நாட்களில், எனக்குத் தெரிந்த பெயின்டிங், வெள்ளை அடிப்பு போன்ற வேலைகளுக்குச் செல்கிறேன். தினமும், 400 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொழில் செய்வதற்காக, நான் வெட்கப்பட வில்லைங்க; செய்யும் தொழில்தானுங்களே தெய்வம்...' என்றார். என் பேத்தியை பார்த்தேன், அவள் முகத்தில் ஒரு பெருமிதம். என் உள்ளத்திலும், அவர் ஒரு நல்லாசிரியராக ஏறி அமர்ந்து கொண்டார். — களந்தை மைந்தன், நெல்லை.
இவர்களுமா...?
கல்யாணத்திற்கு காத்திருக்கும், பெண் அல்லது பையனை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோரின் பெரிய தலைவலி, இப்போது யார் தெரியுமா? ஜாதகம் பார்த்து சொல்லும் ஜோதிடர்கள்தான். அவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. ஒரே ஜோதிடரே, இன்று பொருத்தம் என்று எழுதி கொடுத்த ஜாதகத்தை, வேறொருவர் அவற்றை நாளை எடுத்துப் போனால், தொடவே கூடாது; பொருத்தமில்லை என்கின்றனர். இந்த ஜோதிடர்களால், பெண் வீட்டாரும், பையன் வீட்டாரும் படும் அவஸ்தைக்கு அளவில்லை. சம்பந்தி ஆகும் முன்னரே சண்டை வந்து விடுகிறது. என் உறவினருக்கு நடந்த கூத்து என்ன தெரியுமா? பெண் வீட்டார், பொருத்தமாக உள்ள ஜாதகப் பையனை போனில் அணுக, அவர்கள் பொருத்தமே இல்லை என்று, அவருடைய ஜோதிடர் கூறியதாக கூற, வாய்ச்சண்டை வளர்ந்து, "உன் ஜோதிடர் வீட்டுக்கு நான் வருகிறேன்... என் ஜோதிடர் வீட்டுக்கு நீ வா... உண்மையை அறிந்து கொள்ளலாம்...' என்று பேச்சு வளர, கடைசியில் பார்த்தால், இருவரின் ஜோதிடரும் ஒருவரே... அதே, பெண் - பையனின் ஜாதகத்தை பார்த்து, பெண்வீட்டாரிடம் பொருத்தம் என்று சொல்லி, பையன் வீட்டாரிடம் பொருத்தம் இல்லை... தொடவே கூடாது என்று, ஒரே ஜோதிடரே சொல்லி இருக்கிறார் என்றால், வெவ்வெறு ஜோதிடரிடம் காட்டினால், என்ன கதி என்று சொல்லாமலே தெரியும்! ஜாதகப் பொருத்தம் பார்க்காமல், திருமணம் செய்ய பயமாக இருக்கிறது... ஜோதிடர்களே... உங்கள் ஜோதிட சாஸ்திரத்தை, பணமாக்கும் தொழிலாக ஆக்கிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், பலர் வாழ்க்கை பிரச்னை, உங்கள் கையில் என்பதை மறக்காதீர்கள். நியாயமாகவும், நீதியுடனும் நடந்து கொள்ளுங்கள். நேர்மையாக இருந்து, உங்கள் தொழிலுக்கு துரோகம் இழைக்காமல், கூடிய மட்டும் இருக்க முயலுங்கள். — ஜே.சங்கீதா, சென்னை.
மொபைலை இப்படியும் பயன்படுத்தலாம்!
சமீபத்தில் நானும், என் தோழியும், ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது. பயணம் ஆரம்பித்தது முதலே, தோழியின் மொபைலில், குறுஞ்செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. சிறிது நேரத்தில், பர்சில் வைத்திருந்த மற்றொரு, "சிம்'கார்டை மாற்றினாள். அதிலும், குறுஞ்செய்திகள் வந்தன. கோபத்தோடு அவளைப் பார்க்க, அவள் தன் மொபைலை என்னிடம் நீட்டினாள். அத்தனை குறுஞ்செய்திகளும், பொது அறிவு வினா - விடைகள். அவளை வியப்போடு நோக்க, அவளே விளக்கினாள். தான் ஒரு வெப்சைட்டை ஆக்ட்டிவேட் செய்துள்ளதாகவும், அதில் இருந்தே, இந்த வினாக்கள் வருவதாகவும் கூறினாள். "வெப்சைட்டில் அதிகமான துறைகள் இருக்கும்' எனவும், "நாமே அதில் ஏதாவது பதினைந்து துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். துறைக்கு இரண்டு கேள்விகள் வீதம், ஒரு நாளைக்கு முப்பது பொது அறிவு வினாக்கள் வரும்...' எனவும் விளக்கினாள். மேலும், மாணவர்கள் மொபைலில் வரும் குறுஞ்செய்திகளை மறக்க மாட்டார்கள் என்பதால், இந்த முறையை அறிமுகம் செய்துள்ளதாகவும், இது, அவள் கல்லூரிக்கு பயணம் செய்யும் நேரம் என்பதால், இந்த குறிப்பிட்ட நேரத்தை அதில் கொடுத்துள்ளதாகவும், அவள் குறிப்பிட்ட அந்த ஒரு மணி நேரத்திலேயே, முப்பது குறுஞ்செய்திகளும் வந்துவிடும் எனவும் கூறினாள். மொபைலை இப்படியும் உபயோகிக்கலாம் மாணவர்களே... வெப்சைட் முகவரி:www.upscportal.com — லக்ஷ்சனா, திண்டுக்கல்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
கிளி ஜோசியர், மரத்தடி ஜோசியர் இவர்களை பார்த்து இருக்கிறீர்களா?....இது போதாதா ?...ஜோதிடம் பொய் என்பதற்கு ....5 ரூபாய்க்கு அடுத்தவன் பணக்காரன் ஆவான் என்று சொல்லுபவன் பிச்சைக்காரனாகவே இருப்பன்
ஜோதிடம் என்பது என்ன?
மனிதன் தன எதிர்காலத்தை அறிய ஆவல் அதிகம் கொண்ட ஒரு ஜந்து. அந்த எதிர்காலம் பற்றிய பயத்தை வெற்றி கொள்ள ஏற்பட்ட மற்றும் ஒரு ஆலோசனை உதவிகரமே ஜோதிடம் என்பது என் கணிப்பு. வானத்தில் உலா வரும் கோளங்கள் நம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதை நடைமுறையில், அறிவியல் வாயிலாக உணர்ந்தவர்கள் நாம். அதன் மற்றும் ஒரு விரிவாக்கமே ஜோதிடம். சந்திரனின் சுழற்சியால் ஓதங்கள் பற்றி அறிவோம் அது நமது மன நிலையை பாதிக்கிறது என்பதையும் அறிவோம். அதனை கணித முறையில், புள்ளி இயல் முறையில் கணித்து எதிர்காலத்தை கணிக்க முயன்ற/முயலும் கலைதான் ஜோதிடம்.
ஆனால் அது ஊகமே. அங்கு தான் மன ஆலோசகம் வருகிறது. ஒரு எதிர்காலத்தை பற்றி கவலை கொண்டு செயல்படமால் இருக்கும் ஒருவனை, எதிர்காலம் நன்றாக வரும் என்று ஊக்குவிக்கும் கலை அது. அப்படி எதிர்காலம் நன்றாக இல்லை என்று கணிக்கப்பட்டாலும் அதற்கு மாற்று மருந்து தரும் ஆலோசனை அது. தோல்வியுற்ற ஒருவன் அதன் காரணம் தான் தான் என்று எண்ணி சோர்வடையாமல் கிரகங்களின் மேல் பழி போட்டுவிட்டு மீண்டும் முயற்ச்சிக்க வழி வகுப்பது ஜோதிடம்.
அதனை நடைமுறையில் பார்த்தவன் நான். தோல்வி மேல் தோல்வி கண்ட என் கசின் ஏழரை சனி கடந்து விட்டது என்று முயற்ச்சித்தான் - காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல - வெற்றி பெற்றான், அந்த ஊக்கம் இன்று மேல் நாட்டில் ஒரு பெரும் நிறுவனத்தின் உயர் அதிகாரி. அது ஏழரை சனியா அல்லது அது முடிந்தது என்று எழுந்த ஊக்கமா - தெரியாது. அது போல தன தோல்விகளுக்கு தான் காரணி என்று சோர்வடைய விடவில்லை.
அது போலவே திருமண பந்தங்களும். பெரும்பாலும் இவை பத்து பொருத்தங்களை சொல்லும் ஆனால் ஏழு, எட்டு பொருத்தம் இருந்தால் போதும் என சொல்லும். மற்ற இரண்டும் வரப்போகும் சண்டை சச்சரவுகளுக்கு காப்புறுதி. திருமணம் ஆனவர்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணி கொள்ள வழி வகுக்கும் ஒரு ட்ரிக்.
கிளி ஜோசியர், மரத்தடி ஜோசியர் இவர்களை பார்த்து இருக்கிறீர்களா? உங்களது முறைகளை கேட்டு அறிந்து அதற்கு ஏற்றார்போல தீர்வு சொல்லுவார். ஏறக்குறைய ஒரு தெரபிஸ்ட் அவர்கள். குறைகளை முறையிட ஒரு தோள் . கடவுள் சன்னதியில் முறையிட முடியும். ஆனால் ஜோசியர்கள் ஆலோசனை, ஆறுதல் சொல்லி ஊக்கம் ஊட்டுவார்கள். அவர்களில் ஏமாற்றுகாரர்கள் உண்டு. அது தவிர்க்க முடியாதத ஒன்று.
மேலை நாடுகளில் ஜோசியம் உண்டு. ஆனால் திருமணத்திற்கு அவர்கள் அதனை அவ்வளவாக நம்புவதில்லை . முக்கிய காரணம் டேட்டிங் கலாச்சாரம். திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழும் கலாச்சாரம். திருமணம் என்பது பெரியோரால் முடிவெடுக்கப்படாமல் சம்பந்தப்பட்ட இருவரால் முடிவெடுக்கப்படும் ஒன்று. அதில் ஒருவர் மற்றவரின் நிறை குறைகளை உணர்ந்து செயல்பட முடியும். காதல் என்பது பிரதானமாக இருக்கும்.
இங்கு போல, திருமணத்திற்கு பின் - பெண்ணுக்கு செக்ஸ் என்றால் அலர்ஜி, ஆண்மை இல்லாதவன், வக்கிரமானவன், கொடுமை படுத்தும் ஒருவன், இந்த குறை, அந்த குறை என்று பட்டியல் போட முடியாது. இவன் என் கணவன் / மனைவி ஆகவே காதலிக்க வேண்டும் என்ற திணிப்பு கிடையாது. பெரும்பாலும் ஆண்-பெண் சேர்க்கை இது போன்ற திருமணங்களில் அங்கீகரிக்கப்பட்ட வன் புணர்வே அது நம் கலாசாரம் கூட
இது போன்றவைகளை ஏற்க வைக்கும் மற்றும் ஒரு மாய கருவியே ஜோதிடம். ஆகா யோனி பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று சொன்னதாலேயே அதனை ஏற்பவர்கள் பலர் - அது பின்னாளில் ஏற்புடையதாக இருக்கும் என தன்னை சமாதானப்படுத்தி கொள்ள உதவும் ஒரு ஆலோசனை. அவ்வளவே
நான் ஜோதிடம் பார்ப்பவன் அல்ல. ஆனால் அதன் முறைகள் எனக்கு ஒரு க்யுரிசாட்டியை உண்டு பண்ணி இருக்கிறது. எப்படி நம் சமூகம் இதனை ஏற்கிறது ஏன் ஏற்கிறது என்று அறிய ஆவல் உண்டு. அதன் ஒரு பக்க விவாதமே மேல உள்ளது.
கத்தியை வைத்து கொலையும் செய்யலாம் ,அருமையாக சமைக்கவும் செய்யலாம் .அது போல மொபைல் போனை நாம் நல்ல முறையில் பயன்படுத்தினால் அது நமக்கு வரப்பிரசாதம் ,இல்லையேல் அது நம் காசை அழிக்கும் கருவி .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
என்னதான் உற்ற நண்பனாக [ நண்பி ] இருந்தாலும் பல விஷயங்களை சொல்லவே கூடாது.சிலர் உற்ற நண்பர்களாகப் பழகிப் பழி எடுப்பார்கள்................ஆசிரியர் என்றால் எப்படியானவர் என்று பலருக்கு ஓர் உதாரணம்.வாழ்க அந்த ஆசிரியர்...............என்ன ஜாதகம்,பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தால் கேடா நடக்கும்? வெள்ளைக்காரன் எந்த இடத்து ஜாதகம்,பொருத்தம் பார்த்தான்?..அவர்கள் நன்றாக நிம்மதியாக வாழவில்லையா?ஒருசிலரின் வாழ்க்கை தடம் புரண்டாலும் பலர் 40 ,50 ,60 வருஷமென சந்தோஷமா இருக்கார்கள்...............
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.