சென்னையின் புறநகர் பகுதியான வில்லிவாக்கத்தில், ஸ்ரீசத்குரு சத் சங்கம், இசையமைப்பு சங்கீத சேவை புரிந்து வருகிறது.
அண்மையில் இந்த அமைப்பின் ஆதரவில், வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவில் வளாகத்தில், ஒரு சிறப்பான இசை நிகழ்ச்சி நடந்தது. இதை வழங்கிய எம்பார் டி.கண்ணன் விதூஷி பிரேமா சீனிவாசன் மற்றும் பிரபல வித்வான் திருவெண்காடு ஜெயராமன் ஆகியோரிடம் இசை பயின்று சங்கீத ஞானத்தை வளர்த்து கொண்டதோடு நில்லாமல் நிறைய சங்கீத நிகழ்ச்சிகளை கேட்டு, கேள்வி ஞானமும் மிக்கவராக ஒரு அனுபவம் வாய்ந்த மேடை பாடகராக அருமையாக பாடினார்.
கிட்டத்தட்ட இவர் குரலில் இவர் பாடிய விதத்தில் ராக ஆலாபனைகளில் கச்சிதமாகவும் அதே நேரத்தில் ஜீவ மூர்ச்சனைகளை வெளிப்படுத்தி பாடிய விதமும் சங்கீத மகா வித்வான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாடியது போல் கேட்க சிறப்பாக இருந்தது.
நிகழ்ச்சியில் எவ்வரி போதன (ஆபோகி - ஆதி), ரக்த கணபதிம் (மோகனம் - ஆதி) குறிப்பாக அபூர்வ கிருதியாக கன்னட பங்களாவில் ஸ்ரீ முத்துசாமி தீட்சிதருடைய படைப்பையும் சுவாதித் திருநாளுடைய மாமவசதா ஜனனீ (கானடா - ரூபகம்) - ஆண்டாள் நாச்சியாருடைய கற்பூரம் நாறுமோ (கமாஸ் - திருப்பாவை) எல்லாமே மிக உயர்வாக கையாண்டு பாடினார்.
எம்பார் டி.கண்ணன் இந்த நிகழ்ச்சியில் அவரே இயற்றிய பல்லவியின் வரிகள் மாலை வேளையில் இசைத்திடும் ராகம் கல்யாணி. மனதிற்கு இதமான கல்யாணி என்று கல்யாணி ராகம், தாளம், பல்லவியை பிரதானமாக எடுத்துக் கொண்டு அமர்க்களமாக இதை நிரவல், திரிகாலம், திச்ரம், பிரதிலோம், அநுலோமம், சுரங்கள் குறைப்புக்களுடன் சிறப்பாக கையாண்டார்.
இந்த ராகம், தாளம், பல்லவியை இவ்வளவு சிறப்பாக வடிமைப்பு செய்திருந்த லய வித்வான் குரோம்பேட்டை ஜி.சுரேஷ் பிரபல லய வித்வான் கும்பகோணம் ராஜப்பய்யருடைய மூத்த சிஷ்யர்.
எம்பார் கண்ணனின் அருமையான குரலில் இந்த நிகழ்ச்சியில் ராமனை பூஜித்தால் (மாண்டு - ஆதி) பாடலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அருமையாக வயலின் வாசித்தார் சிவராம். மிருதங்கம் வாசித்ததோடு ராகம், தாளம், பல்லவியில், மிச்ர குறைப்பு செய்ய கொன்னக்கோல் வாசித்தும் பாராட்டைப் பெற்றவர் குரோம்பேட்டை சுரேஷ். அவரே இதை வழி நடத்தியவர்.
- மாளவிகா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.