பாரதிய வித்யா பவன், சென்னை கேந்திரா, தனது 75 வருட நிறைவு விழா தொடக்கத்தை மிகப் பிரமாண்டமாக துவக்கியது.
பவனின் கிளைகள் உலகின் பல இடங்களிலும், மிகச் சிறப்பாக கலை சேவையையும், கல்விக்கும் செய்து வருகிறது. நமது இந்திய கலையை உலகெங்கும் பரவச் செய்த பெருமை பவனுக்கு பெருமளவு உண்டு. இசையின் அனைத்து துறைகளுக்கும், நடனத்தில், இந்தியாவின் அனைத்து மாநில நடனம், குறிப்பாக, கேரளாவின் கதக்களிக்கு நிறைவான இடத்தைக் கொடுத்து சிறப்பித்து வருகிறது.
மேலும், பல புதுமையான நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளித்து வரும் பாரதிய வித்யா பவன். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக லலிதா நந்தினி சகோதரிகளின் வயலினிசை கச்சேரி வெகு சிறப்பாக நடைபெற்றது. லலிதா நந்தினி சகோதரிகளின் இசை புலமை, இந்தியாவைத் தாண்டி உலகெங்கும் பரவியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் கர்நாடக, இந்துஸ்தானி இசையை,அனைத்து ஜுகல் பந்தி நிகழ்ச்சியை அதற்குண்டான முறையில் கொடுத்து ஜுகல் பந்தி சகோதரிகள் என்று பெயர் பெற்றவர்.
இப்படி பல வகைகளில் தங்களது இசை புலமையை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் சகோதரிகள் செய்து வரும் மற்றுமொரு சிறப்பு தங்கள் கச்சேரிகளில் வயலினுடன் நாதஸ்வரம், தவில் சேர்த்து கொடுப்பது நலிந்து வரும் நாதஸ்வர துறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பவனின் விழாவுக்கு சகோதரிகள் மிகப் பெரிய இசைப் பட்டாளத்துடன் களம் இறங்கினர்.
பிரதான வயலின் லலிதா நந்தினி (கஞ்சீரா கொன்னக்கோல்) வடபாதிரிமங்கலம் வெங்கட்ரமணி) (தவில் - சாந்தகுமார்) (ரவிச்சந்திரன் - கடம்) (பார்த்தாமுகர்ஜி தபலா) ஆகியவை இருந்தன. நிகழ்ச்சியின் துவக்கமாக பட்ணம் சுப்ரமண்ய ஐயர் இயற்றிய ஆபோஹி ராக வர்ணம், எவ்வரி வர்ணத்தின் பூர்வாங்கத்தை நான்கு காலங்களிலும், உத்ராங்கத்தை இரண்டு காலங்களிலும் திச்ரம் திச்ரத்திற்கு மேல் காலமாக வாசித்து கச்சேரியின் ஆரம்பத்தையே களை கட்டச் செய்து விட்டனர்.
இன்னிசை கச்சேரிகளில் மட்டுமே இப்படியொரு ஆழமான கால ப்ரமாணத்தோடு வாசித்து கேட்க முடியும். அதை ரசிகர்களுக்கு குறைவில்லாமல் கொடுத்தனர். அடுத்து, பாபநாசம் சிவனின் கீர்த்தனை மூலாதார மூர்த்தி, ஹம்சத்வனி ராகத்தில் அமைந்ததை ஆனைமுகனுக்கு வந்தனமாக கொடுத்து வாசித்தனர். அடுத்து கோபால கிருஷ்ண பாரதியார் இயற்றிய கீர்த்தனை ஜகன்மோகினி ராகத்தில் அமைந்த சிவகாம சுந்தரி ரூபக தாளத்தில் அமைந்துள்ளதை மிக அழகான இசை
இலக்கண வேலைப்பாட்டுடன் கொடுத்தனர்.
சகோதரிகளின் வில் போடும் பாணியே அலாதியானது. நந்தினியின் ராக ஆலாபனை சிருங்கார ரசத்தை வார்த்துக் கொடுத்தது. மாலை நேரத்திற்கு உகந்த ராகம் என்று தெரிந்து எடுத்திருப்பார்கள் போல, மனதை கட்டிப் போட்டது. அழகு தெய்வமாக என்ற அருமையான பழமை மாறாத காவடிச் சிந்துவை, கடைசியாக வாசித்து, மங்களத்துடன் தங்களது இன்னிசை கச்சேரியை முடித்தனர். நல்லதொரு நிறைவான கச்சேரி கேட்ட திருப்தி கிடைத்தது.
பக்கவாத்திய கலைஞர்கள் தவில் - சாந்தகுமார், தபலா - பார்த்தா முகர்ஜி, கடம் - ரவிச்சந்திரன், கஞ்சீரா, கொன்னக்கோல் - வடபாதிமங்கலம் வெங்கட்ரமணி ஆகியோர்.
- ரசிகப்ரியா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.