வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
அரிசிச் சோறு!
சிலர் தங்களுக்குச் சர்க்கரை வியாதி என்று அறிந்ததுமே ஏக பதற்றமாகி விடுவர். அரிசிச் சோறை கண்ணால் காண்பது கூடப் பாவம் என்ற முடிவுக்கு வந்து விடுவர். இது சரிதானா? நமது பிரதான உணவான அரிசியில், மாவுச்சத்து மட்டுமின்றி, புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் நார்ப்பொருள்களும் உண்டு என்பதே உண்மை. அதிலும், தீட்டாத சிவப்பு அரிசியிலும், புழுங்கல் அரிசியிலும் இவை அதிக அளவில் உள்ளன. சைவ உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே பூர்த்தி செய்கிறது என்பது பலரும் அறியாதது. அரிசிச் சோறை ஒதுக்கிவிட்டு இட்லி, தோசை, புட்டு என்று சாப்பிடுவதில் அர்த்தமில்லை. இவற்றின் அடிப்படையும் அரிசி தானே! அரிசிச் சோறிலும், மேலே கண்ட பிற உணவுப் பொருட்களிலும் உள்ளது "ஸ்டார்ச்'தான். அரிசியை மூலப் பொருளாகக் கொண்ட சிற்றுண்டிகளைச் சாப்பிடுகிறோமா என்பது முக்கியமல்ல. முற்றிலுமாக சோறைக் கைவிட வேண்டிய அவசியமில்லை. அரிசிச் சோறு சாப்பிடுகிறோமா, இல்லையா என்பதை விட, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியமானது. மாவுப்பொருள் உணவுகளான சோறு, இடியாப்பம், புட்டு, தோசை போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைந்த அளவுக்கு ஏற்ப நார்ச்சத்து அதிகமுள்ள கீரை வகைகள், காய்கறிகள், பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். இவை மெதுவாகச் செரிமான மாகும். விரைவில் மீண்டும் பசிக்காது. உடல் எடையும் அதிகரிக்காது. காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதிய அளவு போஷாக்கு உணவை உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்கு அளிப்பது என்பதால் அந்த வேளையில் சோறையே சாப்பிடலாம். விருப்பமில்லை என்றால் பால் கஞ்சியாகக் குடிக்கலாம் அல்லது சக்தி அளிக்கும் வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் உடல்நலம் குன்றிய நிலையில் குளிர்பானம் வேண்டும் என்று கேட்டுப் பருகுவர். இந்த மென்பானங்களில் இனிப்புத் தவிர்த்து வேறு சத்து எதுவும் இல்லை என்பதால் இவை விரும்பத்தக்கது அல்ல. எனவே, நீங்கள் எந்த நேரத்திலும் எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவும் அல்ல. ஆனால், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பர். அதை மட்டும் ஞாபகத்தில் வைத்திடுங்கள்.
சிரிப்போம்; சிறப்போம்!
சிலர் காரணமே இல்லாமல் புன்னகை தவழும் முகத்துடனே எப்போதும் இருப்பர்; ஏன் சிரிக்கறீங்க? என்று கேட்டால், அதற்கும் புன்னகையே பதிலாக கிடைக்கும். இதைப் பார்த்து கேள்வி கேட்டவர் அழ வேண்டி வரும். சிலருக்கு சிரிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. சிரிப்பதுதான், உலகிலேயே கஷ்டமான காரியம் என்பது இவர்களது நினைப்பு. இவர்களுக்கு பதில் சொல்வது போல் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. "வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்ற பழமொழிக்கு ஏற்ப மனம் விட்டு சிரிப்பதால் நோய்கள் குண மாகின்றன என அமெரிக்காவில் ஒரு டாக்டர்கள் அமைப்பு கண்டுபிடித்துள்ளது. ஒரு விஷயம் வேடிக்கையானது என்பதை மூளை உணரும் போது சிரிப்பு தானாகவே எற்படுகிறது. சிரிக்கும் பொழுது முகத்தில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட தசைகள் புத்துணர்வடைகின்றன. நாடித் துடிப்பு, சுவாசம் ஆகியவை சீரடைகின்றன. இதனால் ரத்தம் எளிதில் தூய்மையடைகிறது. மனம் அமைதி பெற்று, மூளையும் புத்துணர்வடைகிறது. அதற்காக, சிரிப்பதனால் அனைத்து விதமான நோய்களும் குணமடையும் என்று கூற முடியாது. இருப்பினும், நோய்கள் குணமடைவதற்கு அடிப்படை, மன மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கவும், மன அழுத்தத்திலிருந்து வெளிவரவும் மனமகிழ்ச்சி முக்கியம் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மனம்விட்டு சிரிப்பதனால் கற்பனைத்திறன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை வளர்கின்றன. இதனால் ஒருவர் வாழ்வில் எளிதில் சாதிக்க முடியும். பெரும்பாலான மருத்துவர்கள், ஆலோசனையின் போது நோயாளியிடம் நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொள்வர். இதனால் நோயாளிகள், விரைவில் குணமடைவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். நமது வாழ்வில் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க எளிமையான வழி மனமகிழ்ச்சியுடன் சிரித்து வாழ்வதே!
அடடே...!
* ஆங்கிலத்தில் இத்தனை கண்டங்களின் பெயரை எழுதினால் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் "A' வாகத்தான் இருக்கிறது. (Asia, Africa, America, Australia, Antartica) * உலகப் புகழ்பெற்ற காமெடி நடிகர் சார்லி சாப்ளின் முதன் முறையாக நடித்த படத்தின் பெயர் "மேக்கிங் எ லிவிங்.' * மின்சாரம் நேரடியாக 3 கி.மீ., தூரம் வரைதான் பாயும். அதற்கு மேல் அதனால் பாய முடியாது. * தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட உலகின் முதல் தொகுதி தமிழகத்திலுள்ள மொடக் குறிச்சிதான். கடந்த 1996 தேர்தலில் இங்கு 1,033 பேர் போட்டியிட்டனர். * ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடும் பழக்கம் முதன் முதலாக இங்கிலாந்தில்தான் தொடங்கியது. * யூதர்களை கொன்று குவிந்த ஹிட்லருக்கு சமையல்காரனாக இருந்தவன் ஒரு யூதன்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
நீங்களே பெயர் வையுங்களேன்! தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு-ஒரு சிறிய துண்டு, தயிர்-100 மில்லி, பச்சைமிளகாய்-இரண்டு, தேங்காய்த்துருவல் - ஒரு கப், உப்பு- தேவையான அளவு, தாளிக்க-பெருங்காயத் தூள் சிறிதளவு, தேங்காய் எண்ணெய்-2 ஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா 1/4 ஸ்பூன். செய்முறை: வாழைத்தண்டை சிறு வில்லைகளாக நறுக்கி, நார் எடுத்து உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து தயிருடன் சேர்க்கவும். இதை வேகவைத்த வாழைத்தண்டுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து இதை ரெடியாக உள்ள கலவையில் நன்கு கலந்து இறக்கவும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.