கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டில் வேலைக்கு இருந்தான் ஒரு பையன். கணக்குப்பிள்ளை கவனிக்காத நேரம் பார்த்து, பணப்பெட்டியிலிருந்து நூறு ரூபாயைக் களவாடிக் கொண்டான். அதை எடுத்துக் கொண்டு போய், வழக்கமாக கலைவாணர் பெட்ரோல் போடும், "பங்க்'கில் சில்லரை கேட்டிருக்கிறான். காரணம், அக்காலத்தில் வேறெங்கும் நூறு ரூபாய்க்கு சில்லரை கிடைப்பது சிரமம். ஆனால், "பங்க்' காரர்களிடம் அப்போது நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லை.
"பரவாயில்லை; இருப்பதைக் கொடுங்கள்' என்று கேட்டிருக்கிறான். "மீதியை அப்புறம் கொடுங்கள்' என்று கூட கேட்கவில்லை. அதனால், "பங்க்' காரர்களுக்கு சந்தேகம் வந்து விட்டது. அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க, பையன் உண்மையைக் கக்கி விட்டான்.
"பங்க்' காரர், பையனுடன் தன் மேனேஜரையும் அனுப்பி, கலைவாணரிடம் நடந்த விஷயத்தைக் கூறி ஒப்படைக்க செய்தார்.
அந்த பையனோ படித்தவன். கலைவாணர் ஊர்க்காரன். அவர் நண்பரின் மகன்... என்ன செய்வது? கலைவாணர் ஒரு யுக்தி செய்தார்.
"ஏண்டா, பணம் குறைந்தால் கணக்குப்பிள்ளைதானே மாட்டப்போகிறார் என்று எண்ணித்தானே நீ திருடினாய். படித்தவனே இப்படிச் செய்யலாமா? உன்னை இங்கிருந்து விரட்ட மாட்டேன். உன் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் உயிரை விட்டு விடுவார். பெரிய மானஸ்தன். ஒண்ணு செய்கிறேன்... இன்றிலிருந்து வீட்டு ரொக்க வரவு - செலவை நீ கவனிச்சுக்கோ பணம் குறைந்தால் அப்புறம் உனக்குத்தான் தண்டனை!' என்று கூறி, பெட்டிச் சாவியையும், பண இருப்பையும் அவனிடம் ஒப்படைத்தார்.
அவன் கும்பிட்டு மன்னிப்பு கேட்டு, ஒப்படைத்த பொறுப்பை சரியாகச் செய்யலானான்.
***
சிவபெருமானுடைய மூர்த்தங்களில் சோமாஸ் கந்த மூர்த்தம் என்பது ஒன்று. பரமசிவன், பார்வதி அவர்களிடையில் முருகன்- இப்படி எழுந்தருளியிருக்கும் கோலம் அது, ஒவ்வொரு சிவாலயத்திலும் இந்த மூர்த்தியைப் பார்க்கலாம். காபியை சோமாஸ்கந்த மூர்த்தி என்று நான் சொல்வது வழக்கம் பால் தான் பரமசிவன்; டிகாஷன் பார்வதி; சர்க்கரை முருகப்பெருமான்! காலையில் காபி சாப்பிடும் போது இந்த உவமானம் நினைவுக்கு வந்தால் புண்ணியம் தானே... அதனால் தான் இதைச் சொல்லி வைக்கிறேன்.
ஒரு ரகசியம் சொல்கிறேன்... நான் காபி சாப்பிடுவதில்லை. காபியின் சுவையை அடியோடு அறியாதவன் அல்ல . இளமையில் சாப்பிட்டேன். பிறகு விட்டுவிட்டேன். என்னுடைய ஆசிரியப் பிராணாகிய டாக்டர் ஐயரவர்கள் (உ.வே.சா.,) காபி சாப்பிடுவதுண்டு. பிற்பகல் நேரத்தில் அவர்கள் காபி சாப்பிடும் போது, நான் அருகில் இருப்பேன். "உனக்கு கொடுக்காமல் நான் சாப்பிடுகிறேன்!' என்று வருந்துவார். அவர் உள்ளம் வேதனைப்படுவதை அறிந்து, அவர்கள் கொடுக்கும் காபியை உண்டேன். பின் இருவேளையும் காபி சாப்பிடத் தொடங்கினேன். அவர் அமரரான பின், மறுபடியும் காபியை விட்டுவிட்டேன்.
ஐயரவர்களால் நான் மீண்டும் காபி சாப்பிடத் துவங்கிய போது, என்னுடைய அன்னையார் இருந்தார். நான் காபி சாப்பிடுவதைக் கண்டு அவருக்கு பெருமகிழ்ச்சி. அப்போது ஒரு விசித்திரத்தைக் கவனித்தேன். காபி தாய்ப்பாசத்தையும் மாற்றி விடுகிறது என்பதை உணர்ந்தேன். நான் பகலுணவு உண்ண நேரமானால், என் அன்னையார் உண்ணாமல் காத்திருப்பார். எத்தனை நேரமானாலும் சரி, உண்ணாமல் இருப்பார். ஆனால், காபி விஷயத்தில் அப்படியில்லை; எனக்கு கொடுக்காமலே சாப்பிட்டு விடுவார். அப்போது தான் காபியின் வலிமையை உணர்ந்தேன். தாயன்பையும் மாற்றும் கொடிய பானம் அது. இப்படிச் சொல்லாமல் பற்று - பாசத்தை மறக்கச் செய்யும் ஞானதீர்த்தம் அது என்றும் சொல்லலாம் அல்லவா...
— கி.வா.ஜ.,ஒரு கட்டுரையில்.
கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் நாகர் கோவிலை அடுத்த, பூதப்பாண்டி என்ற சிற்றூரில் பிறந்தவர். பூதப்பாண்டியில் சிறுவயதில், அங்குள்ள சுயம்பு லிங்கசுவாமி கோவிலுக்கு, தினமும் சாமி கும்பிட செல்வார் ஜீவா. கோவிலில் சுண்டல் வழங்கப்படும் போது, சிறுவர்களில் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும், சிலருக்கு ஒன்றுமே இல்லாமலும் போவதுண்டு.
கோவிலில் சுண்டல் விநியோகம் முடிந்ததும், சிறுவர் எவரும் அதை சாப்பிடாமல், ஜீவாவிடம் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும். அதன்பின் அவர் தான் அதை, கிடைத்தவர் களுக்கும், கிடைக்காதவர்களுக்கும் சமமாகப் பங்கிட்டு, எல்லாருக்கும் சுண்டல் கிடைக்குமாறு செய்வாராம். அவரது சமதர்மக் கொள்கை, சுயம்புலிங்க சுவாமியின் சுண்டல் வினியோகத்திலேயே தொடங்கி விட்டது!'
— தொ.மு.சி.ரகுநாதன் ஒரு கட்டுரையில்.
***
நடுத்தெரு நாராயணன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.