அன்புள்ள மகளுக்கு,
என் வயது 83. பத்து பிள்ளைகளின் தாய், நான் ஒரு நர்சாக பணியில் இருந்@தன். என் குழந்தைகளின் நலனுக்காக, 12 வருட சர்வீஸ் வேலையை விட்டுவிட்டேன். 22 பேரன் பேத்திகள் உள்ளனர். கொள்ளுப் பேத்தி, பிளஸ் 2 பாஸ் செய்து விட்டாள்.
பெண்ணாய் பிறப்பது, எவ்வளவு கேவலம் என்பதை இந்த தள்ளாத வயதில் உணர்கிறேன். தற்கொலை செய்தால், அது என் மகளை பாதிக்கும். ஏனெனில், நான், என் மகள் வீட்டில் தங்கி உள்ளேன். ஆறு மாதம் முன், ஒரு மதியம் என் மருமகன், திடீரென வேலையிலிருந்து வந்தார்... "மாமி உள்ளே வாங்க...' என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் வெளியே உட்கார்ந்து இருந்தேன். "என்ன? உன் மகளும் படுக்க வரமாட்டேன் என்கிறாள், நீயும் வரமாட்டேன் என்கிறாய். 500 ரூபாய் தருகிறேன் வா...' என்றான். நான் வெளியே போய் விட்டேன்.
இந்த விஷயத்தை மெல்லவும் முடியவில்லை; முழுங்கவும் முடியவில்லை. என் கணவர் இறந்து, 15 வருடங்கள் ஆகின்றன. 80 வயது வரை உழைத்தேன். மற்ற குழந்தைகள் வீட்டில் வசதி இல்லை. அதாவது, படுக்க கூட இடமில்லை.
மகள் ஆசிரியை, காலை 8:00 மணிக்கு போனால், திரும்பி வர மாலை 4:00 மணியாகும். என் மகளுக்கு, இரு மகன்கள். பெரியவன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கிறான். சின்னவன் பிளஸ் 1 படிக்கிறான்.
மருமகன் அரசு ஊழியன். வீடு பெரிய வீடு. இருமுறை முதியோர் இல்லம் போய் வந்தேன். நான் நாற்பது வருடமாக ஆஸ்துமா நோயால் கஷ்டப்படுகிறேன். அதனால், முதியோர் இல்லத்திலும் என்னால் இருக்க முடியவில்லை. தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன். இந்த இக்கட்டிலிருந்து வெளிவர, உங்களுடைய நல்ல யோசனையை தயவு செய்து விரைவில் வெளியிடும்படி, கேட்கிறேன் மகளே!
இப்படிக்கு,
அம்மா.
அன்புள்ள அம்மாவிற்கு:
சில சமூகங்களில் முதியவர்களை, "ஞானத்துறவி' என போற்றுவர். வயோதிகம் என்பது ஒரு உயிரியல் யதார்த்தம். முதுமை, மனிதரின் கட்டுப்பாட்டை மீறி, மெதுமெதுவாக மனிதரை ஆக்கிரமிக்கும். முகம், கைகால்களில் சுருக்கங்கள் தோன்றுதல், நரைபூத்தல், முடி உதிர்தல், ரத்த ஓட்டத்தில் மந்தம், நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு, தொண்டையில் மாற்றம் ஏற்பட்டு, குரல் கிழக்குரலாதல், காது கேளாமை, கண்பார்வை குறைவு, ஞாபகத்திறனில் தேய்மானம், எரிச்சலான மனநிலை, உடலுறவில் ஈடுபாடு அற்றுப்போதல், எலும்பு நோய்கள் பாதிப்பு போன்றவை முதுமையின் அடையாளங்கள்.
இளவயதில், நிறைய சாதித்திருந்தால், முதுமையில் பெருமித உணர்வு பூக்கும். இளவயதில் நிறைய தோல்விகளை சந்தித்திருந்தால், முதுமையில் வெறுமையும், ஆற்றாமையும் நிலவும். முதியவர்களில் இருவகை உண்டு. இளமையான முதியவர்கள், முதுமையான முதியவர்கள். இளமையான முதியவர்கள் தம் வேலைகளை தாமே செய்வர். முதுமையான முதியவர்களுக்கு, எழுந்து நிற்கவே யாராவது உதவ வேண்டும். அம்மா... நீங்கள் ஒரு இளமையான முதியப்பெண். எண்பது வயதுவரை குடும்பத்துக்காக உழைத்திருக்கிறீர்கள். குடும்ப நலனுக்காக செவிலியர் பணியை, துறந்திருக்கிறீர்கள். நீங்கள் பத்து பிள்ளைகளின் தாய். 22 பேரன் பேத்திகளின் பாட்டி நீங்கள். பிளஸ் 2 பாஸ் செய்த கொள்ளுப்பேத்தியும் உங்களுக்கு உண்டு. இத்தனை அருமை பெருமைகளை கொண்ட, 83 வயது வயோதிகப் பெண்மணியான உங்கள் மீது, உங்களது சொந்த மருமகனே, பாலியல் ரீதியான வன்முறைப் பேச்சை கொட்டி கவிழ்த்திருக்கிறான். ஒரு மூத்த குடிமகளுக்கு நேர்ந்த இந்த அவமானம் ஒரு தேசிய அவமானம்.
முதியோர் ஒரு நாட்டின் அனுபவக்கிடங்கு என்று சொல்வதுண்டு. வீட்டில் ஒளிவீசும் ஒரு நாகரத்தினம். ஒருநாடு சுபிட்சமாக இருக்கிறதா, இல்லையா என்பதை அந்நாட்டின் முதியோர் எண்ணிக்கையை வைத்து கணித்து விடலாம். முதியோர் எண்ணிக்கை கூட கூட நாட்டின் சுகாதார மருத்துவ வசதிகள் எத்தனை தூரம் மேம்பட்டிருக்கின்றன என்பதை உணரலாம். உங்களுக்கு பத்து பிள்ளைகள். மற்ற பிள்ளைகள் வீட்டில் தங்குவதற்கு இடமில்லை. அதனால், மகள் வீட்டில் தங்கியிருப்பதாக கூறியுள்ளீர். இது நொண்டி சமாதானம். மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பர். மற்ற பிள்ளைகள் தங்கள் வீடுகளில் உங்களை தங்க வைக்க விரும்ப வில்லை. இரண்டு தடவை முதியோர் இல்லத்திற்கு போய், தங்க விருப்பமில்லாமல் திரும்பி, மகள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். நாற்பதாண்டு காலம் ஆஸ்துமாவினால் அவதிப்பட்டிருக்கிறீர்கள்.
இனி, நீங்கள் என்ன செய்யவேண்டும் தெரியுமா அம்மா?
மருமகன் இழிவாய் பேசினால், மவுனமாக மறுகி நிற்காதீர்கள். வார்த்தையால் திருப்பி அடியுங்கள். வாரம் ஒரு மகன் அல்லது மகள் வீட்டில் தங்குங்கள். ஆஸ்துமாவுக்கு தகுந்த சிகிச்சை பெற, நல்ல மருத்துவரிடம் அழைத்துபோக சொல்லுங்கள். மாத செலவுக்கு, ஒரு பிள்ளைக்கு, 50 ரூபாய் வீதம் பத்து பிள்ளைகளை, 500 ரூபாய் தரச்சொல்லுங்கள். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உங்கள் பிள்ளைகள் செய்து கொடுக்க மறுத்தால், பிள்ளைகளின் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். இலவச சட்ட ஆலோசனை மையம் மூலம் பராமரிப்பு செலவை வழங்கச் சொல்லி, நீதிமன்றத்தில் வழக்கு பதியுங்கள்.
நீங்கள் எடுக்கும் நடவடிக்கை உங்களுக்காக மட்டுமல்ல... உங்களை போன்ற ஆயிரக்கணக்கான வயோதிகப் பெண்மணிகளின் நலனுக்காக. உங்களின் வழியாக சமுதாயத்தில் பெரிய அளவிற்கு மறுமலர்ச்சி தோன்றட்டும். உங்கள் பிள்ளைகளின் மீது காவல்துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க உங்கள் உடல்நலமும், வயதும், மனமும் சம்மதிக்க மறுத்தால் விட்டு விடுங்கள்.
ஒரு வீட்டில் முதியவர்கள் இருந்தால், இளையதலைமுறை சந்தோஷப்பட வேண்டும். தங்களது மூத்த தலைமுறையை போல நீண்டநாள் வாழும் வாய்ப்பை, அவ்வீட்டின் இளைய தலைமுறையும் பெறுகிறது என்பது விஞ்ஞான உண்மை. நீண்ட நாள் வாழும் ஜீன்களிலிருந்துதான் நீண்ட நாள் வாழும் ஜீன்கள் உருவாக முடியும்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பாவம்... இந்த அம்மாவின் நிலையை எண்ணி வருத்தப்படாதவர்கள் மிகவும் குறைவாகவே இருக்க முடியும். நம்மில் பலபேர் குறைந்தது ஒரு சொட்டு கண்ணீராவது விட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். இதைவிட நம்மால் பெரிதாக வேறு என்ன செய்து விட முடியும்? பாவம் ஒரு பக்கம், ஆனால் பழியோ இன்னொரு பக்கம் என்பார்களே அதுபோல்தான் உள்ளது இந்த அம்மாவின் நிலைமையும். அதற்கு, இந்த அம்மாவின் விதியைத்தவிர வேறு யாரை நொந்து கொள்வது? ஆனால் ஒருவேளை இவர் மருமகன், ஒருநல்ல தாயின் வயிற்றில் பிறந்திருப்பானேயானால் இப்படி ஒரு துன்பத்தை / மன கஷ்டத்தை அதுவும் தன் 83வது வயதில் இந்த அம்மா இப்படி அனுபவித்துக் கொண்டிருக்க மாட்டார். என்ன செய்வது? முதலாவதாக, அந்த மருமகனுக்கு, தான் ஒரு ஆண் என்கின்ற அகம்பாவமும், இரண்டாவதாக, தான் ஒரு அரசு ஊழியன் என்கின்ற மமதையும் (நல்ல அரசு ஊழியர்கள் மன்னிக்கவும்), மூன்றவதாக தன்னை தட்டிக்கேட்கிற தகுதி யாருக்கும் இல்லை என்கிற திமிரும், நான்காவதாக இந்த அம்மாவிடம் பெண் எடுத்த மற்ற மருமகன்களைவிட ஏன், இந்த அம்மாவின் மகன்களை விடவும் தான் மிகவும் வசதி வாய்ப்புடன் இருப்பதாக தனக்குத்தானே எண்ணிக்கொள்ளும் இறுமாப்பும் இருப்பதால் தான் இந்த மாதிரி கேவலமாக நடந்து கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன். இதைவிட கொடுமை, தான் பெற்ற மகளே ஒரு ஆசிரியையாக இருந்தும், தன் தாயின் கண்ணில் உள்ள சோகம் இதுவரை தெரியாமல் இருப்பதுதான். ஒருவேளை தன் மகளுக்கும், மருமகனுக்கும் இடையே நல்ல உறவு இல்லாமல் போனது, தனக்கே வினையாகிவிட்டதோ என்னவோ. எது எப்படியிருப்பினும், ஒரு பெற்ற தாயின் உணர்வுகளை சரியாகப் புரிந்து கொள்ளாத நல்ல மகளை இந்த அம்மா பெறவில்லை என்பதே என் ஆதங்கம். ஒருவேளை, இந்த ஆசிரியையான தன் மகள், தன்னை நன்றாக கவனித்திருப்பாறேயானால், இந்த தாய்க்கு இந்த நிலைமை வந்திருக்காதோ என்னவோ யார் கண்டது? ஒருவேளை வளர்த்த விதம் சரியில்லையோ என்று கூட எண்ண தோன்றுகிறது. ஆக மொத்தத்தில் தான் பெற்ற பிள்ளைகளில் எந்த பிள்ளைக்குமே, இந்த அம்மா மேல் பிரியமில்லையென்றே தெரிகிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை ... இவர் மருமகன், எப்படி ஒரு நடமாடும் தெய்வத்தை கொச்சை வார்த்தையால் இழிவு படுத்தினானோ, அதேபோல் கண்டிப்பாக , இன்னொரு பெண்ணால் அவனுக்கு அழிவு நிச்சயம் உண்டு. வினை விதைத்தவன், என்றாவது ஒருநாள் வினையை அறுத்துத்தானே ஆகவேண்டும். இது காலத்தின் கட்டாயம். அந்த காலமே. இந்த காமுகனுக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறும். அதுவரை பொறுத்திருப்போம். நன்றி. அன்புடன்...
இந்த நிகழ்வு இப்போது நடந்ததா இல்லை இவர்களின் 53 ஆவது வயதில் நடந்ததா? உங்களுக்கு மகன்களால் எந்த பலனும் இல்லை, அதனால் மகள் வீட்டில் காலம் தள்ளுகிறீர்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு மருமகனோடு கண்ணியமாக நடந்திருக்க வேண்டும். இத்தனை உரிமையோடு படுக்கைக்கு அழைக்கிறார் என்றால் நீங்கள் அவரோடு கண்ணியமாக பழகவில்லை என்றே தோன்றுகிறது, மேலும் உங்கள் இருவருக்கும் ஏற்கனவே தவறான தொடர்பு இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம், அதை நீங்கள் மறைக்கிறீர்கள்.
"உயிரை விட மானம் பெரிது.". இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த அளவுக்கு உங்கள் மருமகன் உங்களை பேசிய பிறகும் நீங்கள் அவர்களோடு எப்படி வாழ்கிறீர்கள்? அது கொடுமை அல்லவா? தயவுசெய்து முதியோர் இல்லத்தில் சென்று சேருங்கள். அதற்க்கு முன்பாக போலீசில் புகார் செய்துவிடுங்கள். உங்களைபோல இருக்கும் மற்ற வயதானோருக்கு முன் உதாரணமாக இருங்கள்.
படிக்கும் வாசகர்களுக்காக எழுதப்பட்ட கற்பனையா? அல்லது உண்மையா? உண்மையெனில் அந்த கயவன் குடும்பமே மோசமானதாக இருந்திருக்கும். இல்லாவிடில் இந்த மாதிரியான வக்கரபுத்தி தோன்றாது. இந்து மத சாஸ்திரப்படி பெற்றோருக்கு நிகராக மதிக்க தக்கவர்கள், அண்ணன்-அண்ணி, தாய்மாமன்-அவர் மனைவி, மாமனார்-மாமியார், குரு-குருபத்தினி, அந்த காலத்தில் ராஜா -ராணி, என்று கூறுகிறது. இவர்களை நல்ல நாள் கிழமைகளில் விழுந்து வணங்க வேண்டும்.
"இளமையான முதியவர்கள், முதுமையான முதியவர்கள்" மிக அழகான வார்த்தைகள். வார்த்தைகளைப் படித்தாலே முதுமையான முதியவர்கள் கூட இளமையான முதியவர்களாகிவிடுவார்கள். வயோதிகம் என்பது ஒரு உயிரியல் யதார்த்தம் என்று சொல்லி அதன் அடையாளங்களை வகைபடித்தியதும் அருமையிலும் அருமை. முழுமையாகப் படித்தால் அவைகளை எதிர்கொள்ளும் மனோபலத்தை, ஆண் பெண் பாகுபாடு இல்லாமல், இருபாலரும் பெற முடியும். ஆழமான, எதார்த்தமான வார்த்தைகள். மற்றபடி இவரின் பிரச்னையை காவல்துறை, நீதிமன்றம் மூலமாக தீர்வு என்பதெல்லாம் நடைமுறையில் ஒத்துவராது. "உன் மகளும்...." என்று மருமகன் சொல்வதின் பொருளை பக்குவமாக மகளிடம் சொல்வதே மிக எளிதான, சரியான தீர்வாக இருக்கும். பத்து பிள்ளைகளில் இந்த ஒரு மகள் வீட்டில் மட்டும் இவ்வளவு காலமாக இருக்கிறார், அதற்க்கு மருமகனின் அனுமதி இருப்பதால்தான் சாத்தியப்படுகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னியோன்யம் திருப்தியாக இருக்கும்பட்சத்தில், அம்மா இடத்தில் இருப்பவரிடம் இதுபோன்று நடந்துகொள்ளும் கீழ்த்தரமான எண்ணம் வர வாய்ப்பு இல்லாமல் போகும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.