மதிய உணவு வேளை. ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, ஏ.வி.எம்., உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாத வர்கள், சட்டை இல்லாத உடம்பில், துண்டு மட்டும் அணிந்திருப்பவர்கள்; ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள்; நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என, கிட்டத்தட்ட, இருபது பேர், அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்தபடி நின்றிந்தனர்.
சிறிது நேரத்தில், உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும், கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயை யும் கொடுத்துவிட்டு, ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிய படி திரும்பினர்.
பார்த்த நமக்கு ஆச்சரியம். இந்த காலத்தில், ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று!
"உள்ளே வாங்க விவரமா சொல்றேன்' என்று, மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார். முதல்ல சாப்பிடுங்க என, சூடான சாப்பாட்டை சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளத்துடன் வழங்கினார். சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது.
அவர் கூறினார்:
நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை, 25 ரூபாய். இந்த சாப்பாட்டைத் தான், இப்போது வந்தவர்கள், ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றனர். அவர்களுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய். அது ஏன் அவர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய் என்ற உங்கள் சந்தேகத்தை விளக்கி விடுகிறேன்.
எங்க ஓட்டலுக்கு எதிரே உள்ள அரசு மருத்துவமனையில், உள் நோயாளி களாக அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும், சுற்றுப்பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள்தான். நோயாளிகளுக்கு மதிய உணவு, மருத்துவமனையில் வழங்கப்படும். ஆனால், உடன் இருக்கும் உறவினர்களுக்கு, மருத்துவமனை நிர்வாகப்படி உணவு வழங்க முடியாது. அவர்கள் வெளியில்தான் சாப்பிட்டுக்கொள்ள முடியும். அவசரமாக வந்தாலும், நிதானமாக வந்தாலும், அவர்கள் கையில் காசு இருக்காது.
ஆகவே, அவர்களைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர், பல நாள் ஓட்டலுக்கு வந்து, சாப்பாடு என்ன விலை என்று கேட்பதும், கையில் உள்ள காசை, திரும்ப திரும்ப எண்ணிப்பார்ப்பதும், பிறகு அரைச்சாப்பாடு என்ன விலை என்று கேட்டு, அதையும் வாங்காமல், கடைசியில் ஒரு டீயும், வடையும் சாப்பிட்டு போவர். சில நேரம், வெறும் டீயுடன் வயிற்றைக்காயப் போட்டபடி போவர்.
தினமும் ஒரே மாதிரி மனிதர்கள் வருவதில்லை. ஆனால், அன்றாடம் வரக்கூடிய இருபதுக்கும் குறையாத மனிதர்கள் பலரும், நான் மேலே சொன்னது போல, ஒரே மாதிரிதான் நடந்து கொள்வர்.
பசியாற சாப்பாடு போட கடை நடத்தும் எனக்கு, இதை பார்த்ததும் மனசு, "பகீர்' என்றது. சரி... தினமும் இருபது பேருக்கு உணவு தானம் செய்தது போல இருக்கட்டும் என்று எண்ணி, இருபது சாப் பாட்டை பார்சல் கட்டி வைத்து விடுவேன். ஆனால், இலவசமாக கொடுத்தால், அவர்களது தன்மானம் தடுக்கும். ஆகவே, பெயருக்கு ஒரு ரூபாய் வாங்கிக் கொள்கிறேன். மேலும், இந்த இருபது பேரை அடையாளம் காட்டுவதற்காக, மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் வார்டு பொறுப்பாளரிடம் இருந்து டோக்கன் வாங்கிவர வேண்டும். ஏன் பார்சலாக தருகிறோம் என்றால், இந்த சாப்பாட்டை இரண்டு பேர் கூட சாப்பிடலாம். ஆகவே, கொண்டு போய், இன்னொருவருடன் பகிர்ந்து சாப்பிடட்டுமே என்ற எண்ணம்தான்.
இது தான் சார் விஷயம். இது இல்லாம, எங்க ஓட்டலில் சாப்பிடும் உடல் ஊனமுற்றவர்களுக்கு, 10 சதவீத மும், கண் பார்வையற்றவர் களுக்கு, இருபது சதவீதமும் எப்போதுமே தள்ளுபடி உண்டு.
இந்த விஷயத்துல, நாங்களும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கொள்கிறோம் என, என்னை தொடர்பு கொள்பவர்கள் (தொடர்பு எண்: 9629094020) இருபது சாப்பாட்டிற் கான முழுத்தொகையை (ஐநூறு ரூபாய்) கொடுத்து விட்டுப் போவர். நான் அவர்கள் பெயரை போர்டில் எழுதிப்போட்டு நன்றி தெரிவிப்பேன் என்ற வெங்கட்ராமன், நமக்கு விடை கொடுக்கும் போது சொன்னது இதுதான்...
"எப்படியோ, வர்ற ஏழை, எளியவர்களுக்கு, வயிறு நிறையுது, எங்களுக்கு மனசு நிறையுது!'
***
எல். முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.