எந்த பொருளை இலவசமாக கொடுத்தாலும், நீண்ட வரிசை. ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம் என விளம்பரப்படுத்தினாலும், மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த காலத்தில், "மரங்கள், செடிகளை வளர்த்து, சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கு ஒத்துழைப்பேன்...' எனக் கூறுகிறார் தினக் கூலியான ருக்மாங்கதன், வயது 45. நகரியைச் சேர்ந்தவர். பெயின்டர் வேலை செய்கிறார். தினமும் காலை, 5.00 மணி முதல் காலை 9.00 மணி வரை, நான்கு மணி நேரம் மரம், செடிகளுக்கு, தண்ணீர் ஊற்றுகிறார்.
இத்தனைக்கும், இவர் தன் வீட்டுக்கு முன் உள்ள செடிகளுக்கோ, சொந்த நிலத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கோ தண்ணீர் ஊற்றி, பாதுகாக்கவில்லை. நகரி டவுனில், சாலையின் இருபுறத்திலும் மரங்களை நட்டு, அவற்றை பராமரித்து, பச்சை பசேலென வளர்த்து, இயற்கை சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறார்.
நகரி டவுன் நடைபயிற்சி சங்கத் தலைவர் டாக்டர் எம்.ராமசந்திரன் தலைமையில், கடைகள் முன்பும், சாலை ஓரங்களிலும், மரக்கன்றுகளை நட்டனர். அந்த மரங்கள் பாதுகாப்புடன் வளர்வதற்கு ஒத்துழைப்பு தரும்படி, சங்க உறுப்பினர்கள், கடைக்காரர்களிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை.
மக்களின் கண்காணிப்பின்றி, வதங்கி போன மரம், செடிகளை கண்டு மனம் வருந்திய ருக்மாங்கதன், ஒரு பிளாஸ்டிக் கேனில் தண்ணீரை நிரப்பி, கையில் மண் வெட்டியுடன் டவுனில் நடப்பட்டுள்ள ஒவ்வொரு மரங்களையும் தேடிசென்று, மரங்களை சுற்றி வளர்ந்துள்ள புற்களை களையெடுத்து சுத்தம் செய்த பின், தண்ணீர் ஊற்றி வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படி தன்னை அர்பணித்து கொண்ட இவரை, பலர் ஏளனப் பார்வை பார்ப்பதையும், இவர் கண்டுகொள்வதில்லை. காலை, 9.00 மணிக்குப்பின், வீடு திரும்பும் இவர், செய்யும் தொழிலே தெய்வம் என, கையில் பிரஷுடன் பெயின்ட் டப்பாவை எடுத்து, குடும்பத்து பசியை தீர்க்க வேலைக்குசெல்கிறார்.
பெயின்டர் ருக்மாங்கதனின் தன்னலமற்ற சேவையை உணர்ந்த நகரி நடை பயிற்சி சங்கத்தினர் அவரை பாராட்டி, கவுரவித்துள்ளனர்.
மரத்தை வெச்சவன் தண்ணீ ஊத்துவான் என, சினிமா பாட்டுப்பாடலாம். மரத்தை வைக்காதவனே மரத்தை வெட்டி சாய்க்கும் இந்த காலத்தில், ஏழை பெயின்டர் ருக்மாங்கதனின் சேவையை பார்த்தபின், ஒரு சிலராவது, இவரது பணியை பின்பற்றினால், நாடும், காடும் செழிக்கும். சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்கலாம்.
***
சி.சி. ஏழுமலை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.