நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடக்க விடாமல், பா.ஜ.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. மக்களின் வரிப்பணம் விரயமாகிறது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் வேண்டும் என்பதே கோரிக்கை. காங்கிரஸோ, விவாதத்துக்குத் தயார், வாக்கெடுப்பு கூடாது என்ற நோக்கில், கூட்டணிக் கட்சிகள், நட்புக் கட்சிகளை தாஜா செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறது. நமது சரியும் பொருளாதாரத்துக்கு முட்டுக்கொடுக்க அந்நிய முதலீடுகள் அவசியம் என காங்கிரஸ் கருதுவது தெளிவு.
காங்கிரஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தோல்வியுற்று திரிணாமுல், இப்போது வாக்கெடுப்பை வலியுறுத்தவில்லை. மதவாத பா.ஜ.க. வெற்றி பெறக்கூடாது என்பதற்காக தி.மு.க. திடீரென்று அந்நிய முதலீடுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. நேற்றுவரை, சிறு வணிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று எஃப்.டி.ஐ.யை எதிர்த்த தி.மு.க. பல்டி அடிக்க, சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமர்ஜ் வாதி கட்சியும் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்பு செய்துவிட ரகசியமாக ஒப்புக் கொண்டன.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை இந்திய அரசு கொண்டு வந்தாலும், அதை வரவேற்கவோ மறுக்கவோ மாநிலங்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலம் வேண்டும் என்று முடிவு செய்தால் அதை எவ்வாறு மறுக்க முடியும்? அது மாநில உரிமைகளில் தலையிடுவது ஆகாதா? நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றால், அதன் மூலம் எஃப்.டி.ஐ.யின் சாதக பாதகங்கள் உறுப்பினர்களை மட்டுமல்ல, ஊடகங்கள் மூலம் மக்களையும் சென்றடையும். அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மாநிலங்கள் பின்பற்றவேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன, சிறு வணிகர்களின் நலனை எப்படிப் பாதுகாப்பது என்பன போன்ற செய்திகள் தெரியவரும். மறுக்கும் மாநிலங்கள், வாய்ப்பை இழந்துவிட்டோமோ என்று பிற்காலங்களில் வருத்தப்படாமல், விரைந்து முடிவெடுக்கவும் முடியும்.
அந்நிய முதலீடு விஷயத்தில் வாக்கெடுப்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? ஆளும் காங்கிரஸுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலமில்லை என்பதை நிரூபிக்கத் துடிக்கின்றன எதிர்க்கட்சிகள். வாக்கெடுப்பில் தோல்வியுற்றால் காங்கிரஸுக்கு ஆட்சியில் நீடிக்க தார்மிக உரிமையில்லை என்று ராஜினாமா கோர ஆரம்பிக்கலாம். மற்றொரு தேர்தல் நடத்தவேண்டிய சூழல் உருவாகும். இதனால் யாருக்கு என்ன லாபம்? இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், மறுதேர்தல் வந்தால் மக்களின் வரிப்பணம் வீணாகச் செலவாகும்; கட்சிகளும் அரசியல்வாதிகளுமே கூட இதற்கு எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் பா.ஜ.க.வில் உட்கட்சிப்பூசல் உச்சத்தில் இருக்கிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்ற முடிவு இன்னும் எட்டப்படாத நிலை. இதில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, என்ன பலனை காணப்போகிறது பா.ஜ.க.?
சில்லறை வர்த்தகத்தில் உள்ள பல கோடி தொழிலாளர்களின் நலனைப் பேணி பாதுகாத்த பெருமை தமக்கே வந்து சேர வேண்டும் என்றே ஒவ்வொரு கட்சியும் தோள் தட்டுகின்றன. இதன் பின்னே செயல்படுவது வோட்டு அரசியல் மட்டுமே. முறையான விவாதம் தான் தெளிவை ஏற்படுத்தும். தெளிவு ஏற்படுத்த உருவாக்கப்பட்டதே நாடாளுமன்றம். முன்நிபந்தனைகள் போட்டு, ரகளை செய்து முடக்கி, அதன் மாண்பை எதிர்க்கட்சிகள் குலைக்கக்கூடாது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.