தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல சென்னை. நமது இந்தியாவின் அனைத்து கலைகளையும் உள்ளடக்கி, நமது கலை மற்றும் கலாசாரத்தை கலை தூதுவராக சென்று உலகெங்கிலும் பரப்பி நம் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் பெரிய நகரம். உலக வரைபடத்தில் சென்னை மிகப்பெரிய அங்கீகாரம் பெற, நம் கலைகள் பெரிய காரணமாகும் .
இவ்வாண்டும் அதே புத்துணர்ச்சியுடன் கர்நாடக இசைப் பிரியர்களுக்கு, நிகழ்ச்சிகளை, அள்ளி அள்ளி கொடுக்க, இசை விழாவாய், "மியூசிக் சீசன்' என்று பல பெயரில் துவங்கி விட்டது. முதற்கட்டமாக பாரத் கலாசாரின் 26வது ஆண்டு இசை விழா, பாரத் கலாசாரின் ஒய்.ஜி.பி., அரங்கில் வெகு விமரிசையாக துவங்கியது. துவக்க நாள் கச்சேரி, முதல் விருது வழங்கும் விழா மற்றும் நன்றியுரை கூறி முடித்தல் வரை, பார்க்கும் ரசிகர்களை கவரும் விதம் ஒவ்வொரு ஆண்டும் மெருகேறி வருகிறது. கலைக் குடும்பம் எடுக்கும் விழாவானதால், அருமையான உரைகளுக்கும் அதன் நடுவில் ஒய்.ஜி.மகேந்திராவின் நகைச்சுவை கலந்த, அவருடைய மலரும் நினைவுத் துளிகள், ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவம்.
இசை விழாவை, கோயம்புத்தூர் பாரதிய வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் குத்துவிளக்கேற்றி துவக்க வைத்தார். பேராசிரியர் டி.என்.கிருஷ்ணன், மூத்த வயலின் கலைஞர், விழா மலரை வெளியிட்டு, அதன் பிரதியை நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார். பாரத் கலாசாரின் சிறப்பு விருதை ஞானகலா பாரதி விருதை, பேராசிரியர் டி.என்.கிருஷ்ணனுக்கும், "விஸ்வகலா' பாரதி விருதை, டாக்டர் கத்ரிகோபால்நாத் மற்றும் லட்சுமி விஸ்வநாதனுக்கும், நாட்டிய கலா விருதை, நடிகை லட்சுமிக்கும், ஆசார்ய கலா பாரதி விருதை நடனக் கலை தம்பதியரான நரசிம்மாச்சாரி மற்றும் வசந்த லட்சுமி நரசிம்மாச்சாரிக்கும், கலாசேவா பாரதி விருதை, ரம்யா ஹரிசங்கர் யு.எஸ்.ஏ.,விற்கும் மற்றும் பார்வதி ரவி கண்டசாலாவிற்கும், நாட்டியகலா பாரதி டி.டி.சவுந்தர்ராஜனுக்கும் வழங்கப்பட்டன.
சிறப்பு பாராட்டு விருதை தவில் துறையை சேர்ந்த தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜன் மற்றும் உமா ஸ்ரீராம் அவர்களுக்கும், நாட்டிய துறையில் மிக சிறப்பாக கலை சேவை ஆற்றி வரும் கலைஞர்களுக்கு, நாட்டிய சங்கீத கலாபாரதி விருதை முறையே ஹரிபிரசாத் சிகாமணி, நெல்லை கண்ணன் மற்றும் சுவாமிமலை சுரேஷûக்கும் வழங்கப்பட்டன.
பாரத் கலாசாரின் இளம் கலைஞர்களுக்கான யுவகலா பாரதி விருதை, 11 இளம் கலைஞர்கள் பெற்றுக் கொண்டனர். மதுவந்தி அருண், விருது பெற்ற அனைவரின் கலைச்சேவையை அழகாக பாராட்டி, ரசிகர்களுக்கு மிக அழகாக தொகுத்து கொடுத்தார்.
முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக, நாட்டிய சங்கல்பாவின் நிறுவனர் ஊர்மிளா சத்ய நாராயணனின் மாணாக்கி வினீஷா கதிரவனின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டிய துறையில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டு வரும் இளம் பரத கலைஞர் வினீஷா. எந்த கதா பாத்திரத்தை ஏற்று நடனம் செய்தாலும், நெக்குருகி அந்த கதாபாத்திரமாக மாறி நம் கண்களுக்கு ரசிக்கக் கொடுப்பது ஊர்மிளாவின் மாணாக்கி வினீஷாவிற்கும் பாரத் கலாசாரின் அனைத்து நிகழ்ச்சிகளும் கண்ணனுக்கே அர்ப்பணம் என்ற பொருளில், "கிருஷ்ணார்ப்பணம்' என்ற சிறப்பு நிகழ்ச்சியை அமைத்து, அவரே முன்னிருந்து ஒவ்வொரு பாடலின் விளக்கத்தை கொடுத்து, தொகுத்து வழங்கினார்.
வினீஷாவின் நடனத்திற்கு பக்க பலமாக சுவாமிமலை சுரேஷ்குமார் நட்டுவாங்கத்திலும், தனஞ்செயன் மிருதங்கத்திலும், கலையரசன் வயலினிலும், சசிதர் குழலிலும் கைகோர்த்தனர். தனது நிகழ்ச்சியின் பிரதான உருப்படியாக லால்குடி ஜெயராமனின் சாருகேசி ராக வர்ணம் "இன்னம் என் மனம் அறியாதவன் போல்' இவ்வர்ணத்தின் அனைத்து ஜதிகளும் மிக வித்தியாசமாக, மிக சிறப்பாக அமைக்கப்பட்டு, சிறப்பாக ஆடி, நடனத்தில் பிரமிக்க வைத்து விட்டது.
இறுதியாக பாலமுரளியின் குந்தள வராளி ராக தில்லானா மிக விறுவிறுப்பாக ஆடி, ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தார். பாரத் கலாசாரின் முதல் நாள் நிகழ்ச்சியான கிருஷ்ணார்ப்பணம், இசை விழா நிகழ்ச்சிகளுக்கு அச்சாரமாக அமைந்து விட்டது.
-ரசிகப்ரியா.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.