ஸ்ரீ கிருஷ்ணன் என்றாலே வெண்ணெய் திருடுவது, கோவர்த்தனகிரியைத் தூக்குவது, காளிங்கநர்த்தனம் போன்ற கோகுலத்துக் குறும்புகள் தான் நாட்டியக்காரருக்கு வெல்லக் கட்டியாக இனிக்கும்.
ஆனால், ஷீலா உன்னிகிருஷ்ணனின் “ஸ்ரீ கிருஷ்ண வைபவம்’ புத்தம் புதிய நாட்டிய நாடகத்தில், கண்ணனைப் புதிய பரிமாணத்தில், வேறு ஒரு உயர்ந்த தளத்தில் உலவ விட்டுள்ளது மாறுபட்ட சித்தரிப்பு!
ஆயர்பாடியிலிருக்கும் கோபியருக்கும், கண்ணனுடன் ஆடிப்பாட ஆசை! கண்ணனும், யமுனை ஆற்றில் அவர்களுடன் சவாரி போக, ஓர் ஓடத்தை வரவழைக்கிறான்.
சின்னக் குழந்தையான கண்ணனை ஓடத்தில் கூட்டிச் செல்வது ஆபத்து என நினைத்து அவனைத் தவிர்க்கின்றனர். “கவலைப்படாதீங்க.. நான் படகினை ஓட்டி, உங்களை எல்லாம் பத்திரமாகக் கரை சேர்ப்பேன்!’ என்கிறான் கண்ணன்.
“நீயோ மாடுகளை மேய்க்கும் இடையன்; நீ ஓடக்காரன் ஆக முடியாது. வீட்டுக்குப் போ!’ என்று விரட்டுகின்றனர்.
உடனே கண்ணன், “என்ன அப்படிச் சொல்லிட்டீங்க? தண்ணீருக்கும், எனக்கும் நிறைய சம்பந்தமிருக்கு!’ என்று சொல்லி ஒரு பெரிய பட்டியலே போடுகிறான்.
“மந்த்ர மலையை பாற்கடலின் அடியில் தாங்கிப் பிடித்துள்ளேன். பெரும் மடுவுக்குள் யானையைப் பிடித்து இழுத்த முதலையை ஓங்கி மிதித்துள்ளேன். ஏழு கடலுக்குள்ளும் நீந்தியே சென்று நான்மறைகளை மீட்டுள்ளேன். காளிந்தி நதியில் காளிங்கன் தலை மீது நர்த்தனம் ஆடியுள்ளேன்!’ என்றெல்லாம் சொல்லி கோபியரைச் சம்மதிக்க வைத்து படகு ஓட்டுகிறான்.
“ராஸ லீலை’ நடக்கிறது. ஒவ்வொரு கோபிகையும், கண்ணன் தனக்கே சொந்தம் என நினைத்து கர்வம் கொள்கிறாள். கிருஷ்ணன் புயலை ஏவி, படகைத் தத்தளிக்கச் செய்கிறான். கோபியர்கள், “கண்ணா, நீயே எங்கள் சத்குரு’ என்று கதறியபடி சரணடைகிறார்கள். “உலகில் உள்ள எல்லாமே பரப்பிரமம்தான்’ என்று அவர்களுக்கு உணர்த்துகிறான் கண்ணன். அவர்களது மாயை விலகுகிறது.
ஸ்ரீதியாகராஜருடைய “நௌகா சரித்திர’த்தில் உள்ள ஒரு காட்சி இது.
“கண்ணன் என் காதலனு’ம் வித்தியாசமான கோணம்தான்! பொதுவாக, ராதைதான் கண்ணனைப் பிரிந்து ஏக்கத்துடன் அழுது துடிப்பாள். “ஸ்ரீகிருஷ்ண வைபவத்திலோ’ கண்ணன்தான் ராதையின் நினைவில் கசிந்து உருகுகிறான்.
“விரகதாபமடி... விறகாய் வேகுதடி! கண்மணி ராதா, உன் பொன்மலர் பாதத்தை என் மார்பினில் வைத்து விடு’ என்று அரற்றுவது புதிய அனுபவம்!
“இந்த நாட்டிய நாடகத்தைப் பொறுத்துவரை, மகாகவி பாரதியின் “கண்ணன் பாட்டு’ தான் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் கண்ணனை சேவகனாய், காதலனாய், சத்குருவாய், தோழனாய் புனைந்து, இதுவரை மேடையில் புழங்காத கதைகளுடன் படைக்க நினைத்தேன். குல்தீப் எம்.பய் இசையமைக்க, பத்மதேவன் என்ற இளைஞர் பாடல்கள் எழுத, “ஸ்ரீதேவி நிருத்யாலயா’ வழங்க, கண்ணன் விஸ்வரூபம் எடுத்து அனைவரையும் மயக்கி விட்டான்’ என்று இன்னும் கண்ணனின் மோகன பிரமையிலிருந்து நீங்காமலேயே நெகிழ்நதார் ஷீலா உன்னிகிருஷ்ணன்.
- வாணிஸ்ரீ
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.