சில வாரங்களுக்கு முன்பு 70 வயதுள்ள முதியவர் ஒருவர், என் கிளினிக்குக்கு வந்தார். தான் கொண்டு வந்த மூன்று கனத்த ஃபைல்களையும், அவர் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கொண்ட இரண்டு பெரிய டப்பாக்களையும் எனது டேபிள் மேல் வைத்து விட்டு மிக்க சோர்வாக, “டாக்டர் எனக்கு இலேசாக சர்க்கரை நோய், பிரஷர் மற்றும் மாரடைப்பும் உள்ளன. எல்லாமே கட்டுக்குள் உள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு 18 மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன். இதை ஆயுள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். எனக்கு வாழ்க்கையே சலித்துப் போய் விட்டது. இத்தனை மருந்துகளைச் சாப்பிட்டு உயிரோடு நான் வாழ வேண்டுமா, இதைக் குறைப்பதற்கு ஏதாவது வழி உண்டா?’ என்றார். அவர் பேச்சிலும் சிறிது நியாயம் இருக்கிறது. முதுமையில் பலருக்கு, நோயை விட அதற்குச் சாப்பிடும் மருந்துகளினாலேயே உடல்நலம் கெடுகிறது. தற்பொழுது முதியவர்கள் உணவுக்கு அடுத்தபடியாக அதிகமாக எடுத்துக் கொள்வது பலவிதமான மருந்துகளைத்தான். சில சமயங்களில் உணவை விட மருந்துகளின் அளவு அதிகமாகக் கூட இருக்கும். இது எதனால்? மருந்துகளின் அளவைக் குறைப்பது எப்படி? முதுமையை “நோய்களின் மேய்ச்சல் காடு’ என்பார்கள். அது ஓரளவுக்கு உண்மையே. அதற்குண்டான காரணங்கள் இதோ, முதுமையின் விளைவு: கண் பார்வை குறைதல், காது கேளாமை, கைகளில் நடுக்கம், மலச்சிக்கல், உடல் அரிப்பு போன்றவை. நடுத்தர வயதில் ஆரம்பிக்கும் தொல்லைகள் முதுமையிலும் நீடிப்பது: உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு, மூட்டுவலி போன்றவை. முதுமைக்கென்றே உண்டாகும் தொல்லைகள்: மறதி நோய், பார்க்கின்ஸ்சன்ஸ் நோய், எலும்பு பலவீனம் அடைதல் மற்றும் சிறுநீர்க் கசிவு போன்றவை. குடும்ப டாக்டர் முறை அறவே ஒழிந்துவிட்டது: இப்போதெல்லாம் நோயாளிகள் தங்களுடைய தொல்லைகளுக்கு ஏற்ப டாக்கடர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணம்: தலைவலி என்றால் நரம்பு சிகிச்சை நிபுணர், வயிற்று உபாதைக்கு வயிறு, குடல்சார்ந்த டாக்டர், உடல் வலிக்கு எலும்பு சிகிச்சை நிபுணர் ஆகியோர். அவை அனைத்தும் தேவையற்றவையே. உடலில் எவ்வித தொல்லைகள் வந்தாலும் முதலில் அணுக வேண்டியது குடும்ப டாக்டர் அல்லது நோயாளியை சில காலம் தெரிந்த டாக்டர். சிறு சிறு தொல்லைகளுக்கு அவரே சிகிச்சை அளித்து விடுவார். தேவைப்பட்டால் மட்டும் அவரே தேவையான சிறப்பு மருத்துவரிடம் அனுப்பி வைப்பார். அடிக்கடி சிறப்பு மருத்துவரை பார்ப்பதால் சில நன்மைகளுக்கிடையே பலவித தொல்லைகளும் ஏற்படலாம். சிறப்பு மருத்துவர் அத்துறை சம்பந்தப்பட்ட தொல்லைகளுக்கு மட்டுமே (உதாரணம்: மாரடைப்பு, பக்கவாதம்) மருந்து எழுதுவார். தன்னிடம் வரும் முதியவர் வேறு என்னென்ன தொல்லைகளுக்கு என்னென்ன மருந்துகள் எடுத்து கொள்கிறார் என்பதை கேட்கவோ, பார்க்கவோ, அவருக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம். ஆகையால் மருந்துகளின் எண்ணிக்கை கூடுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். என்னிடம் வரும் முதியவர்கள் குறைந்தது 3-5 ஃபைல்களுடன் வருகிறார்கள். அதை முழுமையாகப் பார்த்த போது அவர்கள் பலவித மருந்துகள் எடுத்துக் கொள்வது தெரிய வருகிறது. இதனால் முதியர்களுக்கு கீழ்காணும் தொல்லைகள் ஏற்பட வாயப்புண்டாகிறது. பல மருந்துகளின் சுமை: பல மருந்துகள் எடுத்துக் கொள்வதால் அதனால் பக்கவிளைவுகள் வர வாய்ப்பு அதிகமாகிறது. இவற்றால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம்.
நிதிச் சுமை:
பல மருந்துகளை வாங்கும்போது அதனுடைய விலையும் அதிகமாகி, நிதிச்சுமை ஏற்படுகிறது. பணப்பற்றாக்குறையால் பலரால் தொடர் சிகிச்சையும் செய்து கொள்ள முடிவதில்லை.
மனச்சுமை:
முதுமையில் சற்று மறதியும் இருக்கும். நினைவில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் சிரமம். மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடும் போது தனக்கு ஏதோ தீராத வியாதி இருப்பதாக எண்ணிக் கொண்டு ஒருவித பயத்துடனேயே முதியவர்கள் வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மாத்திரை என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஒருசில நோய்களை மருந்து இல்லாமலேயே குணமாக்க முடியும். உதாரணம்: சத்துணவுக் குறைவால் அவதிப்படுகிறவர்களுக்கு நல்ல சத்தான உணவைக் கொடுக்கலாம். முழங்கால் மூட்டுவலியால் பாதிக்கப்படுபவர்கள் எடையை குறைத்து, மூட்டுகளுக்கு சிறப்பு பயிற்சி செய்தால் வலி குறையும். மலச்சிக்கலைத் தவிர்க்க தினமும் உடற்பயிற்சி செய்யலாம். அதிகமாக நீர் அருந்துவடுன், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கும். உணவில் உப்பைக் குறைத்து, தவறாமல் உடற்பயிற்சி செய்தால் உயர் ரத்த அழுத்தம் குறையும். நீரிழிவு நோயைக் உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
பலவித மருந்துகளைத் தவிர்ப்பது எப்படி?
முதியோர் மருத்துவரால் ஓரளவுக்கு உதவ முடியும். அவர், முதலில் முதியவரை முழுமையாகப் பரிசோதனை செய்து அவருக்குண்டான தொல்லைகளை ஒரு பட்டியலிட்டுக் கொள்வார். முதலில் உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டிய நோய்களுக்கு (உதாரணம்: மாரடைப்பு, அதிக காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், மனக் குழப்பம்) சிகிச்சையளிப்பதில் முன்னுரிமை கொடுப்பார். நாள்பட்ட தொல்லைகளான மலச்சிக்கல், உடலில் வலி நரம்புத் தளர்ச்சி, முன்பு ஏற்பட்ட எலும்பு முறிவு மற்றும் செய்து கொண்ட அறுவை சிகிச்சை போன்ற தொல்லைகளுக்கு அடுத்ததாக சிகிச்சையளிப்பார். இதனால் ஒரே சமயத்தில் பலவித மருந்துகளை எடுத்துக் கொள்வதை வெகுவாகக் குறைக்க முடியும்.
டாக்டரின் பங்கு:
மருந்து எழுதுவதற்கு முன்பு நோயாளி தற்பொழுது எடுத்துக் கொள்ளும் மருந்தின் விவரத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு மருந்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். சிறப்பு மருத்துவர் மிகவும் “அவசியம்’ என்றால் மட்டுமே மாத்திரையை எழுத வேண்டும். எப்பொழுதும் எடுத்துக் கொள்ளும் மருந்தை குடும்ப டாக்டர் கவனித்துக் கொள்வார். மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்தைக் கூட்டவோ, குறைக்கவோ அல்லது நிறுத்தவோ கூடாது என்று நோயாளியை எச்சரிக்க வேண்டும்.
முதியவர்களின் பங்கு:
புதியதாக ஒரு மருந்தை எடுத்துக் கொள்ளும் போது தொல்லை சற்று அதிகமானால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். டாக்டர் மருந்து எழுதுவதற்கு முன்பாகவே அலர்ஜி ஏதாவது உண்டா என்று நோயாளி தெரிவிக்க வேண்டும். அடிக்கடி டாக்டரை மாற்றிக் கொள்ள வேண்டாம். இதனால் பலவித மருந்துகளை எடுத்துக் கொள்ள நேரிடும். மருந்துக் கடையில் மருந்து வாங்கும் சுயசிகிச்சை முறையையும் தவிர்க்கவும். ஒரு நோயைச் சரியாகக் கண்டறிந்து விட்டால் அதற்கு பலவித மருந்துகளை விட அதற்குண்டான ஒரே மருந்தே மிகவும் நல்ல பலனைத் தரும்.
- பத்மஸ்ரீ டாக்டர். வி.எஸ். நடராஜன், மூப்பியல் மருத்துவர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.