பிறவிக் குறைபாடு ஒருபுறமிருக்க, பொருளாதாரம் அல்லது அன்பில் தட்டுப்பாடு அனுபவித்த குடும்பத்தில் பிறந்தவர்களுக்காக சென்னை கொளத்தூரில் “சமர்ப்பணா’ என்ற இல்லம் நடத்தும் பவானி ஸ்ரீதர் தம்பதியை உங்களுக்கு அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
“நானும் என் கணவர் ஸ்ரீதரும் சந்தித்தது பொதுச்சேவையில்தான். காதலர்களாக இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சென்றது ராமகிருஷ்ணா மடம், “உதவும் கரங்கள்’ போன்ற சேவை இடங்கள். எங்கள் திருமணத்துக்குப் பிறகு டாக்டர். நஞ்சுண்ட ராவ் தலைமையில் 1989ல் சமர்ப்பணா என்ற இல்லத்தைத் துவங்கினோம். மூளை வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு சில வீடுகளில் போதிய அன்பும் ஆதரவும் கிடைக்காததையும், பணவசதி இல்லாத வயதான பெற்றோர் இவர்களைப் பார்த்துக் கொள்ள முடியாமல் தவித்ததையும் பார்த்து இந்த இல்லத்தைத் துவங்கினோம்.
பரம்பரையில் குறைபாடு, கர்ப்பக் காலத்தில் மருத்துவ ஆலோசனையின்றி, அதிகமான மருந்துகள் அல்லது போதை மருந்துகள் உட்கொள்ளுதல், பிரசவத்தின் போது பிரச்னை போன்ற சில காரணங்களால் பிறப்பில் மூளை வளர்ச்சி பாதிக்கிறது. அறிவுதிறன் குறைவாக இருந்த போதிலும், அவரவர் நிலைமைக்கேற்ப கல்வி புகட்டுவதோடு, அவர்களது பிர திறன்களை வளர்த்து வாழ வைக்க முடியும் என்பது நற்செய்தி.
சிறுவர்களின் மூளைத் திறனோடு நடமாடும் முப்பது வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தான் எங்களிடம் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தங்கள் காலத்துக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற தெம்பை பெற்றோருக்குக் கொடுப்பது எங்கள் நோக்கம். இது தவிர, தொலைந்து போய் காவல் நிலையம் மூலமாக வருபவர்களும், வெளியில் கூட்டிக் கொண்டு போய் வேண்டுமென்றே தொலைக்கப்பட்டவர்களும் உண்டு. தெருவில் நிற்கும் இவர்கள், தவறான நோக்கம் கொண்டர்களால் சீரழியாமல் இருக்க எங்களாலான பணியாக இதைச் செய்கிறோம்.
இவர்களுடைய நலத்துக்கும், பாதுகாப்புக்கும் நாங்கள் பொறுப்பென்பதால், கவனமாக இருக்கிறோம். அவர்களுக்கு ஆரோக்கியமாக வயிறார உணவு, கஞ்சி, கீரை, மோர் என்று தேவைக்கேற்ப சத்துணவு வழங்குவதோடு, நல்லோர் உதவியால் பல நாட்கள் விருந்து சாப்பாடு போடமுடிகிறது.
என்னதான் நாங்கள் கவனித்துக் கொண்டாலும், ஒருவருக்கு முதல் பாதுகாப்பு குடும்பம்தான். அவர்களது குடும்பத்திலும் சவால்கள் இருக்கின்றன - மூளை வளர்ச்சிக் குன்றியவர் இருந்தால் அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. பார்த்துக் கொள்ள எப்போதும் ஆள் தேவைப்படுகிறது. அக்கம் பக்கத்துக்காரர்கள் வெறித்துப் பார்த்து ஒதுக்குகிறார்கள்; குழந்தைகள் பரிகாசம் செய்கிறார்கள் - இப்படி. இருந்தும், தாய்தான் ஒரு குழந்தைக்கு முதல் ஆதரவு. வீட்டில் கிடைக்கும் தனிப்பட்ட அன்பும், அரவணைப்பும் அவர்களை பண்படுத்தும். அது முடியாதபோது, நாங்களெல்லாம் இருக்கவே இருக்கிறோம். எங்கள் பார்வையில் பட்ட ஆதரவற்ற யாரையும் அப்படியே விடமாட்டோம்.
பிரபு ஒரு வாரக் குழந்தையாக எங்களிடம் சேர்ந்தான். அவனுக்கு மூளை வளர்ச்சி குறைவு. இப்போது எட்டு வயது சிறுவனான அவன், மழலை மாறாமல் ஸ்லோகங்களும், பக்தி பாடல்களும் பாடும் அழகில், இறைவனின் குழந்தையாகத்தான் பார்க்கிறோம். (நான் சென்றபோது குறையொன்றுமில்லை என்று பாட ஆரம்பித்து, தொடர்ந்து ஸ்லோகங்கள் பொழிந்து தள்ளினான் - உஷா).
கண் தெரியாத பெரியவர் ஒருவருக்கு, மூளை வளர்ச்சி குன்றிய மகன். அவனை எப்பாடுபட்டாவது நானே வளர்க்க வேண்டும் என்று அவர் வைராகியத்துடன் இருந்தார். ஆனால், அந்தச் சிறுவன் வளர, வளர, பொல்லாதவர்கள் அவனைப் பிச்சை எடுக்க வைத்து, காசைப் பிடுங்கிச் செல்லத் தொடங்கினர். அதனால் வேறு வழியில்லாமல் எங்களிடம் சேர்க்கச் சம்மதித்தார்.
சேலத்தில் மற்றுமொரு பணக்காரக் குடும்பத்தில், ஒரு மகளும், மூளை பாதிக்கப்பட்ட மகனும் இருந்தனர். 15 வருடங்களுக்கு முன் அந்தப் பெற்றோர் எங்களிடம் வந்து, பெண்ணின் திருமணம் நடக்கும் வரை மகனை சில நாட்கள் வைத்துக் கொள்ளும்படி விட்டுச் சென்றனர். அவர்கள் திரும்ப வரவேயில்லை. சில மாதங்களிலேயே வீட்டைக் காலி செய்து விட்டனர். மகனை வைத்துக் கொள்ளவிருப்பமில்லாமல், இப்படி நாடகமாடி எங்களிடம் விட்டுச் சென்ற பெற்றோர் மீது கோபம் வந்தாலும், இந்தப் பையன் என்ன தப்பு செய்தான் என்று நினைத்து அவனைக் காப்பாற்றி வருகிறோம். இவர்களுக்கெல்லாம் நல்ல சூழ்நிலை அமைத்துத் தருவது மனநிலைவைத் தருகிறது.
“சமர்ப்பணா’ தொடங்கும்போது எங்கள் மகன் நரேந்த்ரனுக்கு ஒரு வயது. இங்கேயே வளர்ந்து இன்று பி.காம் படிக்கிறான். இவ்வளவு பெரிய குடும்பமாகப் பழகிவிட்டதால், இரண்டு மூன்று பேர் இருக்கும் வீடுகளுக்குப் போனால், “அவங்களுக்கு போரடிக்காதா?’ என்று கேட்பான். இப்போது இன்னும் சில நார்மலான ஏழ்மை நிலைக் குழந்தைகளையும் வைத்துப் படிக்க வைக்கிறோம். நாளை என் மகனும், இவர்களைப் போன்றவர்களும் சேர்ந்து இந்தப் பணியைத் தொடர்வார்கள் என்று நம்புகிறோம்.’
உஷா ராமகிருஷ்ணன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.