இதுவரை: பலபேரை உயிர்பலி வாங்கிய முரட்டுக்காளை அடக்கப் போராடினான் ஹெர்குலிஸ். இனி-
இந்தப் போராட்டம் ஒருநாள் முழுவதும் நீடித்தது. நேரமாக, நேரமாக அந்த மாடு களைப்பு அடைந்தது. வாய் முழுவதும் நுரை வெளியே வர பெருமூச்சு விட்டது. மாவீரனான அவனைத் தன்னால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்தது. அதன் வெறி சிறிது, சிறிதாக அடங்கி அமைதியானது. முரட்டுக் காளையை ஹெர்குலிஸ் அடக்கிவிட்டான் என்ற செய்தி நகரம் முழுவதும் பரவியது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதித்தனர்.
ஆட்டுக் குட்டி போல, அந்தக் காளை மாடு அவன் பின்னால் வந்தது. அதைக் கப்பலில் ஏற்றினான் ஹெர்குலிஸ். கப்பல் மைசின் நகரத்தை அடைந்தது. அந்தக் காளை மாட்டை இழுத்துக் கொண்டு, அரசவையை அடைந்தான்.
யுரிஸ்தியசைப் பார்த்து, ""நீ சொன்னது போல கிரிட் நாட்டுக் காளை மாட்டை அடக்கி, அழைத்து வந்துள்ளேன். நீ எனக்கு வைக்கும் எட்டாவது சோதனை என்ன?'' என்று கேட்டான் ஹெர்குலிஸ்.
ஏற்கனவே, சிந்தித்து வைத்திருந்த யுரிஸ்தியசு, ""திரேசு நாட்டு அரசனிடம் முரட்டுப் பெண் குதிரைகள் நான்கு உள்ளன... அவற்றைப் பிடித்து இழுத்து வா,'' என்றான். அங்கிருந்து புறப்பட்டான் ஹெர்குலிஸ். அந்தக் குதிரைகள் எப்படிப்பட்டவை என்று விசாரித்தான். அவனுக்கு அதிர்ச்சியான செய்திகளே கிடைத்தன.
""திரேசு நாட்டை ஆளும் அரசன் தியோமதி கொடுங்கோலன். பிறரைக் கொடுமைப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைந்தான். அவனிடம் முரட்டுப் பெண் குதிரைகள் நான்கு இருந்தன. மனித இறைச்சியை உண்ணுமாறு அவற்றைப் பழக்கப்படுத்தி இருந்தான். கப்பல் உடைந்து கரை ஒதுங்குபவர்கள், தன்னைத் தேடி வரும் வெளிநாட்டவர்கள். இவர்களைச் சிறிதும் இரக்கமின்றி, அந்தக் குதிரைகளின் முன் தள்ளி விடுவான்.
மூர்க்கம் கொண்ட குதிரைகளோ அவர்களை மிதித்துத் துவைக்கும். அவர்கள் வேதனை தாங்காமல் துடிப்பார்கள். அவர்கள் உடலை அவை பிய்த்துத் தின்னும். இந்தக் கொடுமையை வேடிக்கை பார்த்து மகிழ்வான் அவன் என்று கேள்விப்பட்டான் ஹெர்குலிஸ்.''
"குதிரைகளைப் பிடித்து வருவதுடன் நிற்கக் கூடாது அந்தக் கொடுங்கோலனையும் கொல்ல வேண்டும். அந்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்' என்று முடிவு செய்தான். தனக்குத் துணையாக வீர இளைஞர்கள் சிலரை அழைத்துக் கொண்டான்.
பல நாட்கள் கப்பலில் அவர்கள் பயணம் செய்தனர். திரேசு நாட்டை அடைந்தனர். முரட்டுக் குதிரைகள் நான்கும் எங்கே உள்ளன என்று அவர்கள் விசாரித்தனர்.
அவை நான்கும் சங்கிலியால் கட்டப்பட்டு கோட்டைக்குள் பாதுகாப்பாக உள்ளன என்பதைத் தெரிந்து கொண்டனர். ""வீரர்களே! நாம் அந்தக் கோட்டைக்குள் நுழைந்து குதிரைகளை இழுத்து வருவோம்,'' என்றான் ஹெர்குலிஸ். அதன்படியே அவர்கள் அனைவரும் கோட்டைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த காவல் வீரர்களுடன் போர் செய்தனர். இவர்களை எதிர்க்க முடியாத காவல் வீரர்கள் அங்கிருந்து ஓடி ஒளிந்தனர்.
அதன் பிறகு ஹெர்குலிசும், தோழர்களும் குதிரைகள் இருந்த இடத்தை அடைந்தனர். அந்தக் குதிரைகள் நான்கும் கொழு கொழுவென்று காட்சி தந்தன. வலிமையான சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தன. அவர்களைப் பார்த்ததும் பயங்கரமாகக் கனைத்தபடி கால்களால் படபடவென்று நிலத்தில் உதைத்தன. ஹெர்குலிசுடன் வந்த வீரர்கள் அவற்றின் சங்கிலிகளை அறுத்து எறிந்தனர்.
விடுதலை பெற்ற அவை நல்ல உணவு கிடைத்தது என்று அவர்கள் மீது பாய்ந்தன. உடனே அவர்கள் தங்கள் கையிலிருந்த கதைகளால் குதிரைகளை அடித்தனர். உடனே அவை பின்னால் சென்றன. பயங்கரமாகக் கனைத்தபடி மீண்டும் அவர்கள் மீது பாய்ந்தன. அவர்கள் அவற்றை மீண்டும் கதைகளால் அடித்தனர். கோபத்துடன் பற்களால் அவர்களைக் கடிக்க முயன்றன.
குதிரைகள் பாய்வதும், கதைகளால் தாக்கப்பட்டுப் பின்வாங்குவதுமாகப் போராட்டம் நடந்தது. சிறிது நேரத்தில் அவற்றின் ஆரவாரம் அடங்கியது. பெருமூச்சு விட்டபடியே அவை அடங்கின. அவற்றை இழுத்துக் கொண்டு கோட்டைக்கு வெளியே வந்தனர்.
அரசனிடம் ஓடி வந்த வீரர்கள், ""உங்கள் குதிரைகளைச் சிலர் இழுத்துச் செல்கின்றனர். எங்களால் அவர்களைத் தடுக்க முடிய வில்லை,'' என்றனர். கோபம் கொண்ட அவன், ""நான் யார் என்பது தெரியாமல் என்னிடம் விளையாடு கின்றனர். அவர்கள் அனைவரையும் என் குதிரைகளுக்கு உணவு ஆக்குகிறேன். வீரர்களே! என்னுடன் புறப்படுங்கள்!'' என்று கத்தினான்.
ஏராளமான வீரர்களுடன் சென்ற அவன் ஹெர்குலிசையும், வீரர்களையும் சூழ்ந்து கொண்டான். மாவீரனான ஹெர்குலிஸோ அவன் வீரர்கள் அனைவரையும் விரட்டி அடித்தான். என்ன செய்வது என்று அறியாமல் திகைத்த தியோமிதியைக் கட்டிப் போட்டான். அரசன் கட்டப்பட்டுக் கிடக்கும் செய்தியை நகர மக்கள் அறிந்தனர். கூட்டமாக அங்கே வந்தனர்.
அவர்களைப் பார்த்து ஹெர்குலிஸ், ""மக்களே! கொடுங்கோலனான இவனை எப்படிப் பொறுத்துக் கொண்டீர்கள்? புல் தின்னும் குதிரைகள் இவை. இவற்றை மனித இறைச்சியைத் தின்னும் குதிரைகளாக மாற்றி விட்டான்.
அப்படி அவை மனிதர்களைக் கொன்று தின்பதை வேடிக்கை பார்த்து உள்ளான். எத்தனையோ பேரைக் குதிரைகளுக்கு உணவாக்கி உள்ளான். கொடூர உள்ளம் கொண்ட இவனுக்கு இரக்கம் காட்ட வேண்டுமா? நீங்களே சொல்லுங்கள்,'' என்று கேட்டான்.
எல்லாரும் அமைதியாக இருந்தனர். ஹெர்குலிசின் தோழர்கள் தியோமிதியின் கட்டை அவிழ்த்தனர். அவனை அந்தக் குதிரைகளின் முன் தள்ளினர்.
பசியுடன் இருந்த குதிரைகள் நான்கும் அவனைப் பார்த்து பயங்கரமாக கனைத்தன. சுற்றிச் சுற்றி வந்து அவனை மிதித்தன. வேதனையால் துடித்தான். அவன் உடலைப் பிய்த்துத் தின்றன. இந்தக் கொடுமையான காட்சியை பார்த்து ஹெர்குலிசும், தோழர்களும் திகைத்து நின்றனர்.
குதிரைகளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அரசன் யுரிஸ்தியுசு முன் அவற்றை நிறுத்தினான் ஹெர்குலிஸ். வீரர்கள் பாதுகாப்புடன் குதிரைகளைப் பார்த்தான் யுரிஸ்தியசு. அவனை வெறுப்புடன் பார்த்த ஹெர்குலிஸ், ""இந்தக் கொடிய விலங்குகளை ஏன் கொண்டு வரச் சொன்னாய்? கொன்று விட்டு வா,'' என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.
""இயற்கைக்கு மாறான இவை உயிருடன் இருக்கக் கூடாது. இவற்றை ஒலிம்பிய மலையில் விட்டுவிடு. அங்குள்ள சிங்கம், புலிகளுக்கு இவை உணவு ஆகட்டும்,'' என்றான். அதன்படியே யுரிஸ்தியசு, ""வீரர்களே! இந்தக் குதிரைகளை ஒலிம்பிய மலையில் விட்டு விட்டு வாருங்கள்,'' என்று கட்டளையிட்டான். அவர்களும் அப்படியே செய்தனர்.
""நீ எனக்கு வைத்திருக்கும் ஒன்பதாவது சோதனை என்ன?'' என்று கடுப்புடன் கேட்டான் ஹெர்குலிஸ்.
"பலமுறை நீ உயிர் தப்பிவிட்டாய். இந்தச் சோதனையில் உன்னால் உயிர் தப்ப முடியாது' என்று உள்ளுக்குள் நினைத்தான் யுரிஸ்தியசு.
இனிய குரலில் அவன், ""மாவீரன் ஹெர்குலிஸே! அமேசான் அரசியின் வைர ஒட்டியாணத்தை நீ கொண்டு வர வேண்டும்,'' என்றான். இப்படிப்பட்ட சோதனையை எதிர்பாராத ஹெர்குலிஸ் திகைத்தான். அமேசான் அரசியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த செய்திகள் அவன் நினைவுக்கு வந்தன.
- தொடரும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.