குரு காரைக்குடி மணியின் சுருதி லயகேந்த்ரா, மிக எளிமையான முறையில் தங்களது 25வது ஆண்டு குளிர்கால இசை விழாவை நடத்தியது. ஒவ்வொரு ஆண்டும் மிக வித்தியாசமான முறையில், எந்த வித ஆர்ப்பாட்டமும், இன்றி, விழாவை தன் குரு சுராஜானந்தாவிற்காக எடுப்பது மணியின் தனிப் பாணி. இவ்வாண்டு முதல் நிகழ்ச்சியாக, முற்றிலும் புதுமையாக, மற்ற சபாக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக, தனி ஆவர்த்தன கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தார். இரட்டை மிருதங்கம் பாலக்காடு மணி ஐயரின் புதல்வர் பாலக்காடு டி.ஆர்.ராஜாமணி மற்றும் அவரது சீடர் வி.கமலாகர்ராவ் இருவரும் லயப்ரிய ரசிகர்களுக்கு மிக அருமையான கச்சேரியை வழங்கினர்.
இதைக் கேட்க, இன்றைய இளம் மிருதங்க வித்துவான்கள் முதல் முன்னணி மிருதங்க வித்வான்கள் வரை, ஒரு பெரிய லய கூட்டம் திரண்டது. அவரவர்கள், கச்சேரி முடியும் வரை மிக ஆழ்ந்து தாளம் போட்டு கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். மேலும் பலருக்கு தாளம் எனப்படும் லயத்தை எப்படி ரசிக்க வேண்டும்; பாட்டுடன் மிருதங்கம் மற்றும் உப பக்கவாத்தியங்கள் எப்படி சேருகின்றன. தனி ஆவர்த்தனம் என்றால் என்ன என்பதையெல்லாம் முறைப்படி தெரிந்து கொள்ள முற்படுவதில்லை. மேம்போக்காக ரசித்தால் அது புரியாது.
மேலும் இசைக்கலையை பயிலும்போது, முன் காலத்தில் தனி ஆவர்த்தனத்தின் போது, சேர்ந்து தாளம் போட்டு பழகச் சொல்வது உண்டு. அப்போது தான் தாளகட்டு நிற்கும். ஆனால், இன்று அப்படி இல்லை. மிருதங்கம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் கூட, கச்சேரிகளை அதிகம் கேட்பதில்லை. அவர்களுடைய குருவின் கச்சேரி அல்லது தெரிந்தவர்களின் கச்சேரிகளை மட்டும் கேட்கின்றனர். அதுவும் குறைந்த எண்ணிக்கையில் தான்.
ஆனால், குரு காரைக்குடி மணி மற்றும் திருவாரூர் பக்தவத்சலம் போன்றோர் ஆண்டுதோறும் தாளவாத்ய கச்சேரிகள் நடத்துகின்றனர். குறிப்பாக மணி, வயதில் மூத்த கலைஞர்களை கொண்டு நிகழ்ச்சிகளை கொடுப்பதால், நிறைய தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இவ்வாண்டு துவக்க லயவாத்ய கச்சேரி முடிந்தவுடன், சுருதிலய கேந்த்ராவின் இவ்வாண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
வரவேற்புரையில் மணி, பாட்டுக்கு லயம் முக்கியம். லயமில்லாமல் பாட்டில்லை. பாட்டுக்கு எப்படி ராகம், நிரவல், ஸ்வரம் முக்கியமோ அதைப்போல் லயத்திலேயும் அத்தனை அலங்காரங்கள் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டினார்.
குரு சுராஜானந்தா விருதை, நாடக நடிகர் கூத்தபிரானுக்கும், கவுரி மனோகரி விருதை, குரலிசையாளர் டி.வி.சங்கரநாராயணனுக்கும், கோபாலகிருஷ்ண காந்தியால் (தலைவர் கலாஷேத்ரா மற்றும் முன்னாள் கவர்னர் மேற்கு வங்கம்) வழங்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடநரசிம்மன் நினைவுப் பரிசு, ஜே. ஸ்ரீராமுக்கு வழங்கப்பட்டது.
கோபால கிருஷ்ண காந்தி பேசுகையில்," நம் இந்திய நாட்டின் கலை மற்றும் கலாசாரம் குறிப்பாக, தமிழகத்தில் சென்னையை போன்று உலகில், எங்கும் இம்மாதிரி இசைக்காக விழா எடுப்பதில்லை' என்பதை பூரிப்புடன் சொன்னார். மேலும் விருது பெற்ற வானொலி அண்ணா மற்றும் நாடக நடிகர் கூத்தபிரான், 83, ஆகியோரைப் பாராட்டினார்.
கூத்தபிரான் 5,000 மேடை நாடக அனுபவம் கொண்டவர். 25 மேடை நாடகங்களை எழுதியவர். அதிலும், நமது கூட்டுக்குடும்பச்சிறப்பு, தேசபக்தி ஒருமைப்பாடு, சிறுவர்களுக்கான நன்னெறி ஆகியவற்றை முன்னிறுத்தி எழுதிய நாடகங்கள் பலரால் பாராட்டப்பட்டவை என்பதும் குறிப்பிடப்பட்டது. டி.வி.சங்கநாராயணன் பற்றி குரு மணி பேசும் போது, அவரது குரலின் பெருமையைப் பேசினார். அது அவரது குரு, மதுரை மணி அய்யரின் ஆசிர்வாதம் என்றும் குறிப்பிட்டார்.
-ரசிகப்ரியா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.