இது ஒரு புதிய பகுதி குட்டீஸ்.... இவை உலகில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. நமது புராண காலம் முதல் இன்றைய கால கட்டம் வரை ஒற்று-உளவு-சதிகள் நடைபெற்று வருகிறது. இதில், நடந்த உண்மைச் சம்பவங்களை உங்களுக்குத் தருகிறோம்... படித்து என்ஜாய் பண்ணுங்க குட்டீஸ்!
"பிரடரிக் பாரன்வான் டர்டிரங்க்' என்ற இளைஞனுக்குப் பதினெட்டு வயது. ராணுவத்தில் ஆபிசர் பதவி. பிரஷ்யாவின் பிரடரிக் மன்னருக்குப் பாதுகாவலனாகப் பணியாற்றினான். அரசரின் சகோதரியோடு ஏற்பட்ட காதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்குள் தள்ளப்பட்டான்.
சின்ன வயசு. இளமை வேகத்தில் செய்த தவறுக்கு எத்தனை கொடிய தண்டனை? வான் டர்டிரங்க் விதியே என்று முடங்கிக் கிடக்க வில்லை. சிறைக் காவலாளியைச் சரிக்கட்டி, 1746ல் சிறையிலிருந்து தப்பி, ஆஸ்திரியாவுக்குப் போய், அங்கு ராணுவத்தில் சேர்ந்து விட்டான். 1754ல் மறுபடி பிரஷ்யாவுக்கு வந்ததும் அவனை "லபக்கென்று' பிடித்துக் கொண்டனர். மீண்டும் கைது செய்து அவனை இம்முறை மாக்டபர்க்கிலுள்ள கோட்டையின் பாதாளச் சிறையில் பூட்டிவிட்டனர்.
கோட்டையின் பாதாளச் சிறையில் ஒரு பெரிய கல்தூணில் பொருத்தப்பட்ட மூன்று சங்கிலிகளில் ஒன்று அவன் கழுத்தைச் சுற்றிப் போடப்பட்ட இரும்புப் பட்டைகளோடும் இணைக்கப்பட்டன. முதன் முறை சிறையிலிருந்து தப்பியோடியதற்காக இப்படிப்பட்ட கடுமையான ஏற்பாடுகள். இந்த நிலையிலும் வான் டர்டிரங்க் நம்பிக்கை இழக்கவில்லை.
"பாதாளச் சிறையிலிருந்தும் தப்பி விடவேண்டும்' என்று உறுதி பூண்டான். பைத்தியம் பிடித்தவன் போல நடித்தான். காவல்காரர்கள் அவன் அறைக்குள் வரும் போதெல்லாம் அவர்களை நோக்கி ஓடிப் பாய்வான்; தன் தலைமுடியையும், தாடியையும் பிய்த்துக் கொண்டு கூச்சலிடுவான்.
இப்படி ஐந்து ஆண்டுகள் சித்த ஸ்வாதீன மில்லாதவனாக நடித்ததற்குப் பலன் இல்லாமல் போகவில்லை. கோட்டைச் சிறை அதிகாரி, அவனுக்கு நிஜமாகவே பைத்தியம் பிடித்து விட்டது என்று கருதி, அவனுடைய கழுத்து, கைகளின் சங்கிலிப் பிணைப்புகளை அகற்றும்படி செய்தார். சங்கிலிகள் அகற்றப்பட்டதும் டர்டிரங்க், சிறையிலிருந்து தப்பிச்செல்லத் திட்டமிடலானான்.
பாதாளச் சிறையில் தன் அறையிலிருந்து மேல்நோக்கி ஒரு சுரங்கப் பாதையை உருவாக்கி, கோட்டைக்கு வெளியே போய்த் தப்பிவிடுவதென்று திட்டமிட்டான். இதைச் சாதிக்க அவனிடமிருந்த ஆயுதமோ, நீர் அருந்துவதற்காகத் தரப்பட்டுள்ள ஒரு இரும்புக் குவளை, சிறைக் கதவிலிருந்து மிகுந்த சிரமப்பட்டுப் பெயர்த்தெடுத்த ஓர் ஆணி.
ஆணியின் உதவியினால் தன் சிறை அறையின் சுவர்க்கல் ஒன்றைக் கீறி, நெம்பிப் பெயர்த்தான். இரும்புக் குவளையின் உதவி யால் மண்ணைத் தோண்டி சுரங்கப்பாதை உண்டாக்கலானான். அதிர்ஷ்டம் புறக்கணிக்கப் பட்டு மறந்து விட்ட ஒரு கிணறு, தளவரிசைக் கல்லினால் மூடப்பட்டிருப்பதைக் கண்டான். பிறகென்ன, தான் தோண்டிய மண்ணை யெல்லாம் அந்தப் பாழும் கிணற்றில் கொண்டு போய்க் கொட்டினான்.
குவளை குவளையாக மண்ணை எடுத்துச் சுரங்கப்பாதையை அவன் உடல் நுழையும் அளவுக்கு உருவாக்கிக் கொண்டே போனான்.
ஒரு சமயம் அவன் பின்னால் ஒரு கல் பெயர்த்து விழுந்து சுரங்கப் பாதையை அடைத்துக் கொண்டது. அதை அகற்றித் தன்னை விடுவித்துக் கொள்ளப் பல மணி நேரம் பாடுபட வேண்டி இருந்தது.
சுரங்கம் தோண்டும் வேலை இரவில்தான். பகலில் நல்ல பிள்ளைபோலப் பாதாளச் சிறையில் தன் அறையிலிருப்பான். பைத்தியக்காரனைப் போல நடித்துக் கொண்டு இப்படி 37 அடிச் சுரங்கத்தை உருவாக்க அவனுக்கு ஆறு ஆண்டுகளாயின. விடாமுயற்சி, உயிர் மீது ஆசை, தப்பியோட வேண்டும் என்ற வெறி. வெற்றியின் விளிம்புக்கே போய் விட்டான் வான் டர்டிரங்க்.
சுரங்கத்தின் முடிவை-தரையைப் பெயர்த்துக் கொண்டு வெளியேற வேண்டிய தருணத்தில்-
கோட்டைக் காவலாளியின் கவனத்தை, புல் மூடிய பூமி பிளந்து, மண் சரிந்து விழ, அதிலிருந்து ஒரு மனித உருவம் வெளிப்படுவது தெரிந்து துப்பாக்கி வீறிட்டது. ஆறு ஆண்டுகளாகப் பட்ட பாட்டைக் கை நழுவ விட விரும்பவில்லை வான் டர்டிரங்க். காவலாளியின் தாக்குதலிலிருந்து தப்பி ஓடி, லண்டனுக்குப் போய், ஒயின் வியாபாரம் செய்து சுதந்திர புருஷனாக வாழ்க்கையைத் தொடங்கினான், பைத்தியமாக நடித்து, பிரஷ்ய மன்னரை ஏமாற்றிய பாரன்வான் டர்டிரங்க்!
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.