வாசகர் ஒருவர், "ஆப்கன், நம் பாரத நாட்டின் ஒரு பகுதி தான். அதற்கு இலக்கிய ஆதாரம் உள்ளது...' எனக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம் இதோ —
முற்காலத்தில் பாரதத்தின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் இருந்தது. ஆப்கானிஸ்தானிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தகார் நாட்டு மன்னரின் மகளான காந்தாரியைத்தான் மகாபாரதத்தில் வரும் திருதராட்டிர மன்னர் மணந்தார். தங்கை காந்தாரியுடன் ஹஸ்தினாபுரம் வந்தவன் தான் சகுனி. இவன் செய்த சூழ்ச்சிகளின் காரணமாகத்தான் பாரதப் போரே நடந்தது.
இப்போர் துவங்குவதற்கு முன், மதி மந்திரியும், தம்பி முறையும் உடைய விதுரன், அண்ணன் திருதராட்டிரனுக்கு அறிவுரை கூறினார், "சகுனி அருகில் வைக்க தகுதியுள்ளவன் அல்ல; அவனை அனுப்பி விடுக...' என்றார்.
அறிவுரை ஏற்கப்படவில்லை. அதனால், பாரதப் போர் நடந்து, சகுனியும் அவன் மருமகன்களாகிய துரியோதனனும், அவனின், 99 சகோதரர்களும், பல்லாயிரக்கணக்கான வீரர்களும் மாண்டனர். இதுபோல், ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தகாரில் பதுங்கியிருந்த பின்லேடனின் சூழ்ச்சியால் தான் அங்கு பெரும் போர் துவங்கி நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்தனர் என்று கூறுவதுண்டு.
இப்போர் துவங்குவதற்கு முன், பாகிஸ்தான் அதிபர், ஆப்கானிஸ்தான் அதிபரிடம் தீவிரவாதியான பின்லேடனை நாட்டை விட்டு அனுப்பி விடுமாறு அறிவுரை கூறினார். அதை அவர் ஏற்கவில்லை. விளைவு: பெரும் போர்.
வியாச முனிவர் எழுதிய மகாபாரதத்தில் வரும் சூதாட்டத்தை மையமாக வைத்து பாரதியார் எழுதிய, "பாஞ்சாலி சபதம்' கவிதை நூலில் வரும் கீழே குறிப்பிட்டுள்ள வரிகளை நோக்குக:
(பாடல் 203, வரிகள் 5 முதல் 8 வரை).
திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்
செப்பு மந்தரஞ் சொல்லுவதில் நன்றே!
அருகு வைக்கத் தகுதியுள்ளனோ?
அவனை வெற்புடைப் போக்குதி அண்ணே!
"வெற்புடை போக்குதி' - என்ற பதத்திற்கு, கீழ்க்கண்டவாறு பொருள் விளக்கம் செய்துள்ளார் பாரதியார்...
"வெற்புடை போக்குதி - காந்தாரத்து மலை நாட்டிலிருந்து வந்தவனாதலால், சகுனியை மீண்டும் அவனது மலை நாட்டுக்கு அனுப்பி விடுக...'
அன்றும், இன்றும் ஒரு சில கெட்டவர்களால் நாட்டிற்கு பேரழிவு உண்டாகிறது என்பது தெரிகிறது.
— தூர்தர்ஷனில் ஒரு காலத்தில் ஒளிபரப்பான, "மகாபாரதம்' தொடரில் நடித்த சகுனியின் முகம் நினைவுக்கு வருகிறதா?
***
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் சவாபோ நகரில் வசிக்கும் அன்பர் ஒருவரை அறிமுகம் செய்தார் நண்பர் ஒருவர். அவர் தமிழர்தான், இருந்தாலும், தமிழில் சரளமாகப் பேசத் தெரியவில்லை. அவரது மூதாதையர் டிரினிடாட் டுபாக்கோ என்ற நாட்டுக்கு கரும்பு வெட்டும் தொழிலாளியாக தமிழ்நாட்டில் இருந்து வெள்ளையர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களாம்.
தென் அமெரிக்க நாடுகள் பற்றிய சுவையான பல விஷயங்களைக் கூறினார். ஓட்டல்களில் பண்டங்கள், எடைக்கு ஏற்ப தான் விலையாம்! அதாவது, பொங்கல், வடை, நாலு இட்லி, ஒரு மசால் தோசை சாப்பிடுகிறோம் என்றால், அவற்றை ஒரு தட்டில் வைத்து எடை போட வேண்டும். 500 கிராம் இருந்தால், ஒரு விலை... 650 கிராம் இருந்தால் ஒரு விலையாம்... ஆச்சரியமாக இருந்தது!
"தென் அமெரிக்க நாடுகள் சர்வாதிகார ஆட்சிக்குப் பெயர் பெற்றவை. பத்தாண்டு காலம் சர்வாதிகார ஆட்சி நடத்தி, கோடி, கோடியாய் கொள்ளையடிப்பர்! நாட்டில் எதிர்ப்பு கிளம்பும். உடனே சேர்த்த பணத்துடன், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து விடுவர். இதுதான் காலம் காலமாக இந்த நாடுகளில் நடந்து வருகிறது!' எனக் கூறியவர், சற்று இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
"அப்படிப்பட்ட ஒரு சர்வாதிகாரி தான் மார்கோஸ் பெரஸ். தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டை, 10 ஆண்டுகள் சுரண்டி விட்டு, ஸ்பெயின் நாட்டுக்கு ஓடிப் போனவர் இவர்!
"மற்றொரு தென் அமெரிக்க நாடு பெரு. அதன் ஜனாதிபதியாக இருந்தவர் புஜிமோரி. இவரது பெற்றோர் ஜப்பானியர்கள். பெருவில் குடியேறியவர்கள். புஜிமோரி, பெருவிலேயே பிறந்து, வளர்ந்து ஆட்சியை பிடித்தவர், பெருந்தொகையை சுருட்டிக் கொண்டு இவர் ஜப்பானுக்கே ஓடிப் போனார். இருவரும் சுருட்டியது ஆயிரம் கோடி...' என்றார்.
"ப்பூ... இதென்ன பிரமாதம்? இங்க, ஆயிரம் கோடியெல்லாம் ஸ்டேட் லெவல்லயே முடிச்சிருவோம்! ஆல் இண்டியா லெவல்ன்னா ஆயிரம் கோடிங்கறது ஆறு மாச வசூல்!' என்றேன் அவரிடம்!
***
போலீஸ்காரர்கள் என்றாலே, லஞ்ச - லாவண்யத்தில் உழல்பவர்கள் என்ற, "நல்ல' பெயரை மக்கள் மத்தியில் பெற்று விட்டனர்.
போலீஸ்காரர்கள், "மாமூல்' வாங்குவது பற்றி, பத்திரிகைகளில் ஏராளமாக, "ஜோக்'குகள் வெளியாகின்றன.
ரோடு ஓரம் புல்லட்டில் நிற்கும், "சார்ஜெண்டு'களை கண்டால், "டேய், வசூல்படை, வேட்டையில் இறங்கி விட்டது...' என பொது மக்கள் சாதாரணமாக பேசிக் கொள்ளும் நிலையையும் இன்று காண முடிகிறது.
கவுரவமான உத்தியோகம், கை நிறைய சம்பளம், குடியிருக்க வீடு, குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப்பண்டங்களையும் அரசு வழங்குகிறதே... இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என, நான் எண்ணுவது உண்டு.
என்னுடைய இந்த குழப்பத்திற்கு விடை அளிப்பது போல, சில விஷயங்களை சமீபத்தில் கேட்க முடிந்தது.
நண்பர் ஒருவருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு வேலை முடித்தாக வேண்டும். என்னையும், லென்ஸ் மாமாவையும் உடன் அழைத்தார். நண்பரும், லென்ஸ் மாமாவும் குறிப்பிட்ட செக்ஷனின் கிளார்க்கிடம் பேசிக் கொண்டிருந்தனர். வெளியே, போலீஸ்காரர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் அருகே சென்று, காதை மட்டும் அவர்கள் பேசும் திசையில் திருப்பி, அப்பாவி போல நின்று கொண்டேன்.
"மச்சான், அந்தா வர்றான் பாரு... திருட்டு கம்... மூணு வருஷம் ஆச்சு... அந்தமானுக்கு ஒரு கேஸ் என்குயரிக்கு கூட்டிட்டுப் போனான் எங்களை... போகும்போது தலைக்கு அம்பது ரூபா கொடுத்தாங்க... போய் வந்து, பயணப்படி எழுதிக் குடுத்தோம்... அவன் மட்டும் தன் பயணப்படியை வாங்கிக்கிட்டான்... இன்னும் எங்களுக்கு வந்து சேரலை...' என்றார் ஒரு போலீஸ்காரர்.
அவர், தன் சகாவிடம், "அந்தா வர்றான் பாரு...' என்றதுமே அடிக்கண்ணால் நானும் பார்த்தேன். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவது தெரிந்தது. அவர், எங்களை நெருங்கும் போது இரண்டு போலீஸ்காரர்களும் தம் பேச்சை, "டக்'கென நிறுத்தி, "அட்டென்ஷன்'ல் நின்று, "குட்மார்னிங் சார்!' என்றனர்.
சிரிப்புத்தான் வந்தது எனக்கு. அப்படியே நகர்ந்து, வேறு இரண்டு போலீஸ்காரர்கள் பேசுவதை கேட்டேன்...
"நாசமாப் போக... லீவு, "சாங்ஷன்' பண்ண, 50 ரூபா கேக்குறான். அழுது தொலைச்சிட்டேன். என்ன செய்யுறது... அவசரமா ஊருக்குப் போகணும்... அம்மாவுக்கு ரொம்ப முடியலியாம்... போன் வந்தது...' என்றார் ஒரு போலீஸ்காரர்.
உடன் வந்த போலீஸ்காரர்களுக்கு பயணப்படி வாங்கிக் கொடுக்காத உயர் அதிகாரிகளும், லீவு, "சாங்ஷன்' செய்ய லஞ்சம் வாங்கும் போலீஸ் அலுவலர்களும் இருக்கும் போது, அவர்களுக்கு கீழ் உள்ளவர்களின் செய்கையை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
இன்னும் இரு போலீசார் அருகே சென்று காதைக் கொடுத்தேன்:
"அந்த ஏரியாவுலே, கள்ளச் சாராயம்... பிக்பாக்கெட், பிராத்தல் எல்லாத்திலேயும் கில்லாடிப்பா அவன்... அவனுக்கு பாராட்டு விழாவாம்... அவன் ஏதோ நன்கொடை கொடுக்கிறானாம்... அதற்கு நம்ம அமைச்சர்... (அமைச்சரின் பெயர்) தலைமை தாங்கி, "கொடை வள்ளல்'ன்னு அவனைப் பாராட்டி பேசுகிறார்... என்ன சொல்றது... நம்மை எப்படி மதிப்பான் அந்த கேடி...' என்றார்.
"எங்க ஏரியாவுலே, இந்த பசங்களோட அட்டகாசத்தை வேரறுத்து விட்டார் புது இன்ஸ்பெக்டர்... (இன்ஸ்பெக்டரின் பெயர்) பதவி ஏத்து ஒரு வாரத்திலே, எல்லா ரவுடிகளையும் வரவழைச்சு, "நான் இந்த ஸ்டேஷன்ல இருக்கிற வரை, வாலச் சுருட்டிக்கிட்டு இருக்கணும்...' என மிரட்டி வைத்திருக்கிறார்... அதுலே ஒரு ரவுடி கட்சிக்காரன்... திமிரா பேசினான்... "நல்ல விதமா சொல்றேன்... கேக்காம வேலையைக் காட்டுனே, அடிச்சு ரயில்வே தண்டவாளத்துலே தூக்கி வீசிருவேன்... ஜாக்கிரதை! மேக்சிமம் என்ன செஞ்சிரப் போறாங்க, உங்க கட்சிக்காரங்க... எனக்கு, "டிரான்ஸ்பர்' போடு வாங்க... ஆனா, உனக்கு உயிர் இருக்காது!' என மிரட்டிய பிறகு ரவுடிகளின் அட்டகாசம் சுத்தமா இல்லே!' என்றார்.
— போலீஸ் துறையின் வெவ்வேறு முகங்களை அன்று காண முடிந்தது.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எப்படியாவது அமெரிக்க முதலாளித்துவ ஆளுமைக்கு வால் பிடிப்பதுதான் உங்க வேலை. அப்படியே சந்தடி சாக்கில் தீவிரவாதி என்று சொல்லி இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற மீடியாக்களின் ( யூத, கிறிஸ்தவம் மீடியாக்களிடம் பெற்ற கைக்கூலி மாறாக ) திரிபுகளை அப்படியே மக்கள் மனதில் பசுமையாக வைத்திருப்பதை விரும்புகிறது இந்த கட்டுரை.
//பின்லேடனின் சூழ்ச்சியால் தான் அங்கு பெரும் போர் துவங்கி நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்தனர் என்று கூறுவதுண்டு.
பின்லேடனை வெளியேற்றினாலும் அமெரிக்கா தங்களது நீண்ட கால திட்டப்படி ஆப்கனை தாக்க திட்டம் வைத்திருந்தது. சும்மா பேருக்கு தான் பின்லேடனை வெளியேற்ற வேண்டும் என்று சொன்னது.
காவல் அதிகாரிகள் லஞ்சம் உண்மைதான்.அதன் நதி மூலம் ரிஷி மூலம் என்ன?நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் தான்.தில்லியில் ஒரு கற்பழிப்பு.தில்லி மாநகரமே குலுங்குகிறது மாணவிகளின் போராத்தால். இங்கு நிலைமை என்ன .தினமும் கற்பழிப்பு தான். யாரும் கண்டு கொள்வதில்லை.தில்லி சம்பவத்திற்கு ஊடகங்களின் பங்களிப்பு அதிகம்.இங்கு கட்சி சாயம் கொண்ட ஊடகங்கள்.என்ன செய்ய?மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும்.தனி மனித துதி பாடுதல் அறவே ஒழிய வேண்டும். செய்வோமா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.